Friday 14 September 2012

வேலை செய்யாவிடில் உணவு இல்லை!!!

ஒரு ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் எண்பது வயதிலும் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்வதை கொள்கையாக கொண்டு வாழ்ந்து வந்தார்.மேலும் அவர் தான் முதுமை அடைந்ததையும் பொருட்படுத்தாமல், அவர் தங்கியிருந்த இடத்தில் உள்ள தோட்டத்தை சீரமைப்பது, மரங்களுக்கு நீர் ஊற்றுவது, களை அறுப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார்.

அதைக் கண்ட துறவியின் சீடர்கள், இந்த வயதிலும் தங்கள் குரு வேலை செய்வதைக் கண்டு வருத்தப்பட்டனர். அதை அவர்கள் தங்கள் குருவிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை. எனவே சீடர்கள் இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடிவு செய்தனர்.

அதனால் அந்த சீடர்கள் குரு வேலை செய்யப் பயன்படுத்தும் கருவிகளான மம்முட்டி, கடப்பாறை போன்றவைகளை,குருவின் கண்களுக்குப் புலப்படாதவாறு மறைத்து வைத்தனர். ஆனால், குருவோ! வேலை செய்யாத காரணத்தினால், அன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்தார். சீடர்களும் இதை கவனித்து வந்தனர். பின் மறுநாளும் குரு சாப்பிடாமல் வெறுமையாக அமர்ந்திருந்தார்.இதைக் கண்ட சீடர்கள் வேறு வழியின்றி அந்த பொருட்களை குருவிடமே ஒப்படைக்க முடிவெடுத்து குருவின் கண்களுக்குப் தென்படும்படியாக அப்பொருட்களை வைத்தனர்.

குரு தான் வேலை செய்ய பயன்படுத்தும் பொருட்கள் தென்பட்டதும், அவருடைய வேலையை மீண்டும் தொடர்ந்தார். அன்று வேலை செய்ததால் அவர் உணவு அருந்தினார்.

இதைப் பற்றி சீடர்கள் குருவிடம் கேட்கும் போது,"உழைக்காமல் உண்ணும் உணவு உடம்பில் சேராது" என்று கூறினார். பின் சீடர்களிடம் "நீங்கள் வேலை செய்யாவிடில் உணவு இல்லை" என்று சொல்லி உள்ளே சென்று விட்டார்.

No comments:

Post a Comment