Monday 30 July 2012

சிகரத்தை எட்ட சிரமப்படு..!!!


*உண்மை என்னும் பாதையில் இருந்து அணுவளவும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனம் செலுத்துங்கள்.

* அமைதி என்னும் துறைமுகத்தை அடைவதற்கு முன் பெரும்புயல்களையும், அலைகளையும் சமாளித்துத் தான் ஆக வேண்டும்.

* கடுமையான சோதனைகளை எதிர்கொள்ளாமல் மனிதன் சிகரத்தை எட்டிப் பிடிக்க முடியாது.

* மற்றவர்களுக்கு நன்மை செய்பவன் தர்மவழியில் செல்கிறான். தீமை செய்பவன் பாவவழியைத் தேர்ந்தெடுக்கிறான். அதற்கான பலனை அவரவர் பெறுவது உறுதி.

* வாழ்வில் ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். லட்சியத்தை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். அதற்கு மாறான எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள்.

* எப்போதும் நேர்மையைப் பின்பற்றுங்கள். விடா முயற்சியுடன் போராடுங்கள். உண்மையாக உழையுங்கள். தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள். லட்சியத்தை நிச்சயம் அடைந்து விடுவீர்கள்.

» விவேகானந்தர் 

இ‌ந்‌திய நாக‌ரிக‌த்‌தின் அடி‌த்தள‌ம் தமிழ் நாகரிகமே:


கோவை ஞானி என்று அறியப்படும் கி.பழனிச்சாமி தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் தீவிர சிந்தனையாளராகவும், கோட்பாட்டாளராகவும், திறனாய்வாளராகவும் இயங்கி வருபவர்.

தமிழின் புதிய இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர். தமிழ் நிலத்திற்கேற்ற தமிழ் மார்க்சியம் என்ற சிறப்பைச் செய்தவர் என ஆய்வாளர்களால் மொழியப்படுபவர். நுட்பமான இலக்கிய உணர்வும், பேரிலக்கியங்களைத் திறந்த மனதுடன் அணுகும் பண்பும் கொண்டவர். ‘நிகழ்’ என்ற சிற்றிதழை தமிழில் புதிய இலக்கியத்திற்கான களமாக பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். இதுவரை 24 திறனாய்வு நூல்களையும் 12 தொகுப்பு நூல்களையும் 4 கட்டுரைத் தொகுதிகளையும் 2 கவிதை நூல்களையும் எழுதியிருக்கிறார்.

இவருடைய நீண்ட கால தமிழ்ப் பணிக்காக விளக்கு விருது, தமிழ் தேசியச் செம்மல் விருது, தமிழ் தேசிய திறனாய்வு விருது, பாரதி விருது ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன. இவரின் வாழ்நாள் இலக்கியப் பணிக்காக கனடாவில் இருந்து செயல்படும் தமிழிலக்கியத் தோட்டம் இயல் விருதை வழங்கிச் சிறப்பித்தது.

தமிழக அரசு நடத்திய செம்மொழி மாநாடு குறித்த சர்ச்சை பரவலாக இருந்த நேரத்தில், அதனை சாதமாகப் பார்த்து, செம்மொழி மாநாட்டில் எதிர்பார்பது என்ன? என்ற தலைப்பில் கோவையில் ஒரு கருத்தரங்கை நடத்தி, தமிழ் மொழிக்கு இன்றைய நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை பல ஆய்வாளர்களிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று அதனை தொகுத்து வெளியிட்டார்.

செம்மொழி மாநாடு நடந்து முடிந்துவிட்டது. அத்தோடு தமிழைப் பற்றிய பேச்சும் நின்றுபோய்விட்டது என்று கருதக்கூடிய சூழலில், செம்மொழி மாநாடு குறித்தும், அதனால் தமிழிற்கு ஏதாவது பயன் ஏற்பட்டதா என்பது குறித்தும் தமிழ்.வெப்துனியா.காம் தமிழறிஞர் கோவை ஞானியை நேர்கண்டது.

தமிழ்.வெப்துனியா.காம் இணையத்தளத்தின் ஆசிரியர் கா.அய்யநாதன், கோவை ஞானியை அவரது இல்லத்தில் அக்டோபர் 24ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சந்தித்துச் செய்த நேர்காணல் இது.

கோயம்புத்தூரில் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டிற்கு முன்னால், இந்தச் செம்மொழி மாநாட்டில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறி ஜூன் மாதம் 13ஆம் தேதி கோவை அண்ணாமலை மன்றத்தில் நீங்கள் ஒரு இலக்கியக் கருத்தரங்கை நடத்தினீர்கள். அந்தக் கருத்தரங்கில் தமிழ் மலர் 2010 வெளியிடப்பட்டது. அந்த மாநாட்டில், தாங்கள் நடத்திவரும் தமிழ் நேயம் இதழின் சார்பாக 'செம்மொழி மாநாட்டில் நாம் எதிர்பார்ப்பது என்ன?' என்கின்ற ஒரு அறிக்கையை புத்தமாக வெளியிட்டிருந்தீர்கள். இப்பொழுது மாநாடு முடிந்து அ‌தி‌ல் பல்வேறுபட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அந்த மாநாட்டைப் பொறுத்தவரை உங்களுடைய எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு நிறைவேறியுள்ளது?

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் கோவையில் பிரமாண்டமான அளவிற்கு பெரும் செலவில், 600 கோடி என்று சொல்கிறார்கள், சிலர் 1,000 கோடி என்று சொல்கிறார்கள், 300 கோடி என்று சுருக்கமாகச் சொல்வதும் உண்டு. இந்த அளவிற்கு பெரிய செலவில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்களோடு பொதுமக்களுக்கு மிகச் சிறந்த மிகப் பெரிய அளவில் கண்காட்சி, ஊர்வலம் முதலியவற்றோடு அந்த மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. கலைஞர் நடத்தக்கூடிய மாநாடு என்பது இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டங்களோடு நடைபெறும் என்பதில் நமக்கும் ஒன்றும் வியப்பில்லை.

அதேபோல இவ்வளவு பெரும் தொகை செலவழிக்கப்பட்டதும் சற்ற அதிர்ச்சியாக இருந்தது. குறைந்த அளவிற்கு ரூ.300 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கூட, இந்த ரூ.300 கோடி ரூபாயை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செலவழித்திருக்க முடியும். பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறை என்று சொல்லப்பட்டிருக்கிறது. தஞ்சைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இவைகளெல்லாம் மிகச் சிறப்பான முறையில் தமிழியல் ஆய்விற்காகவே தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகள். இவைகளுக்கு பொருளாதார நெருக்கடி இருப்பதாக ஓயாமல் சொல்லப்படுகிறது. இந்தத் தொகையில் ரூ.10 கோடி, 20 கோடி அல்லது 50 கோடி என்று ஒதுக்கியிருந்தாலும் கூட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமோ, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமோ சிறப்பான முறையில் இன்னும் தங்களுடைய செயல்களை வரையறை செய்துகொண்டு திறம்பட செயல்பட முடியும்.


ஆனால் அடிப்படையில் இங்கிருக்கக் கூடிய மிகப்பெரிய கோளாறு என்னவென்று சொன்னால், தமிழியல் ஆய்வு என்று சொல்லி ஒரு திட்டத்தை வகுப்பதற்கும், அதை நேர்மையான முறையில் உரிய முறையில் செயல்படுத்துவதற்கு தகுதியான அறிஞர் பெருமக்கள் தொகை இன்று மிக மிகக் குறைந்துவிட்டது. செம்மொழி நிறுவனத்தோடு செயல்படக்கூடிய இராமசாமி அவர்களோடு நான் பேசுகிறபோது, பலமுறை இதைச் சொல்லியிருக்கிறார். யாரும் இல்லை என்கிறார் அவர். நான் ஒரு 10 தமிழ் அறிஞர்கள் பெயரைச் சொல்லிக் கூட அவரைக் கேட்டேன். அதற்கு அவர் சொல்கிறார், நீங்கள் சொல்பவர்கள் எல்லாம் தமிழ் அறிஞர்கள் என்பதில் எனக்கு மறுப்பில்லை. ஆனால், ஒரு திட்டத்தை எடுத்துக்கொண்டு அதையே முழு மூச்சான முறையில் அதில் ஈடுபட்டு செய்யக்கூடியவர்கள் என்று இவர்களில் எவரும் இல்லை என்று சொல்கிறார். 

இரண்டொருவர் விதிவிலக்காக இருக்கலாம். அந்த இரண்டொருவரை வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய தமிழியல் ஆய்வு கொண்டு செல்வது என்பது மிக மிகக் கடினம், முடியாது. அப்ப நீங்கள் அரசு தரப்பில் என்ன பெரிய குறைபாடுகளைச் சொன்னாலும் கூட, உலக அளவிலான செம்மொழி என்பதைப் பற்றி மெய்ப்பிப்பதற்கோ அல்லது ஆய்வு செய்வதற்கோ, தற்கால தமிழனுடைய நிலையை உயர்த்துவதற்கான ஆய்வுகளைச் செய்வதற்கோ தகுதியானவர்கள் என்று சொல்வதற்கு நமக்குள் பெரும்பாலும் இல்லை. கடந்த 30 ஆண்டுகளுக்கு இடையில் தமிழ் அறிஞர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் தங்களுடைய ஆய்வுத் திறனை பெருமளவு குறைத்துக்கொண்டார்கள்.

இன்று பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறைகளில் செயல்படக் கூடிய பேராசிரியர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம், பெரும்பாலானவர்கள் தமிழியல் ஆய்விற்கான தகுதியை தங்களுக்குள் வளர்த்துக்கொள்ளவே இல்லை. வா.சொ.மாணிக்கம் என்று சொல்கிறோம், தெ.பொ.மீ. என்று சொல்கிறோம். இன்னும் பல முன்னாள் தமிழ் அறிஞர்களைப் பற்றிப் பேசுகிறோம். அவ‌ர்கள்தான் தமிழியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக முன் மாதிரியாக இன்று நமக்கு இருக்கிறார்கள். அவர்களைப் போல அவர்களுடைய நெறியில் தமிழியல் ஆய்வை மேம்பட்டு செலுத்துவதற்கான தகுதியோடு இன்று தமிழ்ப் பேராசிரியர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் பலர் இல்லை.

அரிதாக அங்கொருவர், இங்கொருவர் என்று இருக்கலாம். ஆனால், அவர்களையெல்லாம் இந்த செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்குள் கொண்டுவரவே இல்லை. அவரவர்கள் ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் இருக்கிறார்கள். சிலர் வயதான நிலையிலும் செய்துகொண்டு இருக்கிறார்கள். இப்படியிருக்க, இந்த தமிழியல் ஆய்விற்கு தகுதியுடையவர்கள் என்று சொல்லித் தெறிவு செய்து, அவர்களை பல்லாண்டுகள் அந்தத் துறையில் ஈடுபடுத்தி வளர்ப்பதற்கான முயற்சி என்பதற்கான திட்டம் என்பது நமக்கு வேண்டும். அப்படியொரு திட்டம் தற்பொழுது இல்லை. உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டில் இதுபற்றி பேசப்பட்டதாகவும் இல்லை. இது ஒன்று.

இரண்டாவது, இந்தச் சொம்மொழி மாநாட்டில் உண்மையிலேயே கடை‌சியில் கலைஞர் அறிவித்தபடி, கணினி பற்றி பலவற்றை சொன்னார் அவர். பெரிய, மிகச் சிறந்த கண்காட்சியே நடத்தப்பட்டது. கணினி துறையில் எப்படியே 10, 20 ஆண்டுகளாக தமிழ் அறிஞர்களில் இளைஞர்கள் ஒரு சிலர் பெரிய அளவில் ஈடுபட்டு மிகப்பெரிய காரியங்களை செய்து வருகிறார்கள். அரசு ஆதரவு இல்லாத நிலையிலும், அரசு இந்த கணினி வளர்ச்சித் துறையில் ஈடுபட்ட நிலையிலும் அவர்களுடைய செயல்களெல்லாம் மிக வியப்பூட்டும் வகையில் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தீர்களென்றால், கணினி என்று சொல்லக்கூடியது, கணினித் தமிழ் என்று சொல்லக்கூடியது மிகச் சிறப்பான வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை அரசு அறிந்திருக்கிறது. அதற்கான முறையில் சில உதவிகள், திட்டங்களையெல்லாம் அரசு வைத்திருப்பது, மாநாட்டில் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டது பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. உண்மைதான்.

மூன்றாவது, உலகத் தமிழ்ச் செம்மொழி ஆய்விற்கு ஒரு தமிழ்ச் சங்கம் மதுரையில் அமைப்பதாக கலைஞர் பேசியிருக்கிறார். நிதி ஒதுக்கிடுவது முதலியற்றையெல்லாம் பற்றி பேசியிருக்கிறார். அதற்கான தொடக்க முயற்சிகள் இதுவரை செய்யப்படவில்லை. ஏற்கனவே எம்.ஜி.ஆர். காலத்தில் அறிவிக்கப்பட்ட இந்த உலகத் தமிழ்ச் சங்கம் எப்படி செயல்படாமல் இருந்ததோ, அதைப்போல இந்தச் தமிழ்ச் சங்கமும் செயல்படாமல் இருந்துவிட வேண்டாம். அதற்கான திட்டம் இல்லாத நிலையில் அதைப்பற்றி பெரிதாகப் பேசுவதற்கு இல்லை.

இன்னொன்று, உண்மையில் பார்த்தீர்களென்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் தமிழ் இப்பொழுது நுழைந்திருக்கிறது. பெரிய ஆச்சரியம் என்னவென்று சொன்னால், இந்த மாதிரி மருத்துவத் துறையிலும், பொறியியல் துறையிலும் தமிழை நுழைக்க முடியும், அதற்கான தமிழ்க் கலைச்சொற்கள் ஏராளமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்திலும், தஞ்சைப் பல்கலைக்கழகத்திலும் பொறியியல் நூல்கள், மருத்துவத் துறை சம்பந்தப்பட்ட பல நூல்களையெல்லாம் திறம்பட எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நாம் பொறியியல் துறையிலும், மருத்துவத் துறையிலும் தமிழைத் தொடங்கிவிட முடியும் என்று சொல்லி குறைந்த அளவிற்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிஞர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் அமைச்சர்களுக்கோ, முதல்வருக்கோ தெரியாத செய்திகள் அல்ல. ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேலாகவே, சொல்லப்போனால் 20 ஆண்டுகளுக்கிடையில் இதை புகுத்தியிருக்க முடியும். ஆனால், ஆங்கிலத்திற்கு பெருமளவு ஆதரவு, தமிழுக்கு மிகக் குறைந்த அளவிற்கு ஆதரவு ஏதோ அரசியல் களத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய முறையில் தமிழைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டிருந்தார்களேயொழிய ஆங்கிலத்திற்குத்தான் இன்று வரையிலும் பள்ளி வட்டாரங்களில் முதன்மையான மரியாதை கொடுக்கிறார்கள். மெட்ரிக் பள்ளிகளை இவர்கள் கைவிட முடியவே முடியாது, கைவிட மாட்டார்கள். அதில் பெரிய முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது. அதில் பல அமைச்சர்கள் முதலியவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

அந்த மெட்ரிக் பள்ளிகளெல்லாம் ஆங்கிலத்தை வளர்க்கிற நோக்கத்தோடுகள் பெரிய அளவிற்கு மிகவும் அதிகாரத் தோரணையோடு செயல்பட்டு வருகின்றன. இந்த மெட்ரிக் பள்ளிகளை கட்டுப்படுத்தக்கூடிய திறனோ, தேவை என்ற உணர்வோ அரசிற்கு அறவே இல்லை. அதனால்தான் கடைசியாகக் கூட கோவிந்தராஜ் ஆணையம் அரசுடன் முரண்பட்டு நீதிபதி கோவிந்தராஜ் தன்னுடைய பதவியில் இருந்து விலகுகிறார். அரசுடன் ஏன் முரண்பட்டார் என்று சொன்னால், மெட்ரிக் பள்ளிகளை அரசு கட்டுப்படுத்த விரும்பவில்லை என்கிற உணர்வு அவருக்கு ஏற்பட்டிருந்தாக வேண்டும். அதனால்தான் அவர் விலகுகிறார். இதுபோன்று மெட்ரிக் பள்ளிகளை வைத்துக்கொண்டு நீங்கள் தமிழைக் காப்பாற்ற முடியுமா என்று சொன்னால் அது முடியாது. இதுவொரு பக்கம்.

அடிப்படையில் நான் சொல்வது என்னவென்று சொன்னால் இன்று வரை மைய அரசோ, இந்தியாவின் பல்கலைக்கழகங்களில் இருக்கக் கூடிய அறிஞர் பெருமக்களோ சமஸ்கிருதம்தான் இந்தியாவினுடைய மூல மொழி, முதல் மொழி, இந்திய மொழிகளுக்கெல்லாம் சமஸ்கிருதம்தான் தாய்மொழி என்ற நம்பிக்கைகளை இன்றும் அவர்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மையல்ல, இந்திய நாகரிகத்தினுடைய அடித்தளம் தமிழ் நாகரிகம்தான்.

அறிஞர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் ஏற்கனவே சிலவற்றை சொல்லியிருக்கிறார்கள். இந்திய நாகரிகத்தினுடைய மேலடுக்கு ஆரிய நாகரிகம் என்றே வைத்துக்கொண்டாலும் கூட, அடித்தளம் முழுவதும் தமிழ் நாகரிகம் அல்லது திராவிடர் நாகரிகம் என்பதை அறிஞர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்?

இந்திய நாகரிகத்தின் அடிப்படையில் என்றால் வேளாண்மையைச் சொல்ல வேண்டும், நீர்ப் பாசனங்களைச் சொல்ல வேண்டும், கால்நடைகளைப் பற்றி சொல்ல வேண்டும், மருத்துவம் பற்றி சொல்ல வேண்டும். இசை பற்றி, தர்க்கம் பற்றி, மெய்யியல் பற்றி, அறிவியல் பற்றி சொல்ல வேண்டும். இந்தியாவில் இருக்கக் கூடிய வேளாண்மையில் தொடங்கி அறிவியல் வரை அனைத்துத் தளங்களிலும் விளங்கியது தமிழ் நாகரிகம் மட்டும்தான். இவற்றில் ஆரியத்தினுடைய பங்களிப்பு என்பது எள்ளளவும் கிடையாது. வேளாண்மையிலோ, கட்டடக் கலையிலோ, சிற்பத்திலோ, இசையிலோ, மருத்துவத்திலோ, கணிதத்திலோ, தர்க்கத்திலோ தமிழினுடைய பங்களிப்புதான் பெரும் பகுதி உண்டோயொழிய ஆரியத்தின் பங்களிப்பு என்பது பெயரளவிற்கு அங்கொன்று, இங்கொன்று இருக்கலாம் அவ்வளவுதான்.

ஆனால் இந்திய வரலாறு பற்றி ஆய்வு என்று சொன்னவர்களெல்லாம் என்ன சொல்லித் தொலைத்தார்கள் என்றால், எல்லாவற்றையும் சமஸ்கிருதத்திற்கு கொண்டு போய் சேர்த்தார்கள். சமஸ்கிருதம்தான் இந்தியாவினுடைய நாகரிகத்தினுடைய ஆதாரம் என்று சொன்னார்கள். ஆனால், அது முற்றிலும் பொய் என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் சொல்வதற்கு இல்லை. அத்தனையும் தமிழ் நாகரித்தோடு தொடர்புடையனதான். வட இந்தியாவில் ஹிந்தி போன்று ஏராளமான மொழிகள் இருக்கின்றன. அந்த மொழிகளைப் பார்த்தீர்களென்றால் - பல அறிஞர்கள் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள் - சமஸ்கிருதச் சொற்கள் அங்கும் இங்கும் நிறைந்து கிடந்தாலும் கூட, அந்த வட இந்திய மொழிகள் அத்தனையிலும் இருக்கிற வாக்கிய அமைப்பு என்பது தமிழினுடைய வாக்கிய அமைப்புதான். 

தமிழ் வாக்கியத்தில் நம்முடைய மக்கள், 'காலையில் எழுந்து டிஃபன் பண்ணி, ஃப்ரண்டை சந்தித்துத் திரும்பினேன்' என்று சொன்னால் அந்த வாக்கியம் முழுவதும் தமிழ், இடையில் ஆங்கிலச் சொற்கள். அதேபோலத்தான் வட இந்திய மொழிகள் முழுவதிலும் வாக்கிய அமைப்புகள் உள்ளன. வாக்கிய அமைப்பு என்பது ஒரு மொழியில் எவ்வளவு வலுவான அம்சம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. வாக்கியம் முழுவதும் தமிழாக இருக்கிறது. இடையில் ஆங்காங்கு சமஸ்கிருதம் ஏராளமாகச் சேர்ந்திருக்கிறது. இந்த வகையில் பார்த்தீர்களென்றால் இன்று இந்தியாவில் தமிழுக்கு மரியாதை இல்லை, தமிழனுக்கு மரியாதை இல்லை.

ஆனால், செம்மொழி ஆய்வு என்கிற முறையில் நீங்கள் இந்த ஆதாரங்களைத் தேடித் தொகுத்து, இதில் தமிழஞர்கள் பெரிய அளவில் ஈடுபடுத்த முடியும் என்று சொன்னால், இந்திய நாகரிகத்தின் அடித்தளம் தமிழ் நாகரிகம் என்பதை மெய்ப்பிக்க முடியும். மா.பி.கந்தையா சொல்லிக் கொண்டிருந்தார், க.ப.வே. சொல்லிக் கொண்டிருந்தார். இன்னும் பல அறிஞர்கள் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை மெய்ப்பிக்க முடியுமானால், இந்திய அரசியலில், இந்தியாவினுடையபொருளியலில் தமிழனுக்கான இடம் கிடைக்கும்.

இன்று மைய அரசிற்கு அடி வருடியாக, அடிமையாகச் செயல்படக் கூடியவன்தான் மைய அரசினுடைய மரியாதைக்குரியவன். மைய அரசில் செல்வாக்கு பெறவேண்டும் என்று சொன்னால், மைய அரசு, சமஸ்கிருதம், வட இந்திய பெருமைகளையெல்லாம் ஒப்புக்கொண்டவன்தான் இருக்க முடியும்.

சொல்லப்போனால், தமிழ்நாட்டில் பெரியார் இருக்கிறார், திராவிட அரசியல் இருக்கிறது. சமஸ்கிருத மறுப்பு இருக்கிறது. இதனை வட இந்தியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இதெல்லாம் எவ்வளவு பெரிய உண்மைகள் என்று சொன்னாலும் கூட வடக்கில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

இந்திய அரசியலில் தமிழனுக்குரிய மரியாதையை, செல்வாக்கை, அழுத்தத்தைப் பெறுவது என்று சொன்னால், தமிழைச் செம்மொழி என்று ஏராளமான ஆதாரங்களோடு மெய்ப்பிப்பதில் அடங்கியிருக்கிறது என்கிற முறையில்தான் தமிழைச் செம்மொழி என்று அறிவித்த உடனேயே எங்களைப் போன்றவர்கள் பெரிதும் விரும்பினார்கள். ஆனால், அதற்கான திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா என்று சொன்னால் எதுவம் இல்லை. இந்தத் திட்டங்களை நீங்கள் முன்வைக்கும் போது, இன்றைக்கு நடக்கும் இந்திய அரசியலிற்கு, சமஸ்கிருத மொழிக்கு, ஆரிய ஆதிக்கத்திற்கு, வருணாச்சரமத்திற்கு எதிராக நீங்கள் செயல்படுகின்றீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் என்று அர்த்தம். இதை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா இல்லையா என்பது மிகப்பெரிய ஒரு கேள்வி.

இன்னொன்று என்னவென்று சொன்னால், திராவிட மொழிகள் என்று சொல்லப்பட்டவை மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலியவைகளெல்லாம், தமிழைச் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே கன்னட மொழிக்காரர்களும், தெலுங்கு மொழிக்காரர்களும் ஆத்திரப்பட்டார்கள், எங்களுக்கும் செம்மொழி தகுதி உண்டு, அறிவிக்க வேண்டும் என்று. ஆகவே செம்மொழியினுடைய காலவரையறை 1,000 ஆண்டு என்று நிர்ணயிக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது.

உலக அளவில் செம்மொழி என்று சீன மொழியோ, கிரேக்க மொழியோ ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று சொன்னால், அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது. அரசு அதிகாரம், அரசு அனுமதி என்பது தேவையே கிடையாது. நம்ம இந்தியாவில் மட்டும்தான் மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஒரு கோரிக்கையைக் கிளப்பி கடைசியில் அதனை ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறோம். இதுவொரு பிறழ்வு என்று வைத்துக்கொண்டாலும் கூட, அந்த வரையறையை நாம் மீறவேண்டியதில்லை.

கன்னட மொழியோ, தெலுங்கு மொழியோ தங்களுக்கும் செம்மொழி தகுதி உண்டு என்று சொல்லும்போது, இல்லையென்பது உண்மையென்றாலும் கூட, உண்டு என்று ஏற்றுக்கொண்டாலும் கூட, அவர்கள் செய்யக்கூடிய ஆய்வு என்னவாக இருக்க வேண்டும்? பேராசிரியல் நாச்சிமுத்து, தற்பொழுது டெல்லியில் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் பணியாற்றக் கூடியவர். அவர் மிகவும் தெளிவாகச் சொல்கிறார். தமிழுக்கு செம்மொழி தகுதி என்பது கன்னட மொழி பேசுகிறவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆந்திர மொழி பேசுகிறவர்கள், மலையாள மொழிப் பேசுகிறவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


ஏனென்று சொன்னால், செம்மொழி என்பது தமிழனுக்கு மட்டும் உரியது இல்லை. உங்களுக்கும் சேர்த்துதான் இது செம்மொழி. ராமசாமி அவர்கள் கூட ஒருமுறை சொன்னார், கன்னட அறிஞர்களைப் பார்த்துச் சொல்கிறார், கன்னட மொழி ஆய்வு என்று செய்யத் தொடங்கினீர்களென்றால் கடைசியல் நீங்கள் தமிழுக்குப் போய்ச் சேருவீர்கள். உண்மையிலேயே மலையாள மொழியோ, கன்னட மொழியோ, தெலுங்கு மொழியோ தம்மைச் செம்மொழி என்று சரியான முறையில் ஆய்வு செய்வார்களேயானால் அவர்கள் தமிழுக்கு வந்துச் சேருவார்கள். அதனா‌ல், இந்த வகையான ஆய்விற்கு நாம் ஊக்கமளிக்க வேண்டும்.

இன்னொன்றைச் சொல்லி எனது கருத்தை முடித்துக்கொள்ள விரும்புகிறேன். அது, தமிழ் மொழி ஆய்வு என்பது தமிழனுக்கு விடுதலை தரவேண்டும் என்று நான் சொன்னேன். தமிழியல் ஆய்வு என்பது மக்களோடு சம்பந்தப்பட்டது. காவிரி, வைகை, தாமிரபரணியோடு, இங்கிருக்கக்கூடிய நீரோடு, நிலத்தோடு, காடுகளோடு, இங்கிருக்கக் கூடிய வாழ்க்கையோடு, இங்கிருக்கக் கூடிய மக்கள் வாழ்க்கை மேம்பாட்டோடு சம்பந்தப்பட்டது.

அப்படியிருக்கும்போது, இங்கு காவிரி இல்லை, வைகை இல்லை, தாமிரபரணி இல்லை என்று சொன்னால், இங்கு தமிழனுக்கு என்ன வாழ்வு? தமிழ் மொழிக்குதான் என்ன வாழ்வு? அதேபோல, இங்கிருக்கக் கூடிய நீர்நிலைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் வந்து உட்கார்ந்துகொண்டு, அவர்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தால் தமிழனுடைய வாழ்வு, தமிழ் மக்களுடைய வாழ்வு என்ன ஆகும்?

செம்மொழி ஆய்வு என்பது சொல்லக்கூடிய இந்தத் திசையில் போய் கடைசியில், தமிழ்நாடு தமிழனுக்குரிய நாடாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு அரசியலில் தமிழனுக்குத்தான் செல்வாக்கு, தமிழக பொருளியலை நிர்ணயிக்கக் கூடியவன் தமிழனாகத்தான் இருக்க வேண்டும், தமிழ் மக்களாகத்தான் இருக்க வேண்டும். தமிழனுடைய நீர்நிலைகள் மற்றும் இயற்கைச் செல்வங்களையெல்லாம் அந்நியருக்கு நாம் விட்டுக்கொடுக்க முடியாது.

இதெல்லாம் கூட ஆய்வினுடைய நோக்காக இருக்க வேண்டும். தமிழறிஞர்கள் என்று சொல்லக்கூடியவர்களுக்கு இந்த அக்கறையும் வேண்டும். ஏதோ மொழி ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி என்பது மக்களிடத்தில் இருந்து விடுபட்டு, நீரோடு நிலத்தோடு விடுபட்டு, உழவர்களோடு, நெசவாளிகளோடு, கலைஞர்களோடு, சிற்பத்தோடு, சமயத்தோடு விடுபட்டுச் செய்யக் கூடிய ஆய்வாக இருக்கவே முடியாது. இவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஆய்வுதான் தமிழனுக்கான விடுதலையைப் பற்றிய ஆய்வாகவும் இருக்க முடியும். இதுதான் என்னுடைய பொதுவான ஒரு கருத்து.

உண்மையைப் பின்பற்றுங்கள்..!!!

*அடக்கப்படாத மனமும், தீயநெறியில் செல்லும் குணமும் நம்மை எப்போதும் கீழ்நோக்கியே இழுக்கும். ஆனால், அடங்கிய மனம் நமக்கு விடுதலை அளிக்கும்.

* உலக நன்மைக்காக உங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராய் இருங்கள்.


* கள்ளம் கபடம் இல்லாத ஒழுக்கமுள்ள நாத்திகன், வஞ்சகனைக் காட்டிலும் சிறந்தவன்.

* இதயம் பரந்து விரிந்திருந்தால் மட்டுமே ஒருவனிடம் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானத்தால் அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் வந்துவிடும்.

* மனத்தூய்மை உடையவனே கடவுளுக்கு மிக நெருங்கியவன்.

* யாருடைய மனம் ஏழை மக்களுக்காகத் துன்பத்தில் வருந்துமோ, அவரே மகாத்மா.

* இந்த மண்ணில் பிறப்பு எடுத்திருக்கும் நீங்கள், அதற்கு அடையாளமாக ஏதாவது ஒரு நல்ல பதிவை விட்டுச்செல்லுங்கள்.

*உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் அதையே பின்பற்றிச் செல்லுங்கள். கபடதாரியாகவோ, கோழையாகவோ இருப்பதால் பயனில்லை.

» விவேகானந்தர் 

சவால்களை சந்தியுங்கள்

சிந்தனைகள் » மகாத்மா காந்தி

* கருத்து ஒற்றுமை கொண்டவர்களிடம் விட்டுக்கொடுப்பது பெரிதல்ல. முரண்பட்ட கருத்து உடையவர் என்றாலும் விட்டுக் கொடுப்பதே சகிப்புத்தன்மை. 

* கோழைத்தனம் நீங்குவதற்காக சிலர் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். சவால்களை எதிர்கொண்டு வாழக் கற்றுக் கொள்வதே சரியான மருந்து.

* கடவுள் பொறுமையோடு அனைத்தையும் சகித்துக் கொள்கிறார். ஆனால், அவருடைய பொறுமைக்கும் எல்லையுண்டு. 

* கோயில்கள் வெறும் கண்காட்சிக்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல. தெய்வீக உணர்வை மக்களிடம் பரப்பும் பணியை மேற்கொண்டிருக்கின்றன. 

* தீய செயல்களைச் செய்பவரை விட, தீய எண்ணங்களுக்கு இடம் தருபவன் அதிக தீமையைச் செய்து கொண்டிருக்கிறான்.

* குறை இல்லாத மனிதன் இல்லை. ஆனால், எதிராளியின் குறைகளை மட்டுமே மிகைப் படுத்துகிறோம். இதனால் வெறுப்புணர்வு அதிகமாகிறது. 

» காந்திஜி

அன்பே உலகில் உயர்ந்தது..!!!

* பிறருக்கு உதவுவது என்பது நம்மை நாம் பண்படுத்திக் கொள்வதற்காக தரப்படுகின்ற வாய்ப்பு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

* இறைவன் ஒரு பெரிய காந்தக் கல்லினை போல இருக்கிறார். நாமெல்லாம் இரும்பு துகள்களைப் போல அவரால் எப்போதும் கவரப்பட்டு இருக்கிறோம். 

* வாழ்வில் ஏற்படும் கொடிய போராட்டங்கள், கொந்தளிப்புகள் அனைத்தும், முடிவில் இறைவனை அடைந்து அவருடன் ஒன்று கலப்பதற்காகவே. 

* எண்ணத்தையும், புத்தியையும், ஆராய்ச்சி மனப்பான்மையையும் கடக்கும்போது தான் கடவுளை நோக்கி முதல் அடியை எடுத்து வைக்கிறீர்கள்.

* தன்னலம், கணக்குப் பார்த்தல், பேரம்பேசுதல், அர்த்தமற்ற பயம் போன்றவற்றில் இருந்து கடந்து வந்தவனால் மட்டுமே முழுமையான பக்தி செலுத்த முடியும்.

* அன்பே உலகை அரவணைத்துச் செல்லும் உயர்ந்த குணம். அன்பு நிறைந்திருக்குமிடத்தில் குறுகிய சிந்தனைகள் உண்டாவதில்லை.

 » விவேகானந்தர்

மகளிர்க்கு ஏற்ற மகத்தான உணவு..!!!

பெண்களுக்குத் தேவையான சத்துக்களைப் பெற உதவும் உணவுப் பொருள்கள் பற்றி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. மாதவிடாய் சமயத்திலும், நிற்கும் சமயத்திலும் அவர்களுக்குத் தேவையான சத்துக்களை வழங்கும் இந்த உணவுப்பொருள்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், மேற்கூறிய பிரச்னைகளை எளிதில் வென்றுவிடலாம்.

அத்திப்பழம்: பெண்களின் உடல் நலத்தில் முக்கியப் பங்காற்றுகிறது இந்த அத்திப்பழம். இதில் பல்வேறு வைட்டமின்களும், தாதுப்பொருள்களும் அடங்கியுள்ளன. அத்திப்பழத்தில் உள்ள இரண்டு சத்துக்கள் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. 

1.இரும்புச்சத்து- மாதவிடாயின்போது பெண்களுக்கு உதவுகிறது. 
2.கால்சியம்- மெனோபாஸ் நிலையில் இருக்கும் பெண்களுக்கு, எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். அத்திப்பழத்தை உட்கொள்வதின் மூலம் எலும்புகள் பலம் பெறும்.

பால்: பாலில்தான் கால்சியம் சத்துகள் அதிகம் உள்ளது. கால்சியம், வைட்டமின் "டி' சத்துக்களும் உள்ள உணவுப்பொருள்களை பெண்கள் உட்கொண்டால் மாதவிடாய் சமயத்திற்கு 5 -11 நாள்கள் முன்பு உடலில் ஏற்படும் சோர்வு, கோபம், வயிற்றுப்போக்கு, தலைவலி போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.

நன்னீர் மீன்கள்: நன்னீர் மீன்களில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதில் ஓமேகா-3 என்ற ஃபேட்டி அசிட் உள்ளது. இந்த ஒமேகா-3 மாதவிடாய் சமயத்திற்கு முன்பு ஏற்படும் மனஅழுத்தம், உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கிறது. கர்ப்பிணிகள் இதனை உட்கொண்டால் கருவில் உள்ள குழந்தையின் அறிவுத்திறன் தூண்டப்படுகிறது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கீரைகள்: இதன் பெயரைக் கேட்டாலே பல பெண்களுக்கு அலர்ஜி. கீரைகளில்தான் அதிக வைட்டமின்களும் தாதுப்பொருள்களும் அடங்கியுள்ளன. கீரைகளில் மாங்கனீசியம் எனப்படும் சத்து அதிகமாக காணப்படுவதால் மாதவிடாய் சமயத்தின் போது ஏற்படும் கை, கால் வீக்கம், எடை அதிகரித்தல் போன்றவற்றை நீக்கும்.

தக்காளி: "லைகோபென்' எனும் வகை சத்துப்பொருள் தக்காளியில் அதிகம் காணப்படுகிறது. இந்த லைகோபென் சத்தானது மார்பகப் புற்றுநோய் மற்றும் இதயநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

விவேகானந்தர் » தைரியத்துடன் செயலாற்றுங்கள்


*கண்டனம் செய்யும் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக் கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள். 

* ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய சுமை முழுவதும் தங்கள் தோள்களின் மீதே சுமத்தப்பட்டிருப்பதாக எண்ணி செயலாற்றுங்கள். 

* வேதாந்தம் கூறும் தர்மநெறி முறைகளை வீட்டுக்கு வீடு எடுத்துக் கூறுங்கள். ஒவ்வொருவரிடமும் இருக்கும் தெய்வீகத்தன்மையை உணர வழிகாட்டுங்கள்.

* கொழுந்து விட்டெரியும் ஆர்வத்தை நாலாபுறங்களிலும் பரவ விடுங்கள். பரபரப்புடன் பணியில் ஈடுபடுங்கள். எப்போதும் சுயநலம் அற்றவர்களாக இருங்கள்.

* நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு அஞ்சாதீர்கள். எழுந்து நின்று துணிவுடன் நடை போடுங்கள்.

* தூய்மையுள்ளவராக நீங்கள் இருந்தால், தூய்மை இல்லாததைப் பார்க்க முடியாது. உண்மையில் உள்ளே இருப்பது தான் வெளியிலேயும் தெரிகிறது.
» விவேகானந்தர்

உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்..!!!

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். மேலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவினால் ஏற்படும் நோய் தான் அனீமியா. ஆகவே அத்தகைய இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண்ணும் உணவுகளே. இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள் :

பீட்ரூட்: இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இது ஒரு சிறந்த இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள். ஆகவே இதனை டயட் இருப்பவர்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் இரத்த அணுக்களும் அதிகரிக்கும். அதிலும் பீட்ரூட்டின் இலைகளில் வைட்டமின் ஏ-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் இருக்கின்றன.

கீரைகள்: காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், டர்னிப், காலிஃபிளவர், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை. மேலும் இவை அனைத்தும் உடல் எடையை கட்டுபடுத்துவதுடன், உடலில் இரத்த அணுக்களையும் அதிகரிக்கும். அதிலும் கீரைகள் செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும்.

இரும்புச்சத்து: இது உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து. இந்த சத்து எலும்புகளை மட்டும் வலுவாக்குவதில்லை, உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால் அனீமியா நோயானது வரும். ஆகவே அந்த இரும்புச்சத்துக்கள் இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இருக்கும்.

பாதாம்: இரும்புச்சத்து மற்ற உணவுப் பொருட்களை விட பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுண்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச்சத்தானது கிடைக்கும்.

பழங்கள்: அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடச் சொல்வார்கள். இவற்றை உண்பதால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பழங்களில் தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்பதால் உடலில் இரத்த அணுக்களின் அளவு அதிகரிப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமல், உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக வாழலாம்.

விவேகானந்தர் » உன்னால் முடியும் தோழா!


* ஒரு செயலின் முடிவில் உண்டாகும் பலனில் கருத்தைச் செலுத்தும் அளவிற்கு அதைச் செய்யும் முறையிலும் கவனம் இருக்க வேண்டும். இதனால் குறிக்கோளை எளிதாக எட்ட முடியும். 

* எதையும் கைமாறு கருதாமல் பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சி காணுங்கள். ஏனெனில், எல்லா உயிர்களிலும் கடவுள் நிறைந்துஇருக்கிறார்.

* ஒவ்வொரு மனிதனும் ஒரு சொந்த லட்சியத்தை வைத்துக் கொள்வது அவசியம். சிந்தனை முழுவதும் குறிக்கோளைச் சார்ந்ததாக இருக்கவேண்டும்.

* என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று நீங்கள் நம்பினால், வாழ்வில் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை உள்ளவர்களாகத் திகழ்வீர்கள்.

* உலகத்தின் பரப்பைப் போல உங்கள் இதயத்தை பரந்து விரிந்ததாகச் செய்யுங்கள். அப்போது எங்கும் கடவுளின் பேராற்றல் வியாபித்திருப்பதைக் காண்பீர்கள்.

* மனிதனைச் சுற்றி எத்தனையோ பந்தங்கள் கட்டுகளாக சுற்றியிருக்கின்றன. கடவுள் ஒருவரால் மட்டுமே அவற்றை அவிழ்த்து விடுவிக்க முடியும். 

»விவேகானந்தர்

தமிழர்களின் அறிவியல்..!!!


பிறப்பும் வாழ்வும்

“உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று
 உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே”

- திருமந்திரம் – 725

இதே போல இந்த உடம்பினுள் 96 வேதியியல் தொழில்கள் அல்லது செயல்பாடுகள் நடக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள். அதாவது இந்த உடம்பும் உள்ளமும் இதனுள் இயங்குகிற உயிரும் ஆரோக்கியமாக செயல் புரியும்போது இந்த 96 செயல்களும் பிசகின்றி சீராக இயங்குகின்றன.

“முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்
செப்ப மதிளுடையக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிளுடையக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஒட்டெடுத் தார்களே!”

தமிழ் சித்தர்கள் பழங்காலத்திலேயே உடல், உயிர் என்ற இரண்டிலும் மிகத் தெளிவாக
இருந்திருக்கிறார்கள். அந்த தெளிவில்தான் மானுடம் மேம்படச் சிந்தனைத்திறனை அறிவியல் பார்வையோடு சித்தர் இலக்கியத்தின் மூலம் இன்றும் வியந்து நிற்கிற வகையில் காட்டியிருக்கிறார்கள்.

உழவு: 
கரும்பு தமிழரின் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாகவும் இருந்திருக்கிறது. திருவிழாக் காலங்களில் வீடுகளை வாழை மரத்தாலும், கரும்புக் கழிகளாலும் (தோகையோடு கூடிய கரும்பு) கட்டி அலங்காரம் செய்தார்கள். வெல்லம், சர்க்கரை விற்ற வணிகருக்கு பணித வாணிகர் என்பதே பெயர். பணித வாணிகள் நெடு மூலன் என்ற பெயரை மதுரைக்கருகில் இருக்கிற குகையொன்றில் பிராமி எழுத்தின் அமைப்பில் கண்டுபிடித்தனர் ஆய்வாளர்கள். 

இது கி.மு 2200 ஆண்டுகளுக்கு முந்தியது என கடைச்சங்கச் செய்தி தெரிவிக்கிறது. அப்படியாயின் அதற்கு முன்பே தமிழர்களுக்கு கரும்பு பயிர் செய்கையும், கரும்பிலிருந்து வெல்லம், சர்க்கரை எடுக்கிற தொழில் நுட்பமும் தெரிந்திருக்கிறது. அதே காலகட்டத்தில் ஐரோப்பியர் களுக்குக் கரும்பு தெரியாது. கி.பி.15ஆம் நூற்றாண்டில் தான் கரும்பும் வெல்லமும் மேலை நாட்டினருக்குத் தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான் அவர்கள் சீனியை கொண்டு வந்தார்கள்.

“ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்று அதன்காப்பு” (குறள் 1038)

இன்றைக்கு விஞ்ஞானம் விரிவடைந்தாலும் இன்றும் இதே ஐந்து கோணங்களில்தான் விவசாயம் நடக்கிறது. மேலும் சாதாரண பழமொழிகளில் கூட விவசாய அறிவியலை வைத்திருக்கிறான். இதற்கேற்ப ஏறக்குறைய 20 பழமொழிகளை எடுத்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

உடை:
“உடுக்கைக் இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் கலைவதாம் நட்பு” (குறள் 788)
இன்றைக்கு ஆங்கிலப் பெயரோடு பயன்படுத்தப்படுகின்ற உள் மற்றும் வெளி ஆடைகளுக்கானத் தமிழ்ப் பெயர்களில் தனித்துவமும் இருக்கின்றன. அவற்றைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். பெண்களின் உடை: பிரா - கச்சு, மிடி - வட்டுடை, ஜாக்கெட் - வடகம்,
(வடகத்தோடு உருத்ததூசும் - கம்ப ராமாயணம்)
பெட்டிகோட் - பாவாடை, சல்வார்கமீஸ் - தழை,
மினி - சிதர், சுவிம்மிங் டிரஸ் - புட்டகம், (நீந்துடை - புட்டகம் பொருந்துவ புனைவாதுரும் - பரிபாடல்) கவுன் - கொய்யகம், ஜட்டி - அரணம், நைட்டி - இரவணி, டூபீஸ் - ஈரணி, வெட்டிங்டிரஸ் - கூறை. ஆண்களின் உடை: பனியன் - குப்பாயம்
(துதி மயிர்த்துகில் குப்பாயம் - சீவகசிந்தாமணி) பேண்ட் - கச்சம், டை - கிழி,
பெல்ட் - வார், சட்டை - மெய்ப்பை.

ஆசிரியர் மற்றோர் இடத்தில்...
“அதே நேரத்தில் வேட்டியை ‘வேஷ்டி’ என்றும்,
சேலையை சாரி என்றும் பேசுவதும்,
எழுதுவதும் மொழியே இல்லாதவர்களின்
வேலையாகும்” எனச் சாடுகிறார்.

உணவு :
‘உணவு மனிதனுக்கு அவசியமானது. அது உடல் வலிமை பெறவளர்ச்சியுற இன்றியமையாதது. அதனால்தான் புறநானூறு என்ற பழந்தமிழ் நூலில்,

‘‘நீரின்றி யமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம் (புற-18; 17-20)
எனச் சொல்லப்பட்டது. உண்டி கொடுத்தோரை (உணவு) உயிர் கொடுத்தவர் என்பதே அப்பாடல்.

குறிஞ்சி நிலம்: தேன், தினைமா, கிழங்கு, பறவைகள், ஊன் வேட்டையில் கிடைத்த உணவுகள். முல்லை நிலம்: சோளம், கேழ்வரகு, நெய், தயிர், வெண்ணெய், மோர், அவரை, துவரை

மருத நிலம் : பல்வகைச் சோறு, காய்கறிகள் நெய்தல் நிலம்: மீன், நண்டு, இறால், கணவாய், காய்ந்த மீன் (கருவாடு), நெய் கலந்த ஊன், வறுத்த ஊன், சுட்டமான், பால்சோறு, நெய்சோறு என அறுசுவை உணவையும் உண்டனர். இதுபோக ஈழத்துணவும் வந்ததாகப் பட்டினப்பாலைபகர்கிறது.

இதிலிருந்து இரு செய்திகள் தெரிகின்றன. ஒன்று உணவு வகைகள் சங்க காலத்தில் இறக்குமதியாகி இருக்கின்றன. இன்னொன்று ஈழத்திலிருந்து தமிழர்களே தமிழர்களுக்கு உணவு ஏற்றுமதி செய்திருக்க வேண்டும்.

இலக்கியம்:
ஒரு பிரெஞ்சு பேராசிரியரிடம் ‘எது இலக்கியம்’ என்று கேட்டபோது வந்தபதில்: ‘‘நாட்டை, மொழியை, மக்களை முன்னே வைத்து செய்யப் பெறும் எழுத்துக்களே தலைசிறந்த இலக்கியங்கள்’’ என்பதே. தமிழில் தமிழை, மனிதர்களை உயர்த்தும் இலக்கியங்களே அதிகமாக இருக்கின்றன. ஆகவேதான் அதன் ஆளுமை இன்றைய விஞ்ஞான எந்திர வாழ்விலும் ஊடுறுவ முடிகிறது.

ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கிய நூல்கள் முதன்முதலில் அச்சேறிய வரலாற்றைக் குறிப்பிட்டு இருக்கிறார். ‘திருக்குறள் மூலபாடம்’ எனும் தலைப்பில் முதன்முதலில் கி.பி.1812இல் அச்சான திருக்குறள் பற்றியும், அதன் முகப்பு அட்டை, கடவுள் வாழ்த்துப் பகுதி இவைகளை படத்துடனும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

வாசிப்பு மனிதனை பூரணமாக்கும். மேலைநாட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூல் படிக்கிறார்கள். நூல் படிக்கப் படிக்க அறிவின் வேல் கூர்மையாகும். அந்த அறிவைப் பெறுவதற்குத் தாய்மொழி தமிழ் மிகமிகஅவசியமாகும்.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு. போப் அந்நூலின் முன்னுரையில் ‘வழக்கொழிந்து மாண்டு போன மொழிகளாலும், பயன்மிக உள்ளது. சாம்பலின் தலைபோல் அவற்றின் தன்மை வாழ்கின்றது. ஆயினும், இன்றும் வாழும் பண்டைய மொழிகளே சிறப்பு உடையன. வைரம் பாய்ந்த அம்மரங்களிலிருந்து பூக்க இருக்கும் கனிகள் எத்தனையோ! எனவே, தமிழர்கள் தங்கள் மொழி குறித்துக் கொண்டுள்ள தாழ்வு மனப்பான்மையினை ஒழிக்க வேண்டும்.’

தமிழிசை:

"12ஆம் நூற்றாண்டு முதல் தோன்றிய சமஸ்கிருத சங்கீத நூல்கள் சங்கீதத்திற்கு இலக்கணம் கூற முயன்றாலும் பழக்கத்தில் உள்ள இசை மரபிற்கும் இவர் கள் கற்பித்த இலக்கணத்திற்கும் தொடர்பின்றி இசை உலகில் பெரும் குழப்பங்கள் உண்டு பண்ணி வந்துள்ளன. ஆகவே, இசையின் அடிப்படை இலக்கணத்தை நாடி நம் தமிழிசையின் பிறப்பிடத்திற்குச் செல்ல வேண்டியவர்கள் ஆகிறோம்'' என்று இசைப் பேரரசி டாக்டர் சேலம் எஸ். விஜயலட்சுமி கூறியிருக்கிறார். இவரின் கருத்தை உறுதி செய்வதுபோல் இசைப்பேரறிஞர் வா.சு.கோமதிசங்கரய்யர் ‘இசைத்தமிழ் இலக்கண விளக்கம்’ எனும் நூலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புகழ்பெற்ற தமிழ்நாட்டுப் பண்களின் சிறப்பை உணர்ந்த வடநாட்டு பண்டிதர் ஒருவர் முப்பத்தாறு பண்களையும் எடுத்து அவற்றிற்கு வட மொழிப்பெயரை இட்டுப் பரப்பி உள்ளார். ஆனால் ஒன்பது நிறங்களின் (இராகங்கள்) பெயர்களை மாற்றாமல் விட்டமையால் அவைகள் தமிழில் இருப்பதே, அவை தமிழிலிருந்து பெயர்ந்தது என்பது உறுதியாகிறது.

தாவரவியல்:

‘‘ஒன்று அறிவதுவே உற்று அறிவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.’’
(தொல்காப்பியம் - பொருள் - 1526)

தாவரங்கள் உயிருள்ளவை என்றும், அவற்றுக்கு ஓர் அறிவே உள்ளது என்றும் முன்னோடியாகத்தான் கண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தாவரங்களுக்கு பல்வேறு வகையான காரணப்பெயர்களையும் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் மரம், செடி, கொடி, புல், பூண்டு என்பன அடங்கும். இவற்றையும் தமிழனின் தாவர விஞ்ஞானம் காரணத்தோடு அறிவியல் பார்வையில் வகைப்படுத்துகிறது. ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை இலையாகாமல் ‘கீரை’ ஆகின்றது. மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயராகிறது. அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள் ‘புல்’ ஆகின்றன. மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் ‘தழை’. நெல், வரகு முதலியவற்றின் இலைகள் ‘தாள்’ ஆகும். சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர் ‘மடல்’. கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘தோகை’ என்றாகின்றது. தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகள் ‘ஓலை’ என்றே சொல்லப்படுகின்றன. இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல, தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கிறது.

மண்ணியல்:

மண்ணைக்கூடப் பழந்தமிழ் மக்கள் 
1. ஆற்றுமண்,
2. சேற்றுமண்,
3. காட்டுமண், 
4. உதிரிமண், 
5.மலை மண், 
6. குளத்துமண் 
என வகைப்படுத்தினார்கள்.

இது தொடர்பாக வேறொரு செய்தியும் உண்டு. கோயில் கட்டப்படும் நிலத்தை நன்கு உழுது அதில் நவதானியம் விதைக்க வேண்டும். அந்த விதை மூன்று நாட்களில் முளைத்தால் அது நல்ல நிலம்; ஐந்து நாட்களில் முளைத்தால் ஏறக்குறைய நல்ல பூமி; எட்டு நாட்களுக்குப் பிறகு முளைத்தால் அது மட்டமான பூமி.