Monday 11 June 2012

மூதேவி தெய்வமா அல்லது முதல் தேவியா: ஓர் ஆய்வு! வளம் தருபவளை புறக்கணிப்பது ஏன்..???


"தனிக் கல்லில் செதுக்கப்பட்ட குளிகன்: பழநி அருகே மூதேவி கோவில் கண்டுபிடிப்பு', என்னை இக்கட்டுரை எழுதத் தூண்டியது.இந்த தேவி, உண்மையில் மூதேவி இல்லை. இவள் பெயர், முதல் தேவி ஆகும். இவளை சமஸ்கிருதத்தில், "ஜேஷ்டா தேவி' என்று அழைப்பர். "ஜேஷ்டா' என்றால், முதல் என்று பொருள். தமிழில், "சேட்டை' என்று கூறுகின்றனர்.
தசமகா வித்யாவில், தூமாவதி என்கிற பெயரில், ஒரு தேவி பூஜிக்கப்படுகிறார். அவளை, தூம்ர வாராஹி என்றும், "ஜேஷ்டா' என்றும் குறிப்பிடுகின்றன, பலவித தாந்த்ரீக புத்தகங்களில் இதைக் காணலாம்.முதலில், தூம்ர வாராஹி என்பவள், சிருஷ்டிக்கு முன்பும், பிரளயத்துக்கு பிறகும், தொடர்ந்து இருப்பவள். "தூம்' என்றால், "புகை' என்று பொருள். பிரளயம் முடிந்த பிறகு, மிஞ்சி நிற்பது என்னவென்றால், புகை மட்டுமே. அவள், புகை மண்டலத்தையே விழுங்கி விட்டவள் என்று பொருளாகும்.
அதைப் போலவே, சிருஷ்டி ஆரம்பிக்கும் முன்பும், அதே புகை தான் முதலில் மேகத்திலிருந்து கிளம்பும். அதனால், முதலில் அவளே தோன்றுவதால், அவள், தேவர்களுக்கும் முன்னால் வந்தவள் என்று கருத்துக் கொள்ளப்படுகிறது. இந்த காரணத்தினால், அவள் முதல் தேவி என்று கருதப்படுகிறாள்.இரண்டாவது கருத்துப்படி, பாற்கடலிலிருந்து, லட்சுமி தேவி மேலே வருவதற்கு முன், இந்த தேவி வந்ததாகவும், அவளை சிவபெருமான் ஏற்றுக் கொண்டார் என்றும், அதன் காரணமாக அவளை, "தூம்ர காளி' என்று அழைக்கிறார்கள் என்றும் கருதப்படுகிறது. அந்த கோவில், காஷ்மீரில் கவர்னர் மாளிகைக்கு பின்னால், சிறிய குன்றின் மீது உள்ளது.


செல்வம் தருவாள்: ஆழ்வார்களில் ஒருவரான திருத்தொண்டரடி பொடியாழ்வார் காலத்தில், இந்த தேவி, முதல் தேவி என்றும், ஜேஷ்டா தேவி என்றும் கூறி பூஜிக்கப்பட்டாள். 
சமஸ்கிருத சொல்லான ஜேஷ்டா என்பதற்கு, தமிழில், "முதல் தேவி' என்று தான் பொருள். அவளை பூஜித்தவர்களுக்கு, நிறைய செல்வமும், பதவியும், பலவித சவுபாக்கியங்களும் அருளியதாக தெரிகிறது. அந்த கால கட்டத்தில், சமுதாய மக்களின் மனதை, வைஷ்ணவ சமயத்தில் திருப்புவதற்காக, அந்த தேவியை, தமிழில் சேட்டை என்றும், மூதேவியை எதற்கு பூஜை செய்வது, விஷ்ணுவும், நாராயணனும், லட்சுமியுமே பூஜை செய்ய உகந்த தெய்வம் என்று கூறி, மெல்ல அவர்களை நாராயண பெருமானின் சேவையில் சேர்த்துக் கொண்டதாகவும், பரவலான கருத்து உள்ளது.



தேவியின் பெயரான முதல் தேவி என்ற சொல், காலப்போக்கில், சொல் திரிந்து, மூதேவியாக மாறிவிட்டது என்று தெரிகிறது. அதற்கு உகந்தது போல, அவள் உருவமும் பெருத்த உடலோடும், பெருத்த வயிறு கொண்டும் செதுக்கப்பட்டு இருக்கிறது.
டில்லி நேஷனல் மியூசியத்தில், ஜேஷ்டா தேவி என்ற பெயருடைய பெரிய சிலை, தமிழ்நாட்டில் இருந்து தான் கொண்டு வரப்பட்டு, வைக்கப்பட்டுள்ளது.



எப்படி வர்ணிப்பது?தூமாவதி, அழுக்கு படிந்த உடலோடும், முகத்தோடும், தலையை வாராமல், கோரமாக தலை மயிர் கொண்டவளும், உடம்பு நீளமாகவும், வயிறு ஒட்டியும், கண்கள் இரண்டும் முழுமையாகத் திறந்து கொண்டு, கண்களாலேயே விழுங்கி விடுபவள் போன்றும் காட்சி அளிக்கிறாள்.மிகவும் முக்கியமாக, அவள் இரண்டு கைகளும், முறத்தைப் பிடித்துக் கொண்டு, புடைப்பது போல இருக்கின்றன. சில சமயங்களில், அவள் நின்று கொண்டும் புடைப்பது போல, சிற்பிகள் வடித்துள்ளனர். அவள் சவாரி செய்வது கழுதை மீது. அவளுடைய இடது மேல் கையில், ஒரு கொடி இருக்கும்; அதில், காகத்தின் வரைபடம் உள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடிகள், முறம் பிடித்துக் கொண்டு நிற்கிற அல்லது உட்கார்ந்து கொண்டு இருக்கும் தேவியைத் தான் பூஜை செய்கின்றனர். அவளை, பசி நிறைந்த தேவி என்று கூறி, பூஜை செய்கின்றனர்.



அந்த தேவியின் சிற்பத்தில், அவள் கையில் இருக்கும் முறத்தில், சிறிய சிறிய நெல் விதைகள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நெல் விதைகள், "ஆத்மா' என்றும், அவளை பூஜை செய்யும் ஆத்மாக்கள் சில, சரியான மனப் பக்குவமடையாததாகவும், சில பக்குவப்பட்டதாகவும் இருக்கும். அவள், பக்குவப்படாத ஆத்மாக்களை, கீழே முறத்திலிருந்து தள்ளிவிட்டு, சுத்தமான ஆத்மாக்களை, தன்னோடு சேர்த்துக் கொள்கிறாள்.



கழுதை வாகனம் :கழுதையின் மீது, அத்தனை துணிகளையும் மூட்டையாக கட்டி எடுத்துச் சென்று, சலவைத் தொழிலாளி துவைக்கிறார். மறுபடியும், அதே கழுதையின் மீது, துவைத்த துணிகளை மூட்டையாக கட்டிக்கொண்டு கிளம்புகிறார்.அதே மாதிரி தான், தூமாவதி அல்லது ஜேஷ்டா தேவி, பூஜையில் ஈடுபடும் ஆத்மாக்களை, துணி துவைப்பது போல, பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும், சோதனைகளையும் கொடுத்து, மனப் பக்குவப்படுத்துகிறாள்.அதில், அந்த ஆத்மாக்கள் திருந்தி விட்டால், தன் மடியில் எடுத்துக் கொண்டு விடுகிறாள். இந்த காரணத்தினால் தான், சில சில ஆத்மாக்கள், பல ஜென்மங்கள் எடுத்து, அவள் பூஜையை செய்ய முற்படுகின்றன.இன்னும் சொல்லப் போனால், "ஜேஷ்டா' என்கிற தூம்ர வாராஹியை பூஜை செய்ய, பூர்வஜென்ம புண்ணியம் இருக்க வேண்டும் என்று, சாஸ்திரம் கூறுகிறது.



காரணம், அந்த ஜேஷ்டா என்கிற தூமாவதி, தூம்ர வாராஹி, தூம்ர காளி என்ற பெயரில், மாயை என்றும், மகா நித்திரை என்றும், காள ராத்திரி, மகா ராத்திரி, மோஹ ராத்திரி என்றும், தேவி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.தூம்ர வாராஹியும், மகா வாராஹியும், ஒரே தேவியின் பெயர்கள். அவர்களின் அம்சங்களும், பணிகளும் வேறு. ஆனால், மூல சார ஸ்வரூபம் ஒன்றே தான். அவள், இரவு நேரம் பூஜிக்கப்படும் தெய்வமாகும். இந்த கருத் தை வைத்துக் கொண்டு தான், ஆழ்வார் அவளை, "மூதேவி' என்று கூறி தள்ளி விட்டாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது.


காகம்:ஜேஷ்டா அல்லது தூமாவதி என்பவள், வேறு யாரும் இல்லை. அவள் இறந்தவர்களோடு சம்பந்தப்பட்டவள். அவளே யமி ரூபம். அந்த தூமாவதி என்று கூறும் வாராஹியின் கோவில், புவனேஸ்வரில் உள்ளது. அவளுக்கு பெயர் யமி என்று சுவரில் எழுதப்பட்டுள்ளது.தமிழில், சேட்டை என்ற பெயராகும். சேட்டை அல்லது ஜேஷ்டா அல்லது தூம்ர வாராஹி அல்லது மகா வாராஹி ஸ்ரீமன் நாராயணனின் வராஹ அவதாரத்தில், அவருடைய சக்தியாக இருக்கிறாள். அவள் மிகவும் நியாயமான தீர்ப்பை தரும் தர்ம தேவதை.

நன்றி : தினமலர் 

No comments:

Post a Comment