Wednesday 11 July 2012

முகப்புத்துணர்ச்சிக்கு ஏற்ற "மாம்பழ ஃபேசியல்"!!!

கோடைக்காலங்களிலும் சரி, மற்ற சாதாரண நேரங்களிலும் சரி, சருமமானது வெயிலில் அலைவதால் மிகவும் சூடாகவும் மற்றும் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும் மாறி இருக்கும். இவ்வாறு இல்லாமல், சருமமானது அழகாகவும், பொலிவோடும் இருக்க வெயிலில் செல்லாமல் தான் இருக்க வேண்டும். இவ்வாறு வெளியே செல்லாமல் எத்தனை நாட்கள் தான் வீட்டிலேயே இருக்க முடியும்? ஆகவே இதற்காக கடைகளில் விற்கும் பல கிரீம்களை வாங்கி முகத்திற்குப் பயன்படுத்துகிறோம். அப்போது கிரீம்கள் தடவியதும் நன்றாக இருக்கும். ஆனால் மாலையில் பார்த்தால் முகமானது பொலிவிழந்து இருக்கும். இதுவரை மாம்பழங்களை சாப்பிடத்தான் செய்திருக்கிறோம். அப்படிப்பட்ட மாம்பழங்களை வைத்து ஃபேசியல் செய்தும், முகங்களை பொலிவாக்கலாம். அது எப்படியென்று படித்துப் பாருங்களேன்...


1. மாம்பழங்களின் சதைப்பகுதியை வைத்து முகம் மற்றும் கழுத்தில் தேய்க்கலாம். மாம்பழத்தில் உள்ள சாற்றானது, சருமத்தில் உள்ள களைப்பை நீக்கி, சருமத்திற்கு குளிர்ச்சியை தருகிறது. ஆகவே மாம்பழ சதைப்பகுதியை எடுத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அதனை குளிர்ந்த நீரில் அலசவும். வேண்டுமென்றால் முதலில் பாலில் முகத்தை அலசி, பிறகு நீரில் அலசலாம்.

2. முகத்தில் உள்ள மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தை நீக்க "மாம்பழ தயிர் ஃபேஸ் பேக்"-ஐ தினமும் அல்லது வாரத்திற்கு 3 முறை செய்யலாம். அதற்கு முதலில் மாம்பழச் சதையை எடுத்து அரைத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் தண்ணீரில் கழுவவும். வேண்டுமென்றால் அதனை கைகளிலும் செய்யலாம். இதனால் பழுப்பு நிறமானது போய்விடும்.

3. மாம்பழச் சதையை எடுத்து கூழ் போன்று செய்து கொள்ளவும். பிறகு அதில் முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி நன்கு கலக்து கொள்ளவும். பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் தேனை ஊற்றி முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலசி, சிறிது சோப்பு போட்டு கழுவ வேண்டும். இல்லையென்றால் முட்டையின் நாற்றம் முகத்திலேயே இருக்கும். இதனால் முகமானது பொலிவு பெறும்.

4. ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் மாம்பழக் கூழ், 3 டீஸ்பூன் ஓட்ஸ், 2 டீஸ்பூன் பாதாம் பவுடர் மற்றும் 3-4 டேபிள் ஸ்பூன் கிரீம் சேர்த்து நன்கு கலந்து முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் முகத்தில் இருந்து நீங்கி முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

இவ்வாறெல்லாம் செய்து பாருங்கள் முகமானது பொலிவோடு இருப்பதோடு, புத்துணர்ச்சியோடு இருக்கும்.

No comments:

Post a Comment