Monday 30 April 2012

சேது சமுத்திர திட்டம்

சேது சமுத்திரம் குறித்த உணர்ச்சி மயமான சூழ்நிலை அடங்கி இருக்கும் இந்த நேரத்திலே, இது குறித்த பொருளாதார மற்றும் சுற்றுப்புறச்சூழ்நிலைகளை மட்டும் விவாதிப்பது பொருத்தமாக இருக்கும்.




சேது சமுத்திர திட்டம் என்றால் என்ன ?

இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு இடையே நேரடியான கப்பல் போக்குவரத்தினை இந்த திட்டம் ஏற்படுத்தி கொடுக்க இருக்கிறது. தற்பொழுது இலங்கையைச் சுற்றி இந்தியாவின் கிழக்கு/மேற்கு பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய கப்பல்கள் சேது சமுத்திரத்தினை பயன்படுத்தும். இந்த திட்டத்தால் சுமாராக 424 nautical miles (780 Km) பயண தூரமும் 30 மணி நேர பயண நேரமும் குறையும்.

இந்த திட்டத்தின் பயன் என்ன ?

முதலில் பொருளாதார அடிப்படையை மட்டும் பார்ப்போம்...

Transhipment என்பது உலக வர்த்தகத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களாகட்டும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களாகட்டும் அது நேரடியாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதில்லை. Mainline Cargo Vessels என்று சொல்லப்படுகிற பெரிய கப்பல்கள் மூலமாக இந்த பொருட்கள் சில பெரிய துறைமுகங்கள் - Transshipment Port வழியாகவே நடைபெறும்.

உலகின் மிக முக்கியமான Transshipment துறைமுகங்களில் கொழும்பு முக்கிய இடம் வகிக்கிறது. கொழும்பு துறைமுகத்தில் Mainline Cargo Vessels என்று சொல்லப்படுகிற பெரிய கப்பல்கள் நுழைவதற்கான வசதி உள்ளது. ஆனால் பல இந்திய துறைமுகங்களில் அந்த வசதி இல்லை. அதனால் இந்தியாவிற்கு வரும் பொருட்கள் அனைத்தும் கொழும்பிற்கு வந்தடையும். கொழும்பு துறைமுகத்தில் இருந்து பல சிறிய கப்பல்கள் மூலமாக இந்த பொருட்கள் இந்தியாவில் உள்ள துறைமுகங்களுக்கு வந்து சேரும். அது போல இந்திய துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து சிறிய கப்பல்கள் மூலமாக கொழும்பு வந்தடையும். அங்கிருந்து பெரிய கப்பல்கள் மூலமாக பிற நாடுகளுக்கு சென்றடையும்.

இவ்வாறு இந்தியாவின் வர்த்தகத்தில் சுமார் 70% கொழும்பு துறைமுகம் வழியாகவே நடைபெறுகிறது. எஞ்சிய 30% சிங்கப்பூர் மற்றும் பிற துறைமுகங்கள் முலமாக நடைபெறுகிறது. கொழும்பு துறைமுகத்தின் மொத்த வருவாயில் 40% இந்தியா மூலமாக கிடைக்கிறது.

ஏன் இந்தியாவிடம் Transshipment துறைமுகம் இல்லை ?

இந்தியாவின் துறைமுகங்கள் எதுவுமே உலக கடல் போக்குவரத்து பாதையில் இல்லை. கொழும்பு, சிங்கப்பூர் போன்றவை கடல் போக்குவரத்து பாதையில் இருக்கின்றன. இது தவிர இந்திய துறைமுகங்கள் ஆழம் குறைவானவை. இந்திய துறைமுகங்கள் சர்வதேச தரத்தில் இல்லாதது முக்கிய காரணம். இந் நிலையிலே தான் இந்தியாவின் பொருட்களை கையாள கொழும்பு மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களையே நம்பி உள்ள நிலை உள்ளது. இந்தியாவில் ஒரு துறைமுகம் கூட Transshipment துறைமுகமாக இல்லாதது பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் இந்தியாவிற்கு உகந்தது அல்ல என உணர்ந்த மைய அரசு இதனை மாற்ற சில முயற்சிகளை கடந்த ஆண்டு முதல் எடுக்க தொடங்கியுள்ளது. கொச்சிக்கு அருகே இருக்கும் வல்லர்படம் Transshipment துறைமுகமாக மாற்றப்படும் என கேரள அரசியல்வாதிகளை திருப்தி படுத்த மைய அரசு கூறியுள்ளது

தூத்துக்குடி துறைமுகம் கொழும்பு போல வளருமா ?

தூத்துக்குடி துறைமுகத்தில் கூட இன்னும் பல உள்கட்டமைப்பு வேலைகளை செய்தால் தான் Transhipment port போல மாற்றம் செய்ய முடியும். தற்போதைய நிலையில் இது சாத்தியமாகி விடாது. அது தவிர தூத்துக்குடி துறைமுகம் கடல் பாதையில் இல்லை என்பது தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பின்னடைவே.

ஆனால் கொழும்பு துறைமுகம் அளவுக்கு சர்வதேச தரத்திற்கு தூத்துக்குடி துறைமுகத்தை மாற்ற மைய அரசு நடவடிக்கை மேற்கொண்டால் தூத்துக்குடி துறைமுகம் முக்கிய துறைமுகமாக மாற்றம் பெறும்

சேது சமுத்திர திட்டம் இந் நிலையை மாற்றுமா ?

மாற்றும் என்கிறது இந்திய அரசு

எப்படி ?

தூத்துக்குடி துறைமுகம் மும்பை, சென்னைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது சர்வதேச துறைமுகம். தற்பொழுது அதிவேகமாக வளர்ந்து வரும் துறைமுகங்களில் தூத்துக்குடியும் ஒன்று.

இந்தியாவில் இருந்து சிறிய கப்பல்கள் மூலமாக கொழும்புவிற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து Mainline Cargo Vessels மூலமாக பிற நாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்கு போக்குவரத்து சேது சமுத்திரம் நடைமுறை படுத்தபட்டால் நேரடியாக தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து பெரிய கப்பல்கள் மூலமாக பிற நாடுகளை சென்றடையும்.

உதாரணமாக கல்கத்தாவில் இருந்து கொழும்புவிற்கு கப்பல் செல்வதற்கு பதிலாக சேது சமுத்திரம் மூலமாக நேரடியாக தூத்துக்குடி வந்தடையும். அங்கிருந்து பெரிய கப்பல்கள் மூலமாக பிற நாடுகளுக்கு சரக்கு சென்றடையும்.

இது தவிர இந்தியாவின் கிழக்கு, மேற்கு பகுதிகளுக்கு இடையே நேரடியான பாதையும் கிடைக்கிறது. இலங்கையை சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

எத்தனை கப்பல்கள் இதனை பயன்படுத்த கூடும் என அரசு தெரிவிக்கிறது ?

முதல் ஆண்டில் சுமாராக 3000 கப்பல்கள் இதனை பயன்படுத்தும். அடுத்த 15 ஆண்டுகளில் இது அதிகரித்து சுமார் 7000 கப்பல்கள் இதனை பயன்படுத்தும் என அரசு கருதுகிறது.

இந்த திட்டத்தால் என்ன நன்மை ?

கொழும்பு உள்ளிட்ட வெளிநாட்டு துறைமுகங்களை நம்பி இருப்பதால் வருடத்திற்கு சுமார் 1000 கோடி Transhipment வகையிலே அந்நியச்செலவாணி இழப்பு இந்தியாவிற்கு ஏற்படுகிறது. சேது சமுத்திர திட்டம் வெற்றியடைந்து தூத்துக்குடி துறைமுகம் Transhipment துறைமுகமாக மாறினால் இந்த 1000 கோடி அந்நியச்செலவாணி இழப்பு பெருமளவில் தவிர்க்கப்படும் என அரசு நம்புகிறது

தூத்துக்குடி துறைமுகம் இந்தியாவின் பொருட்களை கையாள துவங்கும் வாய்ப்பு ஏற்பட்டால் கொழும்பு துறைமுகம் போல தூத்துக்குடியும் முக்கிய துறைமுகமாக வளர்ச்சி பெறும். இதனால் தென்மாவட்டங்களில் வேலை வாய்ப்புகள் பெருகும். பொருளாதார ரீதியாக தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறும். புதிய ஏற்றுமதி சார்ந்த தொழில் வாய்ப்புகள் தென்மாவட்டங்களில் ஏற்படும்.

கேட்க நன்றாக இருக்கிறது. நடைமுறையில் சாத்தியம் ஆகுமா ?

உள்கட்டமைப்பு துறையில் தெளிவான முடிவுகளை எடுக்காமல் அரசியல் ரீதியாக ஒவ்வொரு மாநிலத்தையும் திருப்திபடுத்த மைய அரசு சில முடிவுகளை அறிவித்து கொண்டுள்ளது. கடந்த ஆண்டு கேரளாவின் கொச்சி துறைமுகம் அருகே உள்ள வல்லர்படம் துறைமுகத்தை Transshipment துறைமுகமாக மாற்றப் போவதாக அரசு கூறியது. தூத்துக்குடியா ? வல்லர்படமா என்ற குழப்பம் உள்ளது.

இது தவிர சேது சமுத்திரம் திட்டத்தின் வெற்றி, தூத்துக்குடி துறைமுகத்தை சர்வதேச தரத்திற்கு மாற்றுவது இவை தான் இது நடைமுறைச் சாத்தியமா, வெறும் கனவு மட்டுமா என்பதை தீர்மானிக்கும்.

நல்ல திட்டமாக தானே தெரிகிறது ? பின் ஏன் இதனை பொருளாதார ரீதியாக எதிர்க்கிறார்கள் ?

கப்பல் போக்குவரத்து சேது சமுத்திரம் கடல்பாதையில் நடைபெற்றால் தான் மேலே கூறியவை அனைத்தும் நடைமுறைச் சாத்தியமாகக் கூடிய வாய்ப்பு உள்ளது. சில கடல் போக்குவரத்து வல்லுனர்கள் பெரிய கப்பல்கள் இந்த கடல் பாதையை பயன்படுத்த வாய்ப்பில்லை என நினைக்கிறார்கள்.

தவிரவும் சேது சமுத்திர திட்டம் சுமார் 2500 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படுகிறது. கப்பல்கள் சேது சமுத்திர கடல்பாதையை பயன்படுத்தி, அதற்கு அவர்கள் செலுத்தும் வரி மூலமாக தான் இந்த தொகையை திரும்பப் பெற முடியும். ஆனால் கப்பல்கள் இதனை பயன்படுத்தா விட்டால் லாபம் கிடைக்காது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணம் திரும்ப கிடைக்காது.

ஏன் கப்பல்கள் இதனை பயன்படுத்தாது என இவர்கள் நினைக்கிறார்கள் ?

இதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகிறன

சேது சமுத்திர கடல்பாதையின் ஆழம் 12மீட்டம் மட்டுமே. இந்த கடல் பாதையில் 30,000 டன் கொண்ட கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும். பெரிய கப்பல்கள் செல்ல முடியாது.

சேது சமுத்திரம் கடல் பாதையில் வேகமாக செல்ல முடியாது. மிகக் குறைந்த வேகத்தில் செல்லும் பொழுது இலங்கையைச் சுற்றிச்செல்ல தேவைப்படும் நேரத்திற்கும், இந்த கடல்பாதையில் செல்லும் நேரத்திற்கு பெரிய வித்யாசம் இருக்காது. 30 மணி நேரம் குறையாது. வேண்டுமானால் சில மணி நேரங்கள் மட்டும் குறையும் என இவர்கள் கூறுகிறார்கள்

சேது சமுத்திர கடல் பாதையை பயன்படுத்த சுங்க வரி செலுத்த வேண்டும். சேது சமுத்திர கடல்பாதையில் பயணிக்க அதற்கென உள்ள ஸ்பெஷல் மாலுமிகள் தேவைப்படுவார்கள். அதற்கும் தனியாக கட்டணம் உண்டு. இந்த கட்டணம் இலங்கையை சுற்றி செல்ல தேவைப்படும் எரிபொருளை விட அதிகமாக இருக்கலாம். எனவே கப்பல் நிறுவனங்கள் இலங்கையைச் சுற்றி செல்லவே விரும்புவார்கள்


இதற்கு அரசு கூறும் பதில் என்ன ?

அரசு இது வரை எந்த பதிலும் கூறவில்லை. அரசு இது வரை இந்த கடல்பாதையை பயன்படுத்தும் கட்டணமாக கூட எதையும் நிர்ணயம் செய்யவில்லை.


இவை குறித்த உண்மை நிலை தான் என்ன ?

உண்மை நிலை என எதுவும் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

சில விடயங்கள் மட்டும் உண்மை. தமிழக அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்கு மைய அரசு இணங்கியுள்ளது. இந்த திட்டத்தை அரசு சரியாக ஆராயவில்லை.

இந்திய ஊடகங்கள் ஒரே கோணத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடுகின்றன. இவற்றில் இந்த கடல்வல்லுனர்களின் கருத்துக்களும் அடக்கம்

உண்மை, இந்த இரண்டுக்கும் இடையே எங்கோ ஒளிந்து கிடைக்கிறது

சேது சமுத்திரம் கடல்பகுதியை இன்னும் ஆழப்படுத்தி அதிகளவில் போக்குவரத்தை ஏற்படுத்த முடியுமா ?

கால்வாய் ஆழம் குறித்த பிரச்சனை செயற்கையாக ஏற்படுத்தப்படும் எல்லா கால்வாய்களுக்கும் உள்ளது. சுஸ் கால்வாயின் ஆழம் 16மீட்டர். இதனால் பெரிய கப்பல்கள் இந்த கால்வாயில் செல்ல முடியாது. கால்வாயின் ஆரம்பத்தில் பெரிய கப்பல்கள் சுரக்குகளை இறக்கி விடும். பிறகு சிறிய கப்பல்கள் மூலமாக சரக்கு, கால்வாயின் அடுத்த பகுதிக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து மறுபடியும் பெரிய கப்பல்கள் மூலமாக சரக்கு கையாளப்படும். சுஸ் கால்வாயின் ஆழத்தை 22மீட்டராக ஆழப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள திட்டம் உள்ளது.

கப்பல் போக்குவரத்தில் நவீன நுட்பங்களுக்கு ஏற்ப இந்த கால்வாய்களையும் மாற்றம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

சேது சமுத்திரம் கடல்பகுதியையும் ஆழப்படுத்த முடியும். கூடுதல் செலவாகும். சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் கவனிக்க வேண்டும்.

அது தவிர சேது சமுத்திரம் கடல் பகுதியில் இதே ஆழத்தை தொடர்ச்சியாக பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்புக்கும் செலவாகும்.
இது சேது சமுத்திரம் என்றில்லாமல் எல்லா துறைமுகங்களுக்கும் பொருந்தும்

இந்த திட்டம் தெற்க்காசியாவின் Suez Canal என கூறுகிறார்களே ?

இதை விட நகைச்சுவை வேறு எதுவும் இல்லை. சுஸ் கால்வாய், பனாமா கால்வாய் போன்றவை பயண நேரத்தை பல நாட்கள், பல ஆயிரம் மைல்கள் குறைக்கின்றன. சேது சமுத்திரம் குறைக்கும் நேரம் அதிகபட்சமாக வரையறுக்கப்பட்டிருப்பதே 30மணி நேரம் தான்

இவ்வளவு பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ள இந்த திட்டம் வெற்றி பெறுமா ?

பொருளாதாரக் காரணங்களை பொறுத்தவரையில் இந்த திட்டத்திற்கு ஆதரவு/எதிர்ப்பு என இரு தரப்பினர் கூறுவதிலும் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. உண்மை இந்த இரண்டிற்கும் இடையில் ஒளிந்து இருக்கிறது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தான் இது வெற்றியா, தோல்வியா என்பது தெரியும். அது வரையில் இவை அனைத்தும் வெறும் ஊகங்கள் தான்.

இந்த திட்டத்தை ஆதரிக்க வேண்டுமா ? எதிர்க்க வேண்டுமா ?

சமீபகாலத்தில் தமிழகத்தில் உள்ள பலரை ஒரு தெளிவான நிலைப்பாட்டினை எடுக்க விடாமல் குழப்பிய ஒரு விடயம் இது தான் என்றால் அது மிகையல்ல.

ஒரு பொருளாதார திட்டம் Vs அது ஏற்படுத்தக்கூடிய சுற்றுப்புறச்சூழல், சாமானிய மக்களுக்கான வாழ்வியல் பாதிப்புகள் என்று மட்டும் இருந்திருந்தால் இதில் ஏதேனும் ஒரு அணியில் பலர் சேர்ந்திருக்ககூடும். ஆனால் இங்கே சம்பந்தமேயில்லாமல் சங்பரிவார் ஆஜராகியவுடன் தமிழகத்தில் உள்ள பலருக்கு இந்த திட்டத்தை எந்தக் காரணத்தால் ஆதரிப்பது, எதிர்ப்பது என்ற குழப்பம் ஏற்பட்டு விட்டது.

ஆனால் இந்த திட்டம் "எதிர்க்கப்படவேண்டிய" ஒரு திட்டம். பொருளாதாரக் காரணங்களுக்காக அல்ல. ராமன் தன் குரங்குகள் கூட்டணியுடன் பாலம் கட்டிய புராண கற்பனை கதைக்காகவும் அல்ல.

சுற்றுப்புறச்சூழலுக்காகவும், மீனவர்களின் வாழ்வியலுக்கு இந்த திட்டம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளுக்காகவும் இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும்.

தவிரவும் இயற்கை வளங்களாக இருக்கும் வரை அது சாமானியனின் சொத்தாக இருக்கும். அது பொருளாதாரக் காரணங்களுக்காக மாற்றப்படும் பொழுது பண முதலைகளுக்கும், அதிகார மையத்திற்கும் தான் அந்த சொத்தில் சொந்தம் இருக்கும். சாமானியனின் உரிமை பறிக்கப்பட்டு விடும். அந்த வகையிலும் இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும்.

மீனவர்களை இந்த திட்டம் எவ்வாறு பாதிக்கும் ?

கப்பல்கள் இந்த கடல்பாதையில் செல்வதால் மீனவர்கள் இந்த கடல்பாதையை தற்பொழுது உள்ளது போல கடக்க முடியாது. கப்பல்கள் செல்லும் நேரத்தில் சேது சமுத்திரத்தை கடக்க காத்திருக்க வேண்டும்.

இந்த கடல்பாதையை ஆழப்படுத்த தோண்டப்படும் மணல் கரையோரங்களில் கொட்டப்படும். இதனால் கடலோரங்களில் இருக்கும் மீனவர்களுக்கு பாதிப்பு இருக்கும்.

மீன் வளம் குறையும்

The Gulf of Mannar and the Palk Bay are sensitive regions, very different from the open sea. "If their physical environment is disturbed in a big way, it will reflect on their biological environment, biodiversity and fishery production. Fishery production depends on the physical environment," says a marine biologist. The entire fish chain will be affected.


மீனவர்களுக்கு இந்த திட்டத்தால் ஆதாயம் எதுவும் இல்லையா ?

மீனவர்களுக்கும் இந்த திட்டத்தால் ஆதாயம் உள்ளது என சில கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. தற்போதைய மன்னார் வளைகுடா உள்ளிட்ட கடல் பகுதியில் ஆழம் குறைவாக இருப்பதால் பெரிய அளவில் மீன் வளம் இல்லை. சில அரிய வகை கடல் இனங்கள் இருந்தாலும் மீன்கள் பெரிய அளவில் இல்லை. இதனால் தான் இந்தப் பகுதி மீனவர்கள் இலங்கை கடலுக்குளளும் கச்சத்தீவு பகுதிக்குள்ளும் சென்று விடுகிறார்கள். இதனால் சில நேரங்களில் இலங்கை கடற்படை இவர்களை பிடித்துக்கொண்டு சென்று விடுகிறது.

கடல்பகுதியில் ஆழம் குறைவாக இருப்பதால் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சென்று மீன்களை பிடிப்பதிலும் பிரச்சனைகள் உள்ளன. சேது சமுத்திரம் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டால் இந்த கால்வாய் மூலமாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சென்று மீன்களை பிடிக்க முடியும். அதுவும் தவிர மீன்களும் சேது சமுத்திரம் திட்டத்தால் இந்தப் பகுதிக்கு வரும் வாய்ப்பு உள்ளதாகவும் கருத்து உள்ளது

சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன ?

மன்னார் வளைகுடா பகுதியினை கடல்வாழ் உயிரினங்களின் தேசிய பூங்காவாக அரசு அறிவித்துள்ளது. பல அரிய வகை கடல் இனங்கள் இங்கே உள்ளன.

Gulf of Mannar Biosphere Reserve is one of the world's richest regions from a marine biodiversity perspective. The Reserve harbours marine biodiversity of global significance and is renowned for its coral reef, sea grass and algal communities

Located on the southeastern tip of the subcontinent, the Gulf of Mannar is known to harbour over 3,600 species of flora and fauna, making it one of the richest coastal regions in Asia. 117 hard coral species have been recorded in the Gulf of Mannar. Sea turtles are frequent visitors to the gulf as are sacred sharks, dugongs, and dolphins

Among the species that figure in the endangered list include dolphins, Dugongs (Dugong Dugon), whales and sea cucumbers.

The Gulf of Mannar Biosphere Reserve covers an area of 10,500 km², with a larger buffer area that includes the adjoining coastline. The islets and coastal buffer zone includes beaches, estuaries, and tropical dry broadleaf forests, while the marine environments include algal communities, sea grass communities, coral reefs, salt marshes and mangroves.

சேது சமுத்திர திட்டம் இவை அனைத்திற்கும் வேட்டு வைக்கும் திட்டம். எனவே தான் இந்த இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. சேது சமுத்திர திட்டத்தை எதிர்க்க வேண்டும்

தொடர்புள்ள சுட்டிகள்

வேறு என்ன சுற்றுப்புறச்சூழல் பிரச்சனைகள் உள்ளன ?

ஆதம் பாலம் இயற்கையாக பல இயற்கை சீற்றங்களில் இருந்து இந்தப் பகுதியை பாதுகாத்து உள்ளது. உதாரணமாக சுனாமி போன்றவையின் பொழுது இயற்கையின் சீற்றத்தை ஆதம் பாலம் தடுப்பு அணையாக எதிர்கொண்டுள்ளது. சேது சமுத்திரம் இதற்கு வேட்டு வைக்க கூடும்.

இந்த பகுதியில் இருக்கும் பல சிறு தீவுகள் சேது சமுத்திர திட்டத்திற்கு பிறகு கடலில் முழ்கி விடும் அபாயம் உள்ளது.

A fear has also been expressed that, after the Gulf of Mannar is dredged to cut the ship canal, nearly 85 islets in the Western coastal region of Sri Lanka will be submerged into the sea. According to Oceanographers' view, Indian Ocean around the tip of the Indian peninsula is an ancient area in natural transition which has not yet completed its full formation. This section is the most complex relief and the earth crust is still in motion

இந்தப் பகுதியில் எக் காலத்திலும் பெரிய அளவில் கடல் போக்குவரத்து இருந்ததில்லை. ஆனால் சேது சமுத்திர திட்டத்திற்கு பிறகு இந்தப் பாதையில் அதிகளவில் கடல் போக்குவரத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் இது பல கடல்வாழ் இனங்களை அழித்து விடும் வாய்ப்பு உள்ளது.

A busy continuous navigation in this region will offset and trigger devastating ecological imbalance, affecting the lives of millions of fishermen and many endangered organisms of the subtropical, shallow Gulf of Mannar

Environmentalists fear that there are two ways in which the plying of ships could endanger the ecology. Dredged spoil dumped in the vicinity of the islands could cause mass, suspended sedimentation. The canal would cause a change in the magnitude and direction of currents in the Gulf of Mannar because it will be 300 metres wide, and the changed currents will flow towards the 21 islands.

இனி இந்தப் பிரச்சனை பற்றி இந்திய ஊடகங்கள் உளறி கொட்டியது குறித்த சிறு குறிப்பு

சேது சமுத்திரம் திட்டம் இந்திய ஊடகங்களின் வலதுசாரி ஆதரவு தன்மையை தெளிவாக வெளிப்படுத்தியது. வட இந்திய ஊடகங்கள் பல கதைகளையும், தியரிகளையும் வாரி இறைத்தன.

இதிலே உச்சகட்ட நகைச்சுவையை வழங்கியது ஓரளவிற்கு மாறுபட்ட பத்திரிக்கையான "தெகல்கா" என்பது தான் ஆச்சரியம். தெகல்காவின் ஆனந்த் சொல்கிறார் - தமிழர்களின் சேது சமுத்திர கனவு என்பது குமரிக்கண்டம் என்ற தமிழர்களின் கனவினை சிறிதளவேனும் நிறைவேற்றும் ஒரு திட்டமாம். அப்படியா ? :)

For Dravidianists, the construction of the Sethusamudram Canal comes closest to a modern realisation of the Lemuria myth. For the BJP and its cohorts, it is the demolition of the Aryan myth of conquest.

தெகல்கா எங்கிருந்து இப்படி ஒரு உண்மையை கண்டுபிடித்தது என்பது அவர்களுக்கே வெளிச்சம். முதலில் இது தமிழனின் கனவு என யார் சொன்னார்கள் ? அரசியல்வாதிகள் தான் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஆளாளுக்கு ஒரு கதை கட்டி இந்த திட்டத்தை ஒரு குழம்பிய குட்டையாக்கி விட்டார்கள்.

இந்த வட இந்திய ஊடகங்கள் இருக்கின்றனவே, அவர்களுடைய தியரி ரொம்ப சிம்பிள் - அரசியல்வாதிகள் ஒரு திட்டத்தை முன்வைத்தால் அது Vote Bank Politics. இந்த திட்டத்தால் என்ன ஓட்டு கிடைக்கும் என அவர்களிடமே திருப்பி யாராவது கேட்பார்களா என பார்த்தேன். எந்த நிகழ்ச்சியிலும் எவரும் கேட்கவில்லை.

"புரட்சி கவிஞன்" பாரதிதாசன் பிறந்த தினம்

"சாதி ஒழித்தல் ஒன்று,
நல்ல தமிழ்வளர்த்தல் மற்றொன்று - பாதியை
நாடு மறந்தால் மற்றபாதி துலங்குவது இல்லை"
- என்று அழுத்தமாகச் சொன்ன புரட்சிக்கவி பாரதிதாசனின் பிறந்தநாள்!

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பா...ரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ் நடத்தி வந்தார்.




புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.
இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.

கவிஞர் 21.4.1964ல் இயற்கை மரணம் எய்தினார். மன்னர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்

"புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்"

"தமிழுக்கு அமுதென்று பேயர் - அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்"

பாரதிதாசனின் ஆக்கங்கள்



1.பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
2.பாண்டியன் பரிசு (காப்பியம்)
3.எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
4.குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
5.குடும்ப விளக்கு (கவிதை நூல்)
6.இருண்ட வீடு (கவிதை நூல்)
7.அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
8.தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
9.இசையமுது (கவிதை நூல்)
10.அகத்தியன் விட்ட புதுக்கரடி, பாரதிதாசன் பதிப்பகம்
11.அமைதி, செந்தமிழ் நிலையம்,
12.இசையமுதம் (முதல் பாகம்), பாரதசக்தி நிலையம் (1944)
13.இசையமுதம் (இரண்டாம் பாகம்), பாரதசக்தி நிலையம் (1952)
14.இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்), குடியரசுப் பதிப்பகம் (1939)
15.இருண்ட வீடு, முத்தமிழ் நிலையம்
16.இளைஞர் இலக்கியம், பாரி நிலையம் (1967)
17.உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)
18.எதிர்பாராத முத்தம், வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் (1941)
19.எது பழிப்பு, குயில் (1948)
20.கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)
21.கண்ணகி புரட்சிக் காப்பியம், அன்பு நூலகம் (1962)
22.கதர் ராட்டினப் பாட்டு, காசி ஈ.லட்சுமண பிரசாத் (1930)
23.கற்புக் காப்பியம், குயில் (1960)
24.காதல் நினைவுகள், செந்தமிழ் நிலையம் (1969)
25.காதல் பாடல்கள், பூம்புகார் பிரசுரம் (1977)
26.காதலா? - கடமையா?, பாரதிதாசன் பதிப்பகம் (1948)
27.குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி), பாரதிதாசன் பதிப்பகம் (1942)
28.குடும்ப விளக்கு (திருமணம்), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
29.குடும்ப விளக்கு (மக்கட் பேறு), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
30.குடும்ப விளக்கு (விருந்தோம்பல்), முல்லைப் பதிப்பகம் (1944)
31.குடும்ப விளக்கு (முதியோர் காதல்), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
32.குயில் பாடல்கள், பூம்புகார் பிரசுரம் (1977)
33.குறிஞ்சித் திட்டு, பாரி நிலையம்
34.சஞ்சீவி பர்வதத்தின் சாரல், பாரதிதாசன் பதிப்பகம் (1949)
35.சேர தாண்டவம் (நாடகம்), பாரதிதாசன் பதிப்பகம் (1954)
36.தமிழச்சியின் கத்தி, பாரதிதாசன் பதிப்பகம் (1949)
37.தமிழியக்கம், செந்தமிழ் நிலையம்
38.தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
39.திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
40.தேனருவி இசைப் பாடல்கள், பாரதிதாசன் பதிப்பகம் (1955)
41.நல்ல தீர்ப்பு (நாடகம்), முல்லைப் பதிப்பகம் (1944)
42.நீலவண்ணன் புறப்பாடு
43.பாண்டியன் பரிசு, முல்லைப் பதிப்பகம் (1943)
44.பாரதிதாசன் ஆத்திசூடி
45.பாரதிதாசன் கதைகள், முரசொலிப் பதிப்பகம் (1957)
46.பாரதிதாசன் கவிதைகள், கடலூர் டி.எஸ்.குஞ்சிதம் (1938)
47.பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)
48.குடியரசுப் பதிப்பகம் (1944) பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)
49.பாரதிதாசன் பதிப்பகம் (1952)
50.பாரதிதாசன் நாடகங்கள், பாரி நிலையம் (1959)
51.பாரதிதாசன் பன்மணித் திரள், முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)
52.பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)
53.புரட்சிக் கவி, துரைராசு வெளியீடு (1937)
54.பெண்கள் விடுதலை
55.பொங்கல் வாழ்த்துக் குவியல், பாரதிதாசன் பதிப்பகம் (1954)
56.மணிமேகலை வெண்பா, அன்பு நூலகம் (1962)
57.மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
58.முல்லைக் காடு, காசி ஈ.லட்சுமண பிரசாத் (1926)
59.கலை மன்றம் (1955)
60.விடுதலை வேட்கை
61.உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)
62.வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)
63.தமிழுக்கு அமுதென்று பேர்
64.வேங்கையே எழுக
65.ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
66.புகழ் மலர்கள் நாள் மலர்கள்
67.தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்), பூம்புகார் பிரசுரம் (1978)

இலுப்பைப் பூ சாப்பிடுங்க ஆண்மை அதிகரிக்கும்..!!!

இயற்கையின் படைப்பில் மலர்கள் மகரந்த சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டவை. இந்த மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. பூக்கள், காயாகி, கனியாகி அதனை மக்கள் உண்பதற்கு இயற்கை கொடுக்கிறது. கனியாக மாறும் வரை காத்திருக்காமல் பூக்களை சாப்பிட்டாலே அதற்குறிய அத்தனை குணங்களும் கிடைக்கும்.


காதுகளைக் காக்கும் மகிழம்

மகிழம் பூவின் நறுமணம் மணம் மயக்கும். இது மற்றப் பூக்களைவிட சற்றே வித்தியாசமானது. காதுகளில் எந்த தொல்லை ஏற்பட்டாலும் மகிழம் பூவை எண்ணெய் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து சற்று நேரம் குளிர வைத்து அதன் பின் குளிர்ந்த நீரில் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தலைவலி நீங்கும்

அகத்திக்கு சிறந்த மருத்துவ குணங்கள் இருப்பது போல அகத்திப் பூவிற்கும் உண்டு. அகத்திக்கீரை, நாம் உண்ணும் உணவு நன்றாகக் ஜீரணிக் உதவுகிறது. நீர்க்கோவைக் காரணமாகத் தோன்றும் தும்மல் போன்று நோய்களுக்கு அகத்திக் கீரையின் சாற்றையும், அகத்திப் பூவின் சாற்றையும் சம அளவு கலந்து மூக்கில் இரண்டொரு சொட்டு விட்டுவந்தால் நோய் நீங்கும். பொதுவாக நீர்கோவைக்கு அகத்தி இலைச்சாற்றுடன் சமஅளவு தேன்கலந்து உள்ளுக்குச் சாப்பீட நல்ல குணம் கிடைக்கும். அடிபட்டு கன்றிப்போன வீக்கங்களுக்கு அகத்திக் கீரையை அரைத்துச் சுடவைத்து பற்றாகப் போட்டால் சிறந்த குணம் கிடைக்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி, அனல் ஆவிபிடிக்கக் கடுமையான தலைவலி நீங்கும்.

தொட்டாச்சிணுங்கி பூக்கள்

தொட்டாச் சிணுங்கி என்ற முள் கொடியில் தொட்டால் சிணுங்கிப் பூ கிடைக்கும். தொட்டவுடன் இந்தக் கொடியின் இலைகள் சுருங்கிவிடும்.தொட்டாச்சிணுங்கி வேர் என்பவற்றிற்கு புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்பது சித்த மருத்துவர்களது கூற்றாகும். மனிதர்களுக்கு மட்டுமன்றி கால்நடைகளுக்கும் ஏற்படுகின்ற பல நோய்கள் இப்பூவினால் குணமாகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்மை அதிகரிக்கும்

இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். இலுப்பை பூவை ஒத்தடம் கொடுத்தால் உடலில் உள்ள வீக்கம் குறையும்.

ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும். இலுப்பை எண்ணெய்யை உடலின் உறுப்புக்கள் சிலவற்றில் தேய்த்துக் கொள்வது முண்டு. சிலர் அவ்வப்போது உணவிற்காகவும் பயன்படுத்துகின்றனர்.

சளி நீங்கும்

தூதுவளைப் பூ மிகச் சிறந்த மருத்துவ குணம் நிறைந்தது. இந்தப் பூ அதிக அளவில் கிடைப்பது இல்லை. கிடைக்கும் பூவை வதக்கி துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் சளி, மூக்கடைப்பு குணம் அடையும்.தூதுவளைப் பூவைப் போன்று தூதுவளை இலையையும் துவையல் செய்து சாப்பிட்டால் நல்ல பயன் ஏற்படும். தொண்டை, வயிறு இவைகளில் ஏற்படும் புண்களுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது.

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை?


வைகை நதி கடலில் போய் சேராதது ஏன் என்று ஒரு விவாதம் நடந்தது குலோத்துங்க சோழன் அவையிலே. அவையில் ஒட்டக்கூத்தர் புலவர் பேரரசாக வீற்றிருக்கிறார். அருகில் வெண்பா வீறுடையவராக புகழேந்தி அமர்ந்திருக்கிறார். ஒட்டக்கூத்தர் சோழ நாட்டில் பிறந்தவர். புகழேந்தி களந்தையில் பிறந்தவர். பாண்டிய நாட்டின் பால் பற்றுடையவர். இருவரும் பெரும் புலவர்கள்.















ஒட்டக்கூத்தர் சொன்னார், “எங்க சோழ நாட்டு காவிரி மாதிரி உங்க பாண்டிய நாட்டு வைகை வருமா? வைகை கடலில் கலக்காத நதி”

அந்தந்த நாட்டுக்கு உரியவர்கட்கு அந்தந்த நாட்டின் மேல் பற்று தானாக இயல்பாக வந்து விடுகிறது. புகழேந்தி சொன்னார், “உங்க நதி சாதாரண நதி. எல்லாவற்றையும் போல அதுவும் கடலில் கலக்குது. எங்க வைகை நதி கடலில் கலக்கலே.ஏன் தெரியுமா? இந்தக் கடல் இருக்கே இது பாற்கடலுக்கு உறவு. பாற்கடல் சிவபெருமானுக்கு நஞ்சளித்தது. ஆலகாலம் அங்கே இருந்து தானே வந்தது? எம்பெருமானுக்கு நஞ்சை அளித்த பாவியாகிய இந்த கடலோடு நான் போய் சேர்வேனா? என்று சொல்லி சிவபத்தி மிக்க வைகை கடலில் கலக்கலே”.

இதை உள்ளடக்கி அவர் பாடிய அருமையான பாடல்

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.

அற்புதமான தற்குறிப்பேற்றக் கற்பனை. இந்தக் கற்பனை புகழேந்திக்கு எப்படித் தோன்றியது? இந்தக் கற்பனைக்கு வித்திட்டவர் தெய்வச் சேக்கிழார்.‘சுடர்நிலை மாளிகைப் புலியூர்’ என்ற சேக்கிழாரின் பாடலில் இருந்து புகழேந்தி எடுத்துக் கூறினார்.

மைசூருக்கு அருகே குடகு மலையில் சிறியதாக தொட்டி போல ஒரு இடத்தில் காவிரி ஆறு தொடங்குகிறது. இதை தலைக்காவிரி என்பர். இது வெளியே கிளம்பி பெரிதாகி விரிந்து சோழ நாட்டிற்கு வரும் போது அகண்ட காவிரி என்று பெயர் பெறும். கடலில் கலக்கின்ற இடத்தில் மிகக்குறுகி சிறிதளவே இருக்கும். சிறிதாய் ஆரம்பித்து, அகண்டு கடலில் கலக்கும்போது மீண்டும் குறுகி விடுவது ஏன்? சேக்கிழார் காரணம் சொல்கிறார்.

எம்பெருமானுக்கு நஞ்சளித்த பாவியாகிய கடலுக்குப் போய் என்னுடைய வளத்தையெல்லாம் ஏன் போய் கொட்டுவது என்று சோழ நாட்டுள் செல்லும்போது வளத்தை எல்லாம் வாரி வழங்கி கடலை அடையும் போது கடல் வயிறு நிறையாதபடி குறுகி அடைந்ததாம். 

(நன்றி: மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமந்திரச்சிந்தனைகள் புத்தகம்)

சுருங்கிய தமிழ்த்தாய் வாழ்த்து...!!!





"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"

தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடத்தை மட்டும் வைத்து விட்டு தமிழில் இருந்து தான் தென்னிந்திய மொழிகள் வந்தது என்ற சொற்றொடரையும், ஆரிய மொழி  அழிந்தது என்பதையும் திட்டமிட்டு, தமிழ் வரலாறு தமிழ்த்தாய் வாழ்த்திலும் இல்லாமல் பார்த்துக் கொண்டனர் தமிழக ஆட்சியாளர்கள்

Saturday 28 April 2012

இணையவெளியில் திருக்குறள்!


திருக்குறள் தமிழின் சிறப்பை எடுத்துரைக்கும் பெருநூலாக விளங்குகின்றது. உலக அளவில் பலமொழிகளில் பல வடிவங்களில் திருக்குறள் பரவியுள்ளது. ஓலைச்சுவடியில் இருந்த திருக்குறள் அச்சுவடிவம் கண்டதுபோல் இணையவெளியிலும் பல தளங்களில் பலவாறு பதிப்பிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குப் பயன்படும்வண்ணம் திருக்குறள் மூலமாகவும், உரையுடனும், மொழிபெயர்ப்புடனும், ஒலி, ஒளிவடிவிலும், திருக்குறள் கருத்துகள் அசைவுப்படங்களாகவும், படக்கோப்புகளாகவும், ஒருங்குகுறிவடிவிலும், தரப்படுத்தப்பட்ட எழுத்துகளிலும், தனியார் நிறுவனங்களின் எழுத்துகளிலும் உள்ளன. திருக்குறளைச் செல்பேசிகளில் எடுத்துச்செல்லும் வண்ணம் தரவிறக்கும் வாய்ப்புகளுடனும் உள்ளது.

ஒலிவட்டுகளாக்கி மூலமும் உரையும் இணைந்த பேச்சு வடிவிலும் திருக்குறள் உள்ளது. திருக்குறள் சார்ந்த அறிஞர்களின் பேச்சுகளாவும் திருக்குறள் இணையத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் திருக்குறள் பரவல் இணையப்பெருவெளியில் மிகச்சிறப்பாக நிகழ்ந்துள்ளது. இவ்வாறு இணையத்தில் இடம்பெற்றுள்ள திருக்குறள் பதிப்புகள் பற்றியும் இணையதளங்களின் பதிப்புச் சிறப்புகள், சில தளங்களின் மேம்படுத்தலின் இன்றியமையாமை பற்றியும் இக்கட்டுரையில் சில செய்திகள் பதிவாக உள்ளன.

திருக்குறள் இணையப் பதிப்புகளின் பொதுத்தன்மைகள்:

திருக்குறள் தொடக்கத்தில் தரப்படுத்தப்பட்ட எழுத்துருக்களைக் கொண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. படக்கோப்புகளாகவும் (பி.டி.எப்.) சில தளங்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. சில தளங்கள் தனியார் நிறுவன எழுத்துகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன (கலைஞரின் திருக்குறள் உரை, குறளோவியம்). இன்று ஒருங்குகுறிப் பயன்பாட்டின் முதன்மை தெரிந்த பிறகு பல இணையதளங்களும் ஒருங்குகுறி எழுத்துருவில் யாவரும் படிக்கும் வண்ணம் எந்த எழுத்துருச்சிக்கலும் இல்லாமல் படிக்கும் வகையில் பதிப்பித்துள்ளன.

தினமலர் போன்ற நாளிதழ்களின் தளத்தில் திருக்குறள் சிறப்பாக மூலத்துடனும் உரையுடனும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தினமணி நாளிதழ்த் தளத்தில் நாளும் ஒரு திருக்குறள் இடம்பெறுகின்றது. அருகில் உள்ள பொத்தானை அழுத்தி திருக்குறளுக்கு உரிய பொருளை அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு கணினி, இணையத் தொழில்நுட்பம் அறிந்த ஆர்வலர்களும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்பத் திருக்குறளைப் பலவகையாகப் படித்து மகிழும்வண்ணம் பதிப்பித்துள்ளனர். பொதுவாகப் பால்பகுப்பு, இயல்பகுப்பு, அதிகாரப் பகுப்பு இவற்றின் வழியாகத் திருக்குறளைப் பார்வையிடும்படி செய்துள்ளனர். சில தளங்களில் திருக்குறள் எண்ணைச்சொடுக்கியும் திருக்குறளைக் காணலாம். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பதிப்பில் மூலமும் மொழிபெயர்ப்புகளும் உரைகளும் பலவாக இருக்கின்றமை பயனாளிகளுக்குப் பெரும் பயன் தரும் ஒன்றாகும்.

மேலும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளத்தின் முகப்பிலும் குறள் அமுதம் என்னும் தலைப்பில் திருக்குறள் இடம்பெற்றுள்ளமை கூடுதல் சிறப்பாகும். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளத்தில் உள்ள திருக்குறள் தரப்படுத்தப்பட்ட எழுத்துகளில் உள்ளன. இந்த எழுத்துகளை நம் கணினியில் உள்ளிட்ட பிறகே திருக்குறள் பயன்பாட்டை நுகரமுடியும்.ஒருங்குகுறி வடிவில் இருக்கும்பொழுதே இதன் பயன்பாடு எளிமையாக அனைவருக்கும் கிடைக்கும்.

இதில் பரிமேலழகர் உரை,பாவாணர் உரை, கலைஞர் உரை எனப் பல உரைகள் உள்ளிடப்பட்டுள்ளன. போப் அடிகளாரின் ஆங்கிலமொழிபெயர்ப்பும், சுத்தானந்த பாரதியாரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் உள்ளன. ஒலிவடிவில் கேட்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் தொழில்நுட்பம் எளிமைப்படுத்தப் படவேண்டும்.

முத்து வ.,சித்தார்த் என்னும் இருவர் (http://kural.muthu.org/)உருவாக்கியுள்ள தளத்துக்குச் சென்றால் திருக்குறள் பயன்படுத்துவதற்கு எளிய முறையில் உள்ளிடப்பட்டுள்ளது. பால் பகுப்பும், இயல்பகுப்பும், அதிகாரப் பகுப்பும் சிறப்பாக உள்ளது. தேடும் வசதியும் இந்தத்தளத்தில் சிறப்பாக உள்ளது.

திருக்குறள் (http://www.thirukkural.com/) என்னும் தளத்தில் எளிமையான அமைப்பில் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் அமைத்துள்ளனர். பயன்மிகு பக்கங்கள் என்ற தலைப்பில் பல இணைப்புகளும் வைத்துள்ளனர். எழுத்துகள் ஒருங்குகுறி அமைப்பில் இருப்பதால் எந்தக் கணினியும் சிக்கலின்றி எழுத்துகளைக் காட்டும்.கலைஞர் உரை, மு.வ. உரை.சாலமன் பாப்பையா உரை ஆங்கில உரைகள் யாவும் சிறப்பாகப் பயன்படுத்தும்படி உள்ளன.

அகரம் (http://agaram-thirukkural.blogspot.com/) என்னும் தளத்துக்குச் சென்றால் தமிழ் ஆங்கில விளக்கத்துடன் திருக்குறள் சிறப்பாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. குறள்களை எண்ணைச் சொடுக்கிப் பயன்படுத்தும் வகையில் எளிய உரைகள் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன.

செந்தமிழ்(http://senthamil.org) என்னும் தளத்தில் திருக்குறளின் முதற்சீர் மட்டும் குறியீட்டுச் சொல்லாக அமைந்துள்ளது. அதனைச் சொடுக்கினால் உரிய திருக்குறள் மூலத்தை மட்டும் படிக்கலாம்.இதில் ஒரு நெறிமுறை இல்லாமல் இல்லாத முறையைச் சீர் செய்தால் சிறந்த தளமாக அமையும்.

மதுரைத்திட்டத்தில் (http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0001.html) உள்ள திருக்குறள் மூலம் மட்டும் கொண்டதாக அமைந்துள்ளது. படக்கோப்பு வடிவிலும், தரப்படுத்தப்பட்ட எழுத்து வடிவிலும்,ஒருங்குகுறி வடிவிலும் திருக்குறள் இடம்பெற்றுள்ளது.

ஆச்சார்யா தளத்தில் (http://acharya.iitm.ac.in/tamil/kural/kural_browse.php) உள்ள திருக்குறள் யாவும் மூலமும் அதற்கு ஆங்கில விளக்கமுமாக உள்ளன. எண்ணைச்சொடுக்கிக் குறளைப் பெறும் வகையில் தளம் உள்ளது.

தமிழன் வழிகாட்டி (http://www.tamilsguide.com/) இணைய தளத்தில் தினம் ஒரு திருக்குறள் என்னும் தலைப்பில் திருக்குறள் இடம்பெற்றுள்ளது. தமிழ் ஆங்கிலம் என்னும் இருமொழிகளில் அறியும்வண்ணம் உள்ளது. திருக்குறளுக்குத் தமிழ் உரையை அ.பொ.செல்லையா அவர்கள் வழங்கியுள்ளார். ஆங்கில விளக்கவுரையை அவர் துணைவியார் திருவாட்டி யோகரத்தினம் செல்லையா வழங்கியுள்ளார்.

ஆங்கிலத்தில் அதிகார எண், குறள் எண், ஆங்கில எழுத்தில் குறள், ஆங்கிலத்தில் விளக்கம் உள்ளது. தமிழிலும் இந்த வரிசைமுறையில் குறட்பாக்கள் உள்ளன. உரையாசிரியர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளமை கூடுதல் சிறப்பு.


பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் பற்றி அறிய http://nvkashraf.co.cc/nvkashraf/kur-trans/languages.htm என்னும் தளத்திற்குச் செல்ல வேண்டும். இதில் சௌராட்டிரமொழி, இந்தி, வங்காளம், குசராத்தி, ஒரியா, மராத்தி, தெலுங்கு, அரபி, உருது, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, இசுபானிசு, சுவீடிசு, என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள விவரங்களை ஓரிடத்தில் பெறலாம்.

திருக்குறள் ஒலிப்பதிப்பு (http://universalepublishers.com/)

திருக்குறள் ஒலிப்பேழைகளாக (கேசட்) முன்பு உலகத் தமிழர்களுக்குக் கிடைத்தது. இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிற்கும் தமிழர்கள் தங்கள் அறிவுத்திறமைகளால் திருக்குறளை ஒலிவடிவில் கேட்டு மகிழக் குறுவட்டுகளாக வெளியிட்டுள்ளார்கள்.

1330 அருங்குறட்பாக்களும் எட்டரை மணி நேரம் கேட்டு மகிழும் வகையில் உரையுடன் குறுவட்டில் பதிப்பித்துள்ளனர். முன்னுரையும், பால்பகுப்பும் சுட்டி, இயல் பகுப்பு உணர்த்தி, அரிய இசை முன்னோட்டமும், அதிகாரத்தின் எண்ணும், அதிகாரத் தலைப்பும், குறளும் அதற்குரிய பொருளும் இசை நிறைவும் கொண்டு ஒவ்வொரு அதிகாரமும் இந்தக் குறுவட்டில் சிறப்புடன் பதிவு செய்யப்பெற்றுள்ளது. பின்னணி இசையும் மென்மையாக ஒலிக்கின்றது.

திருக்குறளை இனிய குரல்வளத்துடன் பொருள் விளங்கும்படி படித்து, கேட்பவர்களுக்குச் சலிப்பு ஏற்படாமல் பதிவு செய்துள்ளமை பாராட்டத்தகுந்த முயற்சியாகும்.

முனைவர் க.ப.அறவாணன் அவர்களின் திருக்குறள் உரை இந்த ஒலிப்பேழையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திரு.டெய்சன் அவர்களின் குரலில் ,ஒலிவல்லுநர் தினேசுகுமார்,(கிருபா எண்மியம்)ஒலிக்கோர்வை செய்ய, அமரர் இரா.இரவிச்சந்திரன் இசையில் இவர்களின் கூட்டுழைப்பில் இந்த ஒலிக் குறுவட்டு கோவையிலிருந்து செம்மொழி மாநாடு நடைபெறும் நாளில் வெளிவந்தது.திருக்குறள் ஒலிக் குறுவட்டுகள் செம்மொழி மாநாட்டை ஒட்டி நடந்த தமிழ் இணையமாநாட்டு அரங்கில் கண்காட்சிக்கூடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள்,அல்லது அலுவலகப் பணிகளில் ஈடுபடுபவர்கள் திருக்குறளைக் கேட்டபடி தங்கள் பணிகளைச் செய்ய இத்தகைய ஒலிப்பதிப்புகள் பயன்படும்.அயல்நாட்டுத் தமிழர்கள்,தமிழ் ஆர்வலர்கள் யாவருக்கும் பயன்படும்.ஒரு குறுவட்டின் விலை (இந்திய உருவா) 150-00

திருக்குறள் மறைமொழி (http://panainilam.blogspot.com/2009/02/1330.html)

1330 திருக்குறளும் இசையுடன் பாடிக் குறுவட்டாக அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. ஏழு பெண்களும், ஏழு ஆண்களும் அடங்கிய இரு குழுக்கள், ஒவ்வொன்றும் மாறி மாறி அவ்வைந்து அதிகாரங்களாகப் பாடியுள்ளது. எளிமையான இசையோடு மறைமொழியின் (மந்திரம் என்ற சொல்லுக்குத் தமிழில் மறைமொழி) மெட்டில் 1330 குறட்பாக்களும் பாடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்பும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் சுமார் ஒன்றரை நிமிடங்கள் இசைக்கின்றன. மொத்த குறட்பாக்களைக் கேட்க ஆகும் நேரம் சுமார் மூன்று மணி நேரம். இதற்கான ஒலிப்பதிவு Island Sounds என்ற ஒலிப்பதிவகத்தில் Steve Green என்பவரால் செய்யப்பட்டது. ஒலிப்பதிய எடுத்துக்கொண்ட நேரம் சுமார் ஆறு மணி நேரம். குறுந்தகட்டுக்கான முன்னுரையை வழங்கியிருப்பவர் திருச்சி திருவள்ளுவர் தவச்சாலையைச் சார்ந்த இரா.இளங்குமரனார் அவர்கள் இதன் விலை 5 அமெரிக்க டாலர் ஆகும்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியுடன் சென்னையில் உள்ள தமிழ் மையம் திருக்குறளின் 330 குறட்பாக்களை 50 பாடல்களாக உருவாக்கியுள்ளது. திருக்குறள் இசைத்தமிழ் என்னும் பெயரில் இம்மையம் குறுவட்டை உருவாக்கியுள்ளது. செம்மொழி நிறுவனத்தின் தளத்திற்குச் சென்று(http://ta.cict.in/thirukkural330-tamil-maiyam ) இலவயமாகப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

திருக்குறள் சார்ந்த பதிப்புகளையும், இணையதளங்களையும் ஆய்வதுடன் திருக்குறள் பதிப்புகள் முறையாக இணையத்தில் உள்ளனவா என்று ஆராய்வது இன்றைய தேவையாக உள்ளது.திருக்குறள் பதிப்புகள், உரைவெளியீடுகள் மிகுந்துவரும் இந்த நாளில் அவற்றை இணையப் பதிப்புகளாக வெளியிடுவது மிகவும் எளிதாகும். அவ்வாறு வெளியீடு செய்தால் இணையப் பெருவெளியில் திருக்குறள் உரைகள் யாவும் ஓரிடத்தில் காணும் வாய்ப்பு ஏற்படும்.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வான்புகழ் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கில் காட்சிவழிப் படைப்பாக இக்கட்டுரை வழங்கப்பட்டது. நாள் 13.02.2011

கணித மேதை ராமானுஜன் பற்றிய தகவல்(1887-1920)

கணித மேதை ராமானுஜன் பற்றிய தகவல் !!!!!!! (1887-1920)



பிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி

சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.




1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது. அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார். பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே. உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன்! அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்!


ராமானுஜன் தமிழ் நாட்டில் 1887 டிசம்பர் 22 நாள் ஒர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தார். பிறந்த ஊர் ஈரோடு. படித்ததும், வளர்ந்ததும் கும்பகோணத்திலே. தந்தையார் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதுபவர். கணித ஞானத்தை , ராமானுஜன் சிறுவனாக இருந்த போதே தென்பட்டது. அவரது அபாரக் கணிதத் திறனைச் சிறு வயதிலேயே பலர் கண்டு வியப்படைந்தார்கள். ஏழு வயதிலே உதவிநிதி பெற்று, ராமானுஜன் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார்! அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம்! “பை” இன் மதிப்பை [3.14] பல தசமத்தில் மாணவர்களிடம் பள்ளியில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் அந்த இளமை வயதிலே, 

பன்னிரண்டாம் வயதில் “லோனியின் மட்டத் திரிகோணவியல்” கணித நூலில் [Loney's Plane Trigonometry] கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராமானுஜன் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணியின் தொகுப்பு, அதன் பெருக்கம் [Sum & Products of Infinite Sequences] பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு ஒன்று [Formula], உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம். அத்தொடரோடு வேறோர் எண்ணைக் கூட்டியோ, பெருக்கியோ, முடிவற்ற சீரணியை முடிவுள்ள சீரணியாக மாற்றி விடலாம்.

பதினைந்தாம் வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித வல்லுநர், கார் [G.S.Carr] தொகுத்த “தூய கணித அடிப்படை விளைவுகளின் சுருக்கம்” [Synopsis of Elementary Results in Pure Mathematics] என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 கணித மெய்ப்பாடுகளை [Theorems] ஆழ்ந்து கற்றுக் கொண்டார். இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்டது. அவைகளே அவரது பிற்கால அபாரக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்தன.

1903 ஆம் ஆண்டில் பதினாறு வயதில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ராமானுஜன் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது முழு மனதும் கணிதம் ஒன்றிலே ஆழ்ந்து விட்டதால், மற்ற பாடங்களில் கவனம் செல்லாது, அவர் கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றார். இதே ஒழுங்கில் படித்து, நான்கு வருடங்கள் கழித்துச் சேர்ந்த சென்னைக் கல்லூரியிலும் முடிவில் தோல்வியடைந்தார். 1909 இல் ராமானுஜன் திருமணம் செய்த கொண்டபின், தற்காலியமாய்த் தன் கணிதப் பித்தை ஒதுக்கி வைத்தி விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்னையில் ஒரு வேலையைத் தேடினார்.

கணிதத்தை ஆதரிக்கும் செல்வந்தர் ஆர்.. ராமச்சந்திர ராவ், அனுதாப முடைய கணித வல்லுநர் பலரது உறுதியான சிபாரிசின் பேரில், 1910 இல் ராமானுஜத்துக்கு கணிதத் துறையில் பணிபுரிய, ஓரளவுத் தொகையை உபகாரச் சம்பளமாக மாதா மாதம் அளிக்க முன்வந்தார். 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் [Journal of the Indian Mathematical Society] வெளிவந்தன.

மேலும் தனியாக வேலை செய்ய விரும்பி 1912 இல், ராமானுஜம் சென்னைத் துறைமுக நிறுனத்தில் எழுத்தராக [Madras Port Trust Clerk] அமைந்தார். நிறுவனத்தின் மேலதிபர் பிரிட்டீஷ் எஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங். அதை மேற்பார்க்கும் மானேஜர், இந்திய கணிதக் குழுவை [Indian Mathematical Society] நிர்மாணித்த பிரபல வி. ராமசுவாமி ஐயர். இருவரும் ராமானுஜத்தின் கணித ஞானத்தைப் பாராட்டி, அவரது கணிதப் படைப்புக்களை, இங்கிலாந்தில் மூன்று முக்கிய பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பித் தொடர்பு கொள்ள ஊக்கம் அளித்தார்கள். அவர்களில் இருவர் பதில் போடவில்லை. ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார்! அவர்தான், அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கணித நிபுணர், G.H. ஹார்டி.

ராமானுஜத்தின் கத்தையான கடிதம் ஹார்டியின் கையில் கிடைத்த 1913 ஜனவரி 16 ஆம் தேதி, ஒரு முக்கிய தினம்! அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள்! முதலில் மேலாகப் பார்த்து விட்டு, ஏதோ ஒரு பைத்தியம் எழுதியதாக எண்ணிக் கடிதக் கட்டை ஒதுக்கி வைத்தார் ஹார்டி. டின்னருக்குப் பிறகு இரவில் பொறுமையாக அவரும், அவரது நெருங்கிய கணித ஞானி, ஜான் லிட்டில்வுட்டும் [John E. Littlewood], புதிர்களைப் போல் காணும் ராமானுஜத்தின் நூதனமான 120 கணித இணைப்பாடுகளையும், [Formulae] கணித மெய்ப்பாடுகளையும் [Theorems] மெதுவாகப் புரட்டிப் பார்த்துப் பொறுமையாக ஆழ்ந்து படித்தார்கள். சில மணி நேரம் கழித்து, பிரமித்துப் போன இருவரும் ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தனர். நிச்சயம் அவர்கள் காண்பது ஒரு மகா மேதையின் உன்னதக் கணிதப் படைப்புகள். ஒரு பைத்தியகாரனின் முறை கெட்ட கிறுக்கல் அல்ல அவை என்று வியப்படைந்தார்கள்!

ஹார்டி உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் [University of Madras], இங்கிலாந்து கேம்பிரிட்ஜ், டிரினிடிக் கல்லூரியும் அவருக்கு உதவிநிதி கொடுக்க முன்வந்தன. 1914 ம் ஆண்டு மார்ச் மாதம், தாயின் பலத்த எதிர்ப்பைத் தள்ளியும், தன் கொள்கையை விட்டுக் கொடுத்தும், ராமானுஜன் இங்கிலாந்துக்குப் புறப்படக் கப்பலேறினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகள் ஹார்டியும், ராமானுஜமும் டிரினிடிக் கல்லூரியில் [Trinity College] ஒன்றாகக் கணிதத் துறை ஆக்கப் பணியில் ஈடுபட்டார்கள். ஹார்டியின் சீரிய பொறி நுணுக்கமும், ராமானுஜத்தின் நூதன கணித ஞானமும் இணையாகப் பொருந்தி, ஒப்பற்ற உடன்பாடு நிலவி, கணித மெய்ப்பாடுகள் பல உருவாகின. இருவரும் கணிதச் சீர்ப்பாடுகள் [Arithmatic Functions] பலவற்றை ஆங்கில, ஈரோப்பிய விஞ்ஞானப் பதிவுகளில் வெளியிட்டார்கள். அவற்றில் ரெய்மன் சீரினம் [Riemann Series], நீள்வட்ட முழு இலக்கங்கள் [Elliptical Integrals], உயர் ஜியாமெட்ரிச் சீரினம் [Hyper Geometric Series], ஜீட்டா சீர்ப்பாடுகளின் இயக்கச் சமன்பாடுகள் [Fuctional Equations of Zeta Functions], ராமானுஜன் தனியாக ஆக்கிய விரியும் சீரினங்கள் [Divergent Series] ஆகியவை கணிதத் துறையில் குறிப்பிடத் தக்கவை. அவை பின்வரும் வினாக்களுக்குப் பதில் அளிக்க அடிப்படைத் தளமாய் அமைந்தன. எடுத்துக் கொண்ட ஓர் இலக்கம், எத்தனை “பிரதம வகுப்பினம்” [Prime Divisors] கொள்ளலாம் ? எத்தனை முறைகளில் ஓர் எண்ணை, அதற்கும் சிறிய “நேரியல் முழு இலக்கங்கள்” [Positive Integers] பலவற்றின் தொகையாகக் குறிப்பிடலாம் ?

தெய்வீக ஞானசக்தி மூலம் தான் கணித்த மெய்ப்பாடுகள் எதிர்காலத்தில் மின்கணணிகளுக்குப் [Computers] பயன்படப் போகின்றன என்று ராமானுஜன் எதிர்பார்த்திருக்க மாட்டார்! சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை! ராமானுஜத்தின் கணிதத் தீர்வு முறை மற்றவர் ஆக்கிய முறைகளைப் போல் விரியாமல், அதி விரைவில் குவிந்து, பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாய்த் தருகிறது!

ராமானுஜத்தின் படைப்புகள் யாவும் அவரது “குறிப்பு நூலில்” [Notebooks] அடங்கி யுள்ளன. பல மெய்ப்பாடுகள் வழக்கமான நிரூபணம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளன. மற்றும் அவரது குறிப்பு நூலில் “முழுமைப்பாடுகள்” [Integrals], முடிவில்லாச் சீரினங்கள் [Infinite Series], தொடர்ப் பின்னங்கள் [Continued Fractions] போன்றவை விளக்கப் படுகின்றன. கணிதத் துறையினர் இன்னும் அவரது கணித மேன்மையின் முழுத் தகுதியையும் அறிய வில்லை! அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் [University of Illinois] கணித வல்லுநர், புரூஸ் பெர்ன்ட் [Bruce C. Berndt] ராமானுஜத்தின் கணிதக் குறிப்பு நூலைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார். அதற்குப் பிறகுதான், ராமானுஜத்தின் நூதனக் கணிதப் பணிகள் யாவும் கணிதத் துறையினர் கையாளப் பயன்படும்.

பின்னால் ஒரு முறை ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் ஒப்பிட்டு ஹார்டி கூறியது; ராமானுஜத்தின் திறனுக்குத் தகுதி மதிப்பு 100 அளித்தால், லிட்டில்வுட்டுக்கு 30, தனக்கு 25 மட்டுமே! அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80! ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை! “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி! ராமானுஜத்தின் கணிதப் படைப்புகள் யாவும் மெய்யானவை என்றும், அவரது கணித மெய்ப்பாடுகள் தன்னைப் பிரமிக்க வைத்து முற்றிலும் வென்று விட்டதாகவும், ஹார்டி கருதுகிறார். அவை யாவும் பொய்யானவையாக இருந்தால், ஒரு மேதை தன் கற்பனையில் அவற்றை உருவாக்கி யிருக்க முடியாது, என்றும் கூறுகிறார்!

1917 ஆம் ஆண்டில் ராமானுஜன் லண்டன் F.R.S. [Fellow of Royal Society] விருதையும், டிரினிடி கல்லூரியின் ஃபெல்லோஷிப் [Fellow of Trinity College] விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும்பெரும் இந்த இரண்டு கௌரவப் பட்டங்களை முதன்முதலில் முப்பது வயதில் பெற்ற இந்தியன் ராமானுஜன் ஒருவரே! ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது! வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது! முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது! அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை! அடிக்கடி சானடோரியத்துக்கு [Sanatorium] ராமானுஜன் போக வேண்டிய தாயிற்று. அப்படிப் போய்க் கொண்டிருந்தாலும், அவரது புதியக் கணிதப் படைப்புகள் பேரளவில் பெருகிக் கொண்டுதான் இருந்தன!

1919 ஆம் ஆண்டில் போர் நின்று அமைதி நிலவிய போது, நோய் முற்றி இங்கிலாந்தில் வாழ முடியாது, ராமானுஜன் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் காசநோயைக் குணப்படுத்தச் சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை! நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை! தனது 32 ம் வயதில், இந்தியக் “கணிதச் சுடர்விழி” [Maths Icon] ராமானுஜன், 1920 ஏப்ரல் 26 ம் நாள் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்கு ஏகினார். உயிர் நழுவிச் செல்லும் கடைசி வேளை வரை அவர் கணிதத் துறைக்குப் புத்துயிர் அளித்ததை, இன்றும் அவரது இறுதிக் குறிப்பு நூல்கள் காட்டுகின்றன.

ஆயுள் முழுவதையும் கணிதப் பணிக்கு அர்ப்பணம் செய்து, வாலிப வயதிலே மறைந்த, ராமானுஜத்தின் அரிய சாதனைகளுக்கு ஈடும், இணையும் இல்லை என்று, அவர் பிறந்த தமிழகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்! கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம்! ராமானுஜன் கற்றது கடுகளவு! கணித்தது கால் பந்தளவு! என்று சொன்னால், அப்புகழ்ச்சி சற்றும் அவருக்கு மிகையாகாது