Monday 30 July 2012

இ‌ந்‌திய நாக‌ரிக‌த்‌தின் அடி‌த்தள‌ம் தமிழ் நாகரிகமே:


கோவை ஞானி என்று அறியப்படும் கி.பழனிச்சாமி தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் தீவிர சிந்தனையாளராகவும், கோட்பாட்டாளராகவும், திறனாய்வாளராகவும் இயங்கி வருபவர்.

தமிழின் புதிய இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர். தமிழ் நிலத்திற்கேற்ற தமிழ் மார்க்சியம் என்ற சிறப்பைச் செய்தவர் என ஆய்வாளர்களால் மொழியப்படுபவர். நுட்பமான இலக்கிய உணர்வும், பேரிலக்கியங்களைத் திறந்த மனதுடன் அணுகும் பண்பும் கொண்டவர். ‘நிகழ்’ என்ற சிற்றிதழை தமிழில் புதிய இலக்கியத்திற்கான களமாக பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். இதுவரை 24 திறனாய்வு நூல்களையும் 12 தொகுப்பு நூல்களையும் 4 கட்டுரைத் தொகுதிகளையும் 2 கவிதை நூல்களையும் எழுதியிருக்கிறார்.

இவருடைய நீண்ட கால தமிழ்ப் பணிக்காக விளக்கு விருது, தமிழ் தேசியச் செம்மல் விருது, தமிழ் தேசிய திறனாய்வு விருது, பாரதி விருது ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன. இவரின் வாழ்நாள் இலக்கியப் பணிக்காக கனடாவில் இருந்து செயல்படும் தமிழிலக்கியத் தோட்டம் இயல் விருதை வழங்கிச் சிறப்பித்தது.

தமிழக அரசு நடத்திய செம்மொழி மாநாடு குறித்த சர்ச்சை பரவலாக இருந்த நேரத்தில், அதனை சாதமாகப் பார்த்து, செம்மொழி மாநாட்டில் எதிர்பார்பது என்ன? என்ற தலைப்பில் கோவையில் ஒரு கருத்தரங்கை நடத்தி, தமிழ் மொழிக்கு இன்றைய நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை பல ஆய்வாளர்களிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று அதனை தொகுத்து வெளியிட்டார்.

செம்மொழி மாநாடு நடந்து முடிந்துவிட்டது. அத்தோடு தமிழைப் பற்றிய பேச்சும் நின்றுபோய்விட்டது என்று கருதக்கூடிய சூழலில், செம்மொழி மாநாடு குறித்தும், அதனால் தமிழிற்கு ஏதாவது பயன் ஏற்பட்டதா என்பது குறித்தும் தமிழ்.வெப்துனியா.காம் தமிழறிஞர் கோவை ஞானியை நேர்கண்டது.

தமிழ்.வெப்துனியா.காம் இணையத்தளத்தின் ஆசிரியர் கா.அய்யநாதன், கோவை ஞானியை அவரது இல்லத்தில் அக்டோபர் 24ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சந்தித்துச் செய்த நேர்காணல் இது.

கோயம்புத்தூரில் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டிற்கு முன்னால், இந்தச் செம்மொழி மாநாட்டில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறி ஜூன் மாதம் 13ஆம் தேதி கோவை அண்ணாமலை மன்றத்தில் நீங்கள் ஒரு இலக்கியக் கருத்தரங்கை நடத்தினீர்கள். அந்தக் கருத்தரங்கில் தமிழ் மலர் 2010 வெளியிடப்பட்டது. அந்த மாநாட்டில், தாங்கள் நடத்திவரும் தமிழ் நேயம் இதழின் சார்பாக 'செம்மொழி மாநாட்டில் நாம் எதிர்பார்ப்பது என்ன?' என்கின்ற ஒரு அறிக்கையை புத்தமாக வெளியிட்டிருந்தீர்கள். இப்பொழுது மாநாடு முடிந்து அ‌தி‌ல் பல்வேறுபட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அந்த மாநாட்டைப் பொறுத்தவரை உங்களுடைய எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு நிறைவேறியுள்ளது?

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் கோவையில் பிரமாண்டமான அளவிற்கு பெரும் செலவில், 600 கோடி என்று சொல்கிறார்கள், சிலர் 1,000 கோடி என்று சொல்கிறார்கள், 300 கோடி என்று சுருக்கமாகச் சொல்வதும் உண்டு. இந்த அளவிற்கு பெரிய செலவில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்களோடு பொதுமக்களுக்கு மிகச் சிறந்த மிகப் பெரிய அளவில் கண்காட்சி, ஊர்வலம் முதலியவற்றோடு அந்த மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. கலைஞர் நடத்தக்கூடிய மாநாடு என்பது இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டங்களோடு நடைபெறும் என்பதில் நமக்கும் ஒன்றும் வியப்பில்லை.

அதேபோல இவ்வளவு பெரும் தொகை செலவழிக்கப்பட்டதும் சற்ற அதிர்ச்சியாக இருந்தது. குறைந்த அளவிற்கு ரூ.300 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கூட, இந்த ரூ.300 கோடி ரூபாயை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செலவழித்திருக்க முடியும். பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறை என்று சொல்லப்பட்டிருக்கிறது. தஞ்சைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இவைகளெல்லாம் மிகச் சிறப்பான முறையில் தமிழியல் ஆய்விற்காகவே தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகள். இவைகளுக்கு பொருளாதார நெருக்கடி இருப்பதாக ஓயாமல் சொல்லப்படுகிறது. இந்தத் தொகையில் ரூ.10 கோடி, 20 கோடி அல்லது 50 கோடி என்று ஒதுக்கியிருந்தாலும் கூட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமோ, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமோ சிறப்பான முறையில் இன்னும் தங்களுடைய செயல்களை வரையறை செய்துகொண்டு திறம்பட செயல்பட முடியும்.


ஆனால் அடிப்படையில் இங்கிருக்கக் கூடிய மிகப்பெரிய கோளாறு என்னவென்று சொன்னால், தமிழியல் ஆய்வு என்று சொல்லி ஒரு திட்டத்தை வகுப்பதற்கும், அதை நேர்மையான முறையில் உரிய முறையில் செயல்படுத்துவதற்கு தகுதியான அறிஞர் பெருமக்கள் தொகை இன்று மிக மிகக் குறைந்துவிட்டது. செம்மொழி நிறுவனத்தோடு செயல்படக்கூடிய இராமசாமி அவர்களோடு நான் பேசுகிறபோது, பலமுறை இதைச் சொல்லியிருக்கிறார். யாரும் இல்லை என்கிறார் அவர். நான் ஒரு 10 தமிழ் அறிஞர்கள் பெயரைச் சொல்லிக் கூட அவரைக் கேட்டேன். அதற்கு அவர் சொல்கிறார், நீங்கள் சொல்பவர்கள் எல்லாம் தமிழ் அறிஞர்கள் என்பதில் எனக்கு மறுப்பில்லை. ஆனால், ஒரு திட்டத்தை எடுத்துக்கொண்டு அதையே முழு மூச்சான முறையில் அதில் ஈடுபட்டு செய்யக்கூடியவர்கள் என்று இவர்களில் எவரும் இல்லை என்று சொல்கிறார். 

இரண்டொருவர் விதிவிலக்காக இருக்கலாம். அந்த இரண்டொருவரை வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய தமிழியல் ஆய்வு கொண்டு செல்வது என்பது மிக மிகக் கடினம், முடியாது. அப்ப நீங்கள் அரசு தரப்பில் என்ன பெரிய குறைபாடுகளைச் சொன்னாலும் கூட, உலக அளவிலான செம்மொழி என்பதைப் பற்றி மெய்ப்பிப்பதற்கோ அல்லது ஆய்வு செய்வதற்கோ, தற்கால தமிழனுடைய நிலையை உயர்த்துவதற்கான ஆய்வுகளைச் செய்வதற்கோ தகுதியானவர்கள் என்று சொல்வதற்கு நமக்குள் பெரும்பாலும் இல்லை. கடந்த 30 ஆண்டுகளுக்கு இடையில் தமிழ் அறிஞர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் தங்களுடைய ஆய்வுத் திறனை பெருமளவு குறைத்துக்கொண்டார்கள்.

இன்று பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறைகளில் செயல்படக் கூடிய பேராசிரியர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம், பெரும்பாலானவர்கள் தமிழியல் ஆய்விற்கான தகுதியை தங்களுக்குள் வளர்த்துக்கொள்ளவே இல்லை. வா.சொ.மாணிக்கம் என்று சொல்கிறோம், தெ.பொ.மீ. என்று சொல்கிறோம். இன்னும் பல முன்னாள் தமிழ் அறிஞர்களைப் பற்றிப் பேசுகிறோம். அவ‌ர்கள்தான் தமிழியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக முன் மாதிரியாக இன்று நமக்கு இருக்கிறார்கள். அவர்களைப் போல அவர்களுடைய நெறியில் தமிழியல் ஆய்வை மேம்பட்டு செலுத்துவதற்கான தகுதியோடு இன்று தமிழ்ப் பேராசிரியர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் பலர் இல்லை.

அரிதாக அங்கொருவர், இங்கொருவர் என்று இருக்கலாம். ஆனால், அவர்களையெல்லாம் இந்த செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்குள் கொண்டுவரவே இல்லை. அவரவர்கள் ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் இருக்கிறார்கள். சிலர் வயதான நிலையிலும் செய்துகொண்டு இருக்கிறார்கள். இப்படியிருக்க, இந்த தமிழியல் ஆய்விற்கு தகுதியுடையவர்கள் என்று சொல்லித் தெறிவு செய்து, அவர்களை பல்லாண்டுகள் அந்தத் துறையில் ஈடுபடுத்தி வளர்ப்பதற்கான முயற்சி என்பதற்கான திட்டம் என்பது நமக்கு வேண்டும். அப்படியொரு திட்டம் தற்பொழுது இல்லை. உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டில் இதுபற்றி பேசப்பட்டதாகவும் இல்லை. இது ஒன்று.

இரண்டாவது, இந்தச் சொம்மொழி மாநாட்டில் உண்மையிலேயே கடை‌சியில் கலைஞர் அறிவித்தபடி, கணினி பற்றி பலவற்றை சொன்னார் அவர். பெரிய, மிகச் சிறந்த கண்காட்சியே நடத்தப்பட்டது. கணினி துறையில் எப்படியே 10, 20 ஆண்டுகளாக தமிழ் அறிஞர்களில் இளைஞர்கள் ஒரு சிலர் பெரிய அளவில் ஈடுபட்டு மிகப்பெரிய காரியங்களை செய்து வருகிறார்கள். அரசு ஆதரவு இல்லாத நிலையிலும், அரசு இந்த கணினி வளர்ச்சித் துறையில் ஈடுபட்ட நிலையிலும் அவர்களுடைய செயல்களெல்லாம் மிக வியப்பூட்டும் வகையில் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தீர்களென்றால், கணினி என்று சொல்லக்கூடியது, கணினித் தமிழ் என்று சொல்லக்கூடியது மிகச் சிறப்பான வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை அரசு அறிந்திருக்கிறது. அதற்கான முறையில் சில உதவிகள், திட்டங்களையெல்லாம் அரசு வைத்திருப்பது, மாநாட்டில் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டது பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. உண்மைதான்.

மூன்றாவது, உலகத் தமிழ்ச் செம்மொழி ஆய்விற்கு ஒரு தமிழ்ச் சங்கம் மதுரையில் அமைப்பதாக கலைஞர் பேசியிருக்கிறார். நிதி ஒதுக்கிடுவது முதலியற்றையெல்லாம் பற்றி பேசியிருக்கிறார். அதற்கான தொடக்க முயற்சிகள் இதுவரை செய்யப்படவில்லை. ஏற்கனவே எம்.ஜி.ஆர். காலத்தில் அறிவிக்கப்பட்ட இந்த உலகத் தமிழ்ச் சங்கம் எப்படி செயல்படாமல் இருந்ததோ, அதைப்போல இந்தச் தமிழ்ச் சங்கமும் செயல்படாமல் இருந்துவிட வேண்டாம். அதற்கான திட்டம் இல்லாத நிலையில் அதைப்பற்றி பெரிதாகப் பேசுவதற்கு இல்லை.

இன்னொன்று, உண்மையில் பார்த்தீர்களென்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் தமிழ் இப்பொழுது நுழைந்திருக்கிறது. பெரிய ஆச்சரியம் என்னவென்று சொன்னால், இந்த மாதிரி மருத்துவத் துறையிலும், பொறியியல் துறையிலும் தமிழை நுழைக்க முடியும், அதற்கான தமிழ்க் கலைச்சொற்கள் ஏராளமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்திலும், தஞ்சைப் பல்கலைக்கழகத்திலும் பொறியியல் நூல்கள், மருத்துவத் துறை சம்பந்தப்பட்ட பல நூல்களையெல்லாம் திறம்பட எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நாம் பொறியியல் துறையிலும், மருத்துவத் துறையிலும் தமிழைத் தொடங்கிவிட முடியும் என்று சொல்லி குறைந்த அளவிற்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிஞர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் அமைச்சர்களுக்கோ, முதல்வருக்கோ தெரியாத செய்திகள் அல்ல. ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேலாகவே, சொல்லப்போனால் 20 ஆண்டுகளுக்கிடையில் இதை புகுத்தியிருக்க முடியும். ஆனால், ஆங்கிலத்திற்கு பெருமளவு ஆதரவு, தமிழுக்கு மிகக் குறைந்த அளவிற்கு ஆதரவு ஏதோ அரசியல் களத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய முறையில் தமிழைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டிருந்தார்களேயொழிய ஆங்கிலத்திற்குத்தான் இன்று வரையிலும் பள்ளி வட்டாரங்களில் முதன்மையான மரியாதை கொடுக்கிறார்கள். மெட்ரிக் பள்ளிகளை இவர்கள் கைவிட முடியவே முடியாது, கைவிட மாட்டார்கள். அதில் பெரிய முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது. அதில் பல அமைச்சர்கள் முதலியவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

அந்த மெட்ரிக் பள்ளிகளெல்லாம் ஆங்கிலத்தை வளர்க்கிற நோக்கத்தோடுகள் பெரிய அளவிற்கு மிகவும் அதிகாரத் தோரணையோடு செயல்பட்டு வருகின்றன. இந்த மெட்ரிக் பள்ளிகளை கட்டுப்படுத்தக்கூடிய திறனோ, தேவை என்ற உணர்வோ அரசிற்கு அறவே இல்லை. அதனால்தான் கடைசியாகக் கூட கோவிந்தராஜ் ஆணையம் அரசுடன் முரண்பட்டு நீதிபதி கோவிந்தராஜ் தன்னுடைய பதவியில் இருந்து விலகுகிறார். அரசுடன் ஏன் முரண்பட்டார் என்று சொன்னால், மெட்ரிக் பள்ளிகளை அரசு கட்டுப்படுத்த விரும்பவில்லை என்கிற உணர்வு அவருக்கு ஏற்பட்டிருந்தாக வேண்டும். அதனால்தான் அவர் விலகுகிறார். இதுபோன்று மெட்ரிக் பள்ளிகளை வைத்துக்கொண்டு நீங்கள் தமிழைக் காப்பாற்ற முடியுமா என்று சொன்னால் அது முடியாது. இதுவொரு பக்கம்.

அடிப்படையில் நான் சொல்வது என்னவென்று சொன்னால் இன்று வரை மைய அரசோ, இந்தியாவின் பல்கலைக்கழகங்களில் இருக்கக் கூடிய அறிஞர் பெருமக்களோ சமஸ்கிருதம்தான் இந்தியாவினுடைய மூல மொழி, முதல் மொழி, இந்திய மொழிகளுக்கெல்லாம் சமஸ்கிருதம்தான் தாய்மொழி என்ற நம்பிக்கைகளை இன்றும் அவர்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மையல்ல, இந்திய நாகரிகத்தினுடைய அடித்தளம் தமிழ் நாகரிகம்தான்.

அறிஞர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் ஏற்கனவே சிலவற்றை சொல்லியிருக்கிறார்கள். இந்திய நாகரிகத்தினுடைய மேலடுக்கு ஆரிய நாகரிகம் என்றே வைத்துக்கொண்டாலும் கூட, அடித்தளம் முழுவதும் தமிழ் நாகரிகம் அல்லது திராவிடர் நாகரிகம் என்பதை அறிஞர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்?

இந்திய நாகரிகத்தின் அடிப்படையில் என்றால் வேளாண்மையைச் சொல்ல வேண்டும், நீர்ப் பாசனங்களைச் சொல்ல வேண்டும், கால்நடைகளைப் பற்றி சொல்ல வேண்டும், மருத்துவம் பற்றி சொல்ல வேண்டும். இசை பற்றி, தர்க்கம் பற்றி, மெய்யியல் பற்றி, அறிவியல் பற்றி சொல்ல வேண்டும். இந்தியாவில் இருக்கக் கூடிய வேளாண்மையில் தொடங்கி அறிவியல் வரை அனைத்துத் தளங்களிலும் விளங்கியது தமிழ் நாகரிகம் மட்டும்தான். இவற்றில் ஆரியத்தினுடைய பங்களிப்பு என்பது எள்ளளவும் கிடையாது. வேளாண்மையிலோ, கட்டடக் கலையிலோ, சிற்பத்திலோ, இசையிலோ, மருத்துவத்திலோ, கணிதத்திலோ, தர்க்கத்திலோ தமிழினுடைய பங்களிப்புதான் பெரும் பகுதி உண்டோயொழிய ஆரியத்தின் பங்களிப்பு என்பது பெயரளவிற்கு அங்கொன்று, இங்கொன்று இருக்கலாம் அவ்வளவுதான்.

ஆனால் இந்திய வரலாறு பற்றி ஆய்வு என்று சொன்னவர்களெல்லாம் என்ன சொல்லித் தொலைத்தார்கள் என்றால், எல்லாவற்றையும் சமஸ்கிருதத்திற்கு கொண்டு போய் சேர்த்தார்கள். சமஸ்கிருதம்தான் இந்தியாவினுடைய நாகரிகத்தினுடைய ஆதாரம் என்று சொன்னார்கள். ஆனால், அது முற்றிலும் பொய் என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் சொல்வதற்கு இல்லை. அத்தனையும் தமிழ் நாகரித்தோடு தொடர்புடையனதான். வட இந்தியாவில் ஹிந்தி போன்று ஏராளமான மொழிகள் இருக்கின்றன. அந்த மொழிகளைப் பார்த்தீர்களென்றால் - பல அறிஞர்கள் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள் - சமஸ்கிருதச் சொற்கள் அங்கும் இங்கும் நிறைந்து கிடந்தாலும் கூட, அந்த வட இந்திய மொழிகள் அத்தனையிலும் இருக்கிற வாக்கிய அமைப்பு என்பது தமிழினுடைய வாக்கிய அமைப்புதான். 

தமிழ் வாக்கியத்தில் நம்முடைய மக்கள், 'காலையில் எழுந்து டிஃபன் பண்ணி, ஃப்ரண்டை சந்தித்துத் திரும்பினேன்' என்று சொன்னால் அந்த வாக்கியம் முழுவதும் தமிழ், இடையில் ஆங்கிலச் சொற்கள். அதேபோலத்தான் வட இந்திய மொழிகள் முழுவதிலும் வாக்கிய அமைப்புகள் உள்ளன. வாக்கிய அமைப்பு என்பது ஒரு மொழியில் எவ்வளவு வலுவான அம்சம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. வாக்கியம் முழுவதும் தமிழாக இருக்கிறது. இடையில் ஆங்காங்கு சமஸ்கிருதம் ஏராளமாகச் சேர்ந்திருக்கிறது. இந்த வகையில் பார்த்தீர்களென்றால் இன்று இந்தியாவில் தமிழுக்கு மரியாதை இல்லை, தமிழனுக்கு மரியாதை இல்லை.

ஆனால், செம்மொழி ஆய்வு என்கிற முறையில் நீங்கள் இந்த ஆதாரங்களைத் தேடித் தொகுத்து, இதில் தமிழஞர்கள் பெரிய அளவில் ஈடுபடுத்த முடியும் என்று சொன்னால், இந்திய நாகரிகத்தின் அடித்தளம் தமிழ் நாகரிகம் என்பதை மெய்ப்பிக்க முடியும். மா.பி.கந்தையா சொல்லிக் கொண்டிருந்தார், க.ப.வே. சொல்லிக் கொண்டிருந்தார். இன்னும் பல அறிஞர்கள் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை மெய்ப்பிக்க முடியுமானால், இந்திய அரசியலில், இந்தியாவினுடையபொருளியலில் தமிழனுக்கான இடம் கிடைக்கும்.

இன்று மைய அரசிற்கு அடி வருடியாக, அடிமையாகச் செயல்படக் கூடியவன்தான் மைய அரசினுடைய மரியாதைக்குரியவன். மைய அரசில் செல்வாக்கு பெறவேண்டும் என்று சொன்னால், மைய அரசு, சமஸ்கிருதம், வட இந்திய பெருமைகளையெல்லாம் ஒப்புக்கொண்டவன்தான் இருக்க முடியும்.

சொல்லப்போனால், தமிழ்நாட்டில் பெரியார் இருக்கிறார், திராவிட அரசியல் இருக்கிறது. சமஸ்கிருத மறுப்பு இருக்கிறது. இதனை வட இந்தியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இதெல்லாம் எவ்வளவு பெரிய உண்மைகள் என்று சொன்னாலும் கூட வடக்கில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

இந்திய அரசியலில் தமிழனுக்குரிய மரியாதையை, செல்வாக்கை, அழுத்தத்தைப் பெறுவது என்று சொன்னால், தமிழைச் செம்மொழி என்று ஏராளமான ஆதாரங்களோடு மெய்ப்பிப்பதில் அடங்கியிருக்கிறது என்கிற முறையில்தான் தமிழைச் செம்மொழி என்று அறிவித்த உடனேயே எங்களைப் போன்றவர்கள் பெரிதும் விரும்பினார்கள். ஆனால், அதற்கான திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா என்று சொன்னால் எதுவம் இல்லை. இந்தத் திட்டங்களை நீங்கள் முன்வைக்கும் போது, இன்றைக்கு நடக்கும் இந்திய அரசியலிற்கு, சமஸ்கிருத மொழிக்கு, ஆரிய ஆதிக்கத்திற்கு, வருணாச்சரமத்திற்கு எதிராக நீங்கள் செயல்படுகின்றீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் என்று அர்த்தம். இதை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா இல்லையா என்பது மிகப்பெரிய ஒரு கேள்வி.

இன்னொன்று என்னவென்று சொன்னால், திராவிட மொழிகள் என்று சொல்லப்பட்டவை மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலியவைகளெல்லாம், தமிழைச் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே கன்னட மொழிக்காரர்களும், தெலுங்கு மொழிக்காரர்களும் ஆத்திரப்பட்டார்கள், எங்களுக்கும் செம்மொழி தகுதி உண்டு, அறிவிக்க வேண்டும் என்று. ஆகவே செம்மொழியினுடைய காலவரையறை 1,000 ஆண்டு என்று நிர்ணயிக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது.

உலக அளவில் செம்மொழி என்று சீன மொழியோ, கிரேக்க மொழியோ ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று சொன்னால், அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது. அரசு அதிகாரம், அரசு அனுமதி என்பது தேவையே கிடையாது. நம்ம இந்தியாவில் மட்டும்தான் மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஒரு கோரிக்கையைக் கிளப்பி கடைசியில் அதனை ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறோம். இதுவொரு பிறழ்வு என்று வைத்துக்கொண்டாலும் கூட, அந்த வரையறையை நாம் மீறவேண்டியதில்லை.

கன்னட மொழியோ, தெலுங்கு மொழியோ தங்களுக்கும் செம்மொழி தகுதி உண்டு என்று சொல்லும்போது, இல்லையென்பது உண்மையென்றாலும் கூட, உண்டு என்று ஏற்றுக்கொண்டாலும் கூட, அவர்கள் செய்யக்கூடிய ஆய்வு என்னவாக இருக்க வேண்டும்? பேராசிரியல் நாச்சிமுத்து, தற்பொழுது டெல்லியில் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் பணியாற்றக் கூடியவர். அவர் மிகவும் தெளிவாகச் சொல்கிறார். தமிழுக்கு செம்மொழி தகுதி என்பது கன்னட மொழி பேசுகிறவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆந்திர மொழி பேசுகிறவர்கள், மலையாள மொழிப் பேசுகிறவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


ஏனென்று சொன்னால், செம்மொழி என்பது தமிழனுக்கு மட்டும் உரியது இல்லை. உங்களுக்கும் சேர்த்துதான் இது செம்மொழி. ராமசாமி அவர்கள் கூட ஒருமுறை சொன்னார், கன்னட அறிஞர்களைப் பார்த்துச் சொல்கிறார், கன்னட மொழி ஆய்வு என்று செய்யத் தொடங்கினீர்களென்றால் கடைசியல் நீங்கள் தமிழுக்குப் போய்ச் சேருவீர்கள். உண்மையிலேயே மலையாள மொழியோ, கன்னட மொழியோ, தெலுங்கு மொழியோ தம்மைச் செம்மொழி என்று சரியான முறையில் ஆய்வு செய்வார்களேயானால் அவர்கள் தமிழுக்கு வந்துச் சேருவார்கள். அதனா‌ல், இந்த வகையான ஆய்விற்கு நாம் ஊக்கமளிக்க வேண்டும்.

இன்னொன்றைச் சொல்லி எனது கருத்தை முடித்துக்கொள்ள விரும்புகிறேன். அது, தமிழ் மொழி ஆய்வு என்பது தமிழனுக்கு விடுதலை தரவேண்டும் என்று நான் சொன்னேன். தமிழியல் ஆய்வு என்பது மக்களோடு சம்பந்தப்பட்டது. காவிரி, வைகை, தாமிரபரணியோடு, இங்கிருக்கக்கூடிய நீரோடு, நிலத்தோடு, காடுகளோடு, இங்கிருக்கக் கூடிய வாழ்க்கையோடு, இங்கிருக்கக் கூடிய மக்கள் வாழ்க்கை மேம்பாட்டோடு சம்பந்தப்பட்டது.

அப்படியிருக்கும்போது, இங்கு காவிரி இல்லை, வைகை இல்லை, தாமிரபரணி இல்லை என்று சொன்னால், இங்கு தமிழனுக்கு என்ன வாழ்வு? தமிழ் மொழிக்குதான் என்ன வாழ்வு? அதேபோல, இங்கிருக்கக் கூடிய நீர்நிலைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் வந்து உட்கார்ந்துகொண்டு, அவர்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தால் தமிழனுடைய வாழ்வு, தமிழ் மக்களுடைய வாழ்வு என்ன ஆகும்?

செம்மொழி ஆய்வு என்பது சொல்லக்கூடிய இந்தத் திசையில் போய் கடைசியில், தமிழ்நாடு தமிழனுக்குரிய நாடாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு அரசியலில் தமிழனுக்குத்தான் செல்வாக்கு, தமிழக பொருளியலை நிர்ணயிக்கக் கூடியவன் தமிழனாகத்தான் இருக்க வேண்டும், தமிழ் மக்களாகத்தான் இருக்க வேண்டும். தமிழனுடைய நீர்நிலைகள் மற்றும் இயற்கைச் செல்வங்களையெல்லாம் அந்நியருக்கு நாம் விட்டுக்கொடுக்க முடியாது.

இதெல்லாம் கூட ஆய்வினுடைய நோக்காக இருக்க வேண்டும். தமிழறிஞர்கள் என்று சொல்லக்கூடியவர்களுக்கு இந்த அக்கறையும் வேண்டும். ஏதோ மொழி ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி என்பது மக்களிடத்தில் இருந்து விடுபட்டு, நீரோடு நிலத்தோடு விடுபட்டு, உழவர்களோடு, நெசவாளிகளோடு, கலைஞர்களோடு, சிற்பத்தோடு, சமயத்தோடு விடுபட்டுச் செய்யக் கூடிய ஆய்வாக இருக்கவே முடியாது. இவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஆய்வுதான் தமிழனுக்கான விடுதலையைப் பற்றிய ஆய்வாகவும் இருக்க முடியும். இதுதான் என்னுடைய பொதுவான ஒரு கருத்து.

No comments:

Post a Comment