Saturday 14 July 2012

நீதி இலக்கியம் : ஆசாரக்கோவை


பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஆசாரக்கோவை வடமொழி நூலைத் தழு வியது. அந்த மூலநூல் ஆரிடம் எனும் பெய ருடையது. அதுமட்டுமல்லாது வேறு சில நூல்களின் கருத்துக்களும் கொண்டதாக விளங்குகிறது- ஆசாரக்கோவை. ஆசாரம் என்றால் ஒழுக்கம். கோவை என்றால் கோர்வை(யாகச் சொல்லப்படுதல்) அல்லது தொகுப்பு. இதன் ஆசிரியர் கயத்தூர் பெரு வாயில் முள்ளியார் ஆவார்.

இவரது காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. எனி னும் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, ஆசாரக்கோவையில் சொல்லப்படும் கருத் துக்கள் எந்த நூலில் உள்ளது; அந்த நூல் எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று ஆய்ந்து, அது எட்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார். செல்வக்கேசவராய முதலியார் பதிப்பித்துள்ள ஆசாரக்கோவையின் முன்னு ரையில் அந்நூல் பொருள்கள் பெரும்பான்மை யாய் வடமொழியிலுள்ள சுக்ரஸ்மிருதியில் இருந்து தொகுத்தவை என வடநூல் புலவர் கள் கூறுகின்றனர் என்று எழுதியுள்ளார். இலக்கண விளக்கப்பாட்டியலில் 141ம் சூத் திர உரையில் மொழி பெயர்த்தலுக்கு உதாரண மாக ஆசாரக்கோவை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நூலை இயற்றிய பெருவாயின் முள் ளியார் தாமும், ‘ஆரிடத்துத் தானறிந்த மாத் திரையான் தொகுத்தான் ஆசாரக்கோவை’ எனத் தொகுத்த செய்தியை உணர்த்துகிறார். எனவே இந்நூல் வடமொழி நூலின் வழித் தோன்றியது என்பதில் சிறிதும் ஐயப்பாடில்லை. ஆனால் ஆரிடத்து என ஆசிரியர் பொதுப் படக் கூறுவதாலும், தொகுத்தான் என விவ ரித்ததாலும் ஸ்மிருதிகள் பலவற்றிலிருந்து ஆசாரக்கோவை பொருள்கள் தொகுக்கப் பெற்றன என்று கொள்ளுதலே தக்கது.

சுக்ரஸ்மிருதி எனப்படும் உசனஸ் ஸம்ஹிதைக்கும் ஆசாரக்கோவைக்கும் கருத்தொற்றுமைகள் பல காணப்படுகின்றன என்று வையாபுரியார் தமது இலக்கியச் சிந் தனைகள் தொகுதி- 1ல் மூன்றாம் பகுதியான பதினெண் கீழ்க்கணக்கு பகுதியின் 4வது அத்தியாயமான ‘காலத்தை அறுதியிடும் சான்றுகள்’ கட்டுரையில் கூறியுள்ளார். அத்துடன் பல்வேறு உதாரணங்களையும் எடுத்துக் காட்டுகிறார்.

கீழ்க்கணக்கு நூல் என்பதால் வெண்பா வால் இயற்றப்பட்டுள்ளது என்றாலும் மூன் றடி சிந்தியல் வெண்பா, நான்கடி - அளவடி - இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, ஐந்தடிக்கும் மேலான பஃறொடைவெண்பா ஆகியவற்றால் ஆனது ஆசாரக்கோவை. இதன் முதல் பாடலே பஃறொடைவெண்பாதான்.

தனக்குப் பிறர் செய்த நன்றியை மற வாமையும் பொறுமையும் இன்சொல்லும் எல்லா உயிர்க்கும் துன்பம் தருபவற்றைச் செய்யாமையும் கல்வியும் ஒப்புரவை மிக அறிதலும் அறிவு உடைமையும் நல்ல இயல்பு உள்ளவர்களுடன் நட்புச் செய்தலும் என்ற இவ் எட்டு வகையும் அறிஞர்களால் சொல் லப்பட்ட ஒழுக்கங்களுக்கு காரணமாகும் என் பது பாடலின் பொருள்.

அடுத்தடுத்த பாடல்களில் வைகறை துயில் எழுதல், நீராடல், உடுத்தல், பல் துடைத்தல், உண்ணல்முறை, துயிலும் விதம், படிக்கத் தகாத நூல்கள், வழிபடுதல், தாம்பத்யம் உள்பட பலவகை ஆசாரங்களை இந்நூல் கூறுகிறது. இத்தகைய ஆசாரங் களை கடைப்பிடித்தால் அவர் அடையும் நன்மை என்ன என்று அடுத்த பாடலிலேயே சொல்கிறது.

எப்பொழுதும் ஒழுக்கத்தில் தவறாதவர் நற்குடிப்பிறப்பு, நீண்ட வாழ்நாள், பொருட் செல்வம், அழகுடைமை, நிலத்துக்கு உரிமை, சொல்லின் மேன்மை, கல்வி, பிணியின்மை எனும் எட்டுவகையினையும் அதற்குரிய இலக்கணங்களுடன் பெறுவர் என்கிறது.

மூன்றாவது பாடலில், தட்சணை கொடுத் தல், யாகம் செய்தல், தவம் செய்தல், கல்வி இந்த நான்கும், மூன்று வகைப்பட்ட நெறியில் நடந்து காப்பாற்றுக. அப்படி காப்பாற்றா விட்டால் - நடக்காவிட்டால் எல்லாமும் ஆகாது கெட்டுவிடும் என்கிறது.

பின்னர் பல பாடல்களில் பார்ப்பனர், பசு ஆகியவற்றை மதித்து நடத்தல், பாதுகாத்தல் உள்பட பலவற்றையும் கூறுகிறது. வைகறை யில் துயில் எழச் சொல்கிறது. நீராடச் சொல் கிறது. எல்லாம் சரிதான். ஆனால் கீழ் மக் களை தொட்டால், நீராட வேண்டும் என்கிறது.

தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை

உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது

வைகு துயிலோடு இணைவிழைச்சுக் கீழ் மக்கள்

மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்

ஐயுறாது ஆடுக நீர் (10)

தெய்வ வழிபாட்டுக்கு முன், கெட்ட கனவு கண்ட பின், உண்டதை வாந்தி எடுத்த பின், மயிர் களைந்தபின் (முடி வெட்டிய பின்), உண் பதற்கு முன், தூங்கி எழுந்த பின், புணர்ச் சிக்குப் பின், கீழ் மக்களின் உடம்பை தீண்டிய பின், மலஜலங் கழித்தபின் சந்தேகம் கொள் ளாமல் குளிக்க வேண்டும் என்கிறது.

கீழ்மக்கள் என்று இந்தப் பாடலில் கூறு வது போல் மற்ற இருபாடலில் புலைமக்கள் என்று சொல்லப்படுகிறது. அதே பாடலில் பார்ப்பனர் பற்றி உயர்வாகவும் கூறப்படுகிறது.

தலைக்கிட்ட பூமேலார் மோந்தபூச் சூடார்

பசுக்கொடுப்பின் பார்ப்பார் கைக்கொள்ளாரே -என்றும்

புலைக்குஎச்சில் நீட்டார் விடல் (90)

ஒருவர் தலையில் சூடிய பூவை அடுத் தவர் சூடக் கூடாது. அதேபோல் மோந்து பார்த்த பூவையும் சூடக்கூடாது. பசுவைக் கொடுத்தால் பிராமணர் வாங்க மாட்டார். புலையருக்கு எச்சிலை கொடுக்கமாட்டார். அதனால் இவற்றை விட்டுவிடுக என்பது பாடலின் பொருள்.

நல்லநாள், நேரம் பார்த்தல், அதற்கு பிராமணரை அணுகுதல் இப்போதும் இருக் கத் தானே செய்கிறது. இதை பிராமணரைத் தவிர மற்றவர்களும் செய்ய முடியும். ஆனால் அவர்கள் சொல்வதைக் கேட்கக்கூடாது. அதிலும் புலையர் வாய்ச்சொல்லை கேட் கவே கூடாது என்கிறது ஆசாரம்.

தலைஇய நற்கருமம் செய்யும்கால் என்றும்

புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் - தொலைவில்லா

அந்தணர்வாய்ச் சொற்கேட்டுச் செய்க- அவர் வாய்ச்சொல்

என்றும் பிழைப்பது இல (92)

இருதேவர், பார்ப்பார் இடையே போகக் கூடாது என்கிறது 31வது பாடல்.

இவை எல்லாம் அக்காலத்திய வருணா சிரமத்தின் தாக்கத்தை வலியுறுத்துகிற பாடல்கள் தானே.

கள் குடிக்கக் கூடாது, வேசியிடம் போகக்கூடாது, சூதாடக் கூடாது என்று மற்ற பல ஒழுக்கங்களை கூறுகிறது. 

புல்வெளி, விளைநிலம், ஆப்பி (சாணம்), சுடலை, பாதை(வழி), தீர்த்தம், தேவர் கோட் டம் (வழிபாட்டு இடம்), நிழல், ஆநிரை (பசுக் கள்) நிற்கும் இடம், சாம்பல் ஆகிய பத்து மீதும் எச்சில் துப்பக்கூடாது. மலஜலம் கழிக்கக் கூடாது என்று 32வது பாடல் சொல்கிறது. இது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் சிந்தனை என்று கொள்ளலாம்.

மற்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் அரசன் எப்படியிருக்க வேண்டும். எப்படி இருக்கக்கூடாது என்று சொல்கின் றன அல்லவா? ஆசாரக்கோவை மட்டும், அரசன் என்ன சொன்னாலும் அதை மறுக்கக் கூடாது, அரசன் செயலில் வெறுப்படையக் கூடாது என்கிறது.

காக்கை வெள் என்னும் எனின்(62) என்ற இந்தவரி, காக்கை வெள்ளை என்றா லும் ஆமாம் போட வேண்டும். அப்போது தானே பிழைப்பு நடக்கும் என்கிற பிராமணிய வாழ் வியல் நடைமுறை இதில் தெரிகிறது.

‘உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்கு’ என்பது ஆபஸ்தம்ப தர்மசூத்திரத்திலும் வசிஷ்டதர்ம சூத்திரத்திலும் வந்துள்ள கருத்து. அப்படி முடியாத நிலையில் ‘ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல’ என்பது கி.பி. 200-க்கு முன் தோன்றியதாகக் கருதப்படும் மனுதர்ம சாஸ்திரத்தில் வந்துள்ளது என்று பேரா.வையாபுரியார் பல்வேறு எடுத்துக்காட்டுகளை கூறுகிறார்.

ஈன்றாள் மகள்தன் உடன்பிறந்தாள் ஆயினும்

சான்றார் தமித்தா உறையற்க ஐம்புலனும்

தாங்கற்கு அரிதாக லான் (65)

எனும் இந்தப் பாடல், தாய், மகள், சகோ தரியே ஆனாலும் அவர்களும் பெண்தானே என்பதால் அவர்களுடன் தனித்து வசித்தல் கூடாது. ஏன் என்றால் ஐம்புலனை அடக்கு வது அரிது என்கிறது ஆசாரக்கோவை. 

No comments:

Post a Comment