Wednesday 11 July 2012

நீதி இலக்கியம் : ஏலாதி


இந்நூல் கொலை, களவு, பொய், காமம், கள் ஆகியவற்றை போக்கிடும் சமண மதத்தின் ஐந்து ஒழுக்கங்களை கூறுகிறது. புலால் உண்ணாமை, சூதா டுதல், புறங்கூறாமை, பிறன் மனை விரும்பாமை போன்றவற்றையும் புகட்டு கிறது. பொதுவாக எளிமையாக இனிய தமிழில் பாடல்கள் இருந்தாலும், வட மொழிச் சொற்கள் கலந்துள்ளதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந் நூலின் முடிவில் தமிழாசிரியர் மகனார் மாக்காயனார் மாணாக்கர் கணிமேதை யார் செய்த ஏலாதி முற்றிற்று என்று கூறப்பட்டுள்ளது. பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றான திணை மாலை நூற்றைம்பது என்ற நூலை இயற்றியதும் இவரே.

பதினெண்கீழ்க்கணக்கு நூல் களில் ஒன்றான ஏலாதி கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. களப்பிரர் ஆட்சிக்காலத்தில் தோன்றியது. இதன் ஆசிரியர் கணிமேதாவியார் ஆவார். இவர் கணிமேதையார் என்றும் அழைக் கப்படுகிறார். கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கணப்படி வெண்பாவால் குறிப் பாக நேரிசை வெண்பாவால் ஆனது. நான்கடி கொண்ட வெண்பா பாடலில் இரண்டாவது அடியின் நான்காவது சீர் தனிச்சொல் பெற்று வருவது நேரிசை வெண்பா எனப்படும். சிறப்புப்பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் எனும் 2 பாடல் களுடன் மொத்தம் 82 பாடல்களை கொண்டது ஏலாதி.

ஏலம் முதலிய ஆறுவகை மருந்துப் பொருள் கொண்ட சூரணம் (பொடி) ஏலாதி என்று குறிப்பிடப்படும். ஏலம் ஒரு பங்கும் இலவங்கப்பட்டை இரண்டு பங் கும் சிறு நாவல் பூ மூன்று பங்கும் மிளகு நான்கு பங்கும் திப்பிலி ஐந்து பங் கும் சுக்கு ஆறு பங்குமாகச் சேர்த்துப் பொடியாக்கிச் செய்யப்படுவது ஏலாதி சூரணம் ஆகும். இம்மருந்து மக்களின் உடல் நோயைப் போக்கி வலிமையை யும் வனப்பையும் தரும். அதுபோல் ஏலாதி நூல் உள்ளத்தை வலிமை யாக்கி வாழ்க்கைக்கு நல்வழிகாட்டியாய் அமையும். இதன் ஒவ்வொரு பாடலும் ஆறு கருத்துக்களை கூறுகிறது.


ஏலாதியின் தற்சிறப்புப் பாயிரத்தில் “அறு நால்வர் ஆய்புகழ்ச்சேவடி ஆற் றப்/பெருநாவலர் பேணி வணங்கி - பெறுநால்/ மறைபுரிந்து...” என்று கூறப் பட்டிருப்பதால் இருபத்தி நான்கு தீர்த்தங் கரர்களுடைய சேவடியைத்தாங்கிய நால் வரை வணங்கி என்பது சமணசமயத்தின் பெருமையைப் புகழ்பாடுவது அதன் மதச்சார்பை உணர்த்தினாலும், வேறு சில பாடல்கள் வைதீக சமயத்தின் கருத் துக்களை எடுத்துக் கூறுகின்றன.

இல்லறத்தைப் பற்றியும் வீடுபேறு அடையும் துறவறத்தைப் பற்றியும் கணி மேதாவியார் அழகாக பாடல்கள் இயற்றி யுள்ளார் என்று சிறப்புப்பாயிரம் கூறு கிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது தமிழ் முதுமொழி. இளமை போகாது, பிணி அண்டாது, மூப்பு வாராது, சாவு நிகழாது என்று சொல்ல முடியுமா அதுஎல்லாம் இயற்கை நீதி. ஆயினும் உடம்பைப் பேணினால் உயிரை நீண்டநாள் காக்க லாம் அல்லவா? நோய்நொடியின்றி வாழ உடலை வலிமையாக்க உடற் பயிற்சி செய்ய வேண்டும் என்கிறார் கணிமேதாவி.

"எடுத்தல் முடக்கல் நிமிர்த்தல் நிலையே
படுத்தலோடு ஆடல் பகரின் - அடுத்து உயிர்
ஆறுதொழில் என்று அறைந்தார் உயர்ந்தவர்
வேறு தொழிலாய் விரித்து (69)"

கையை நிலத்திலே ஊன்றி உடலை மேலே தூக்கும் தண்டால், கைகால் களை முடக்கி இருத்தலாகிய ஆசனம், நிமிர்ந்து நிற்றல், தலைகீழாக நிற்றல், படுத்துச் செய்யும் பயிற்சி, குதித்தல் முதலிய பயிற்சிகளைச் செய்தால் உடல் உறுதிபெறும் உயிர்திண்மையுறும்.

தவம் எளிது; தானம் அரிது... என் றும் சாவது எளிது; சான்றோனாதல் அரிது... என்றும் பலவும் இரண்டு (3,39) பாடல்களில் கூறுகிறார். இடையழகும் தோள் அழகும் செல்வத்தின் அழகும் நடைஅழகும் நாண்உடை அழகும் கழுத்து அழகும் அழகல்ல; எண்ணோடு எழுத்தின் அழகே அழகு(75) என்கிறார். இது சமணப் பள்ளியின் கல்விச் சிறப்பை கூறுவது தானே.

21 பாடல்களில் மன்னனுக்கு உரிய மாண்புகள், தகுதிகள், செயல்கள் பற் றிக் குறிப்பிடுகிறார்.அமைச்சர், தூதுவர் போன்றோர் பற்றியும் குறிப்பிடுகிறார். 7 பாடல்களில் வீடுபேறு அடைதல் குறித் துக் கூறுகிறார். 2 பாடல்களில் (30, 31) 12 வகைப் பிள்ளைகள் பற்றிக் கூறு கிறார். இது பார்ப்பன குலத்தின் வைதீக நெறியின்படி இல்லறவாழ்க்கை, முறை தவறிய வாழ்க்கை, நெறியற்ற ஆண், பெண் உறவினால் உருவாகும் குழந் தைகள் பற்றி கூறப்படுகிறது.

கணவனுக்குப் பிறந்தவன் (ஒளரதன்), கணவன் இருக்கையில் பிறனுக்குப் பிறந்தவன் (கேத்திரசன்), திருமணம் ஆகாத பெண்ணுக்குப் பிறந்தவன் (கானீனன்), பரத்தமைத் தொழிலில் பிறந்தவன் (கூடோத்து பன்னன்), விலைக்கு வாங்கப்பட்டவன் (கிரீதன்), கணவன் இறக்க மறுமணமா கிப் பிறந்தவன்(பௌநற்பவன்), சுவீ காரம் எடுத்துக் கொள்ளப்பட்டவன் (தத் தன்), திருமணத்தின் போதே கருவிலி ருந்து பிறந்தவன்(சகோடன்), கண் டெடுத்து வளர்க்கப்பட்டவன்(கிருத்திரமன்), மகளுக்குப் பிறந்தவன்(புத்திரிபுத்திரன்), பெற்றோர்களால் கைவிடப்பட்டு, பிறரால் வளர்க்கப்படுபவன்(அபவித்தன்), காணிக்கையாக வந்தவன்(கிருதன்) என்று ஏலாதி பன்னிரண்டு வகை களைக் குறிப்பிடுகிறது.



No comments:

Post a Comment