Monday 17 September 2012

தமிழை காத்தளித்த "தமிழ்த்தாத்தா' உ.வே.சா., வீட்டை காப்பாற்ற முடியாத அவலம்

மறைந்து கொண்டிருந்த தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகளை எல்லாம் தேடித் தேடிக் கண்டுபிடித்து காப்பாற்றிய, தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் வீட்டைக் கூட, காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி கேட்டு, தமிழ் ஆர்வலர்கள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழைக்காத்தவர்:


தமிழ்த் தாத்தா என்று போற்றப்படுபவர் உ.வே.சாமிநாத அய்யர். தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாக இருந்து, செல் அரித்து, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்த காலத்தில், அலைந்து திரிந்து, கடின உழைப்பால் தேடி எடுத்து, சுவடிகளில் இருந்ததை, தாள்களில் அச்சாக்கி, நூல்களாக பதிப்பித்த பெருமைக்குரியவர்.சிலப்பதிகாரத்தை முதன் முதலில் உரையுடன் பதிப்பித்தார். புறநானூறு, நற்றிணை, குறுந்தொகையை பதிப்பித்தார். அவர் கண்டெடுக்காவிட்டால், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மட்டுமல்ல, பழந்தமிழ் இலக்கியங்களே நம் பார்வைக்கு வராமல் போயிருக்கும். இந்த உழைப்புக்காகத் தான் அவர், தமிழ்த் தாத்தா என்று போற்றப்படுகிறார்.
"தியாகராச விலாசம்':
 

தற்போது அவர் வாழ்ந்த,சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தை இடிக்கும் செயல் அரங்கேறியுள்ளது.சென்னை திருவல்லிக்கேணி, திருவேட்டீஸ்வரன்பேட்டையில், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் வாழ்ந்த, "தியாகராச விலாசம்' இல்லம் உள்ளது. உ.வே.சாமிநாத அய்யருக்கு, சென்னை மாநிலக் கல்லூரியில், 1903ம் ஆண்டில், தமிழாசிரியர் பணி கிடைத்ததையடுத்து, 1904ல், இந்த வீட்டில், 20 ரூபாய் வாடகைக்கு குடியேறினார். வீட்டு உரிமையாளர், வீட்டை இவரிடமே விற்க விருப்பம் தெரிவித்ததால், வீட்டை அவர் வாங்கினார்.அந்த இல்லத்துக்கு, கும்பகோணம் கலைக் கல்லூரி ஆசிரியராக இருந்த, அவரது குரு தியாகராச செட்டியாரின் பெயரைச் சூட்டினார். 1919 வரை, மாநிலக் கல்லூரியில் பணியாற்றி, பின் மீனாட்சி தமிழ்க் கல்லூரியில், 1924 முதல் 1927 வரை, முதல்வராக இருந்தார். 1942ல், இரண்டாவது உலகப் போரின் போது, சென்னை மக்களோடு, அவரும் இடம்பெயர்ந்தார். அதன்பின், திருக்கழுக்குன்றத்தில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான வீட்டில், நிரந்தரமாகத் தங்கினார். 1942, ஏப்., 28ம் தேதி மறைந்தார். அவரது திருவல்லிக்கேணி வீடு, உறவினர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது.
என்ன நடந்தது?
 

வீட்டைப் பராமரித்தோர், விற்பனை செய்து விட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டை வாங்கியவர், அதை இடித்து, புதிதாக கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக, வீட்டை இடிக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த தகவல் வெளிவந்ததால், இடிப்பு பணி நேற்று நிறுத்தப்பட்டிருந்தது.திருவல்லிக்கேணி வீட்டிற்கு நேற்று சென்றபோது, இடிப்புப் பணியில் இருந்தவர்கள் வெளியே நின்றிருந்தனர். வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டிற்குள் செல்ல, ஊழியர்கள் அனுமதி மறுத்தனர். அங்கிருந்த ஊழியர்கள், ""திடீரென அரசு அதிகாரிகள் வந்து, வீட்டை இடிக்கக் கூடாது என, தடை போட்டு விட்டனர். இதுவரை இடித்ததற்காக, 30 ஆயிரம் ரூபாயை யார் தருவர்; நீங்கள் தருவீர்களா?,'' என்று கோபத்துடன் கேட்டனர்.பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பிடித்து பாதுகாத்த தமிழ்த் தாத்தா, உ.வே.சா., வாழ்ந்த இல்லத்தை, தமிழக அரசு மீட்டு, நினைவகமாக மாற்ற வேண்டும் என்பதே, தமிழ் ஆர்வலர்களின் விருப்பம். அது, உ.வே.சா.,வின் அரிய செயல்களை, வருங்கால சந்ததியினரின் நினைவுக்கு கொண்டு செல்லும் வகையில் அமையும்.
உ.வே.சா.,வின் வீட்டை அழியா சின்னமாக்க வேண்டும்:
 

தமிழ்த் தாத்தா உ.வே.சா.,வின் இல்லத்தை மீட்டு, உயிர்ப்பித்து அழியாச் சின்னமாக, சுற்றுலா தலமாக மாற்ற வேண்டுமென்று, தமிழ் ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பாரதியார் இல்லத்தின் வடிவமைப்பை மாற்றிய பின், அரசு வாங்கி சீரமைத்தது போல் அல்லாமல், இந்த இல்லத்தின் வடிமைப்பை மாற்றாமல், அப்படியே காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழறிஞர்கள் கூறியதாவது:
 

சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் - திருவாவடுதுறை ஆதீன கர்த்தர்: திருவாவடுதுறை ஆதீனத்தில் தமிழ் பயின்றவரும், தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடிப் பதிப்பித்து, தமிழ் அன்னைக்கு புகழ் சேர்த்தவருமான தமிழ்த் தாத்தா உ.வே.சா.,வின் இல்லம், இடிபடுவதில் இருந்து தமிழக அரசு காக்க வேண்டும். அதை நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும்.

முத்துக்குமாரசாமி தம்பிரான் - திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர்: உ.வே.சா., வாழ்ந்த வீட்டை அரசு வாங்கி, அவரது பெயரில் அங்கு நினைவகம் அமைக்க வேண்டும். இது, தமிழுக்குச் செய்யும் பெரிய தொண்டாக இருக்கும்.

குமாரசாமி தம்பிரான் - மவுன மடம், திருச்சி: 
தமிழ்த் தாத்தா, பழமை மாறாமல் இலக்கியங்களைப் பதிப்பித்தது போல, அரசும் இல்லத்தைப் பராமரிக்க வேண்டும்.
பேராசிரியர் க.ப.அறவாணன் - தஞ்சை பல்கலை முன்னாள் துணை வேந்தர்: ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பயணம் செய்தோர் ஒன்றைக் கண்டிருக்க முடியும். அந்தந்த நாட்டு சான்றோர்களை, அவர்கள் போற்றும் முறை, அதிசயக்கத்தக்கது. அறிஞர்களின் இல்லங்கள், வாழ்ந்த இடங்கள் அனைத்தும் மிகக் கவனமாக பாதுகாக்கப்பட்டு, சுற்றுலா வருவோர் நேரில் பார்த்து, வாழ்வியலை படிக்கும் வகையில் விவரங்களை எழுதி வைத்துக் கொண்டாடுகின்றனர். இச்சூழலில், தமிழுக்கு உயிர் கொடுத்த, தமிழ்த் தாத்தா உ.வே.,சா.,வின் இல்லத்தைக் கூட காப்பாற்ற முடியவில்லை என்பது, வருத்தத்துக்குரியது. அது மீண்டும் பழைய உருவிலேயே உயிர்ப்பிக்கப்பட்டு, மக்களின் பொதுச் சொத்தாக்க வேண்டியது, அரசின் தலையாய கடமை.


பேராசிரியர் ரவீந்திரன் - சென்னை பல்கலை இதழியல் துறை தலைவர்: தமிழகத்தின், தமிழ் மொழியின், தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான, சங்க இலக்கியங்களை மீட்டெடுத்தவர் உ.வே.சா. அவரது வீடு இடிக்கப்படுவது வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இதை அரசும், மக்களும் தடுத்து நிறுத்தி, வீட்டை கையகப்படுத்தி, அழியாச் சின்னமாக உடனடியாக உருவாக்க வேண்டும்.
கவிக்கோ ஞானச்செல்வன்: தமிழுக்கு ஒரு விளக்கமாகத் திகழ்ந்த, தமிழ் நூல்களை தேடித் தேடி ஆய்ந்து கொடுத்த, தமிழ்த் தாத்தா உ.வே.சா., வாழ்ந்த இல்லம், புனிதமான கோவில். அதை இடிப்பதோ, சிதைப்பதோ நாகரிகமற்ற, பண்பில்லாத செயல் என, கருதப்படும். அதற்கு எந்த ஊறும் செய்யாது பாதுகாக்க வேண்டியது, தமிழக அரசின், தமிழர்களின் இன்றியமையாத கடமை.

பேராசிரியர் ராமலிங்கம் - சென்னை பல்கலை தமிழ் மொழித்துறை: தமிழ்த் தாத்தா இல்லத்தைக் காப்பாற்றுவது, தமிழைக் காப்பாற்றுவதற்கு ஒப்பானது. பாரதியார் இல்லத்தை இடித்து, வடிவமைப்பை மாற்றிய பின் மீட்டது போல் அல்லாமல், உ.வே.சா., இல்லத்தின் வடிவமைப்பை மாற்றுவதற்குள், மீட்டு, காப்பாற்ற வேண்டும்.

டாக்டர் சுந்தரமூர்த்தி - தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணை வேந்தர்: தமிழ்த் தாத்தா பிறந்த ஊரில் உள்ள அவரது இல்லத்தை, அரசு நினைவு இல்லமாக மாற்றியுள்ளது. சென்னையில் உள்ள அவரது இல்லத்தையும் அரசு போற்றி பாதுகாக்க வேண்டும். அவ்வாறு செய்வது, தமிழுக்குச் செய்யும் தொண்டு.

கவிஞர் ஈரோடு தமிழன்பன்: தமிழாய்ந்த தலைமகன் வாழ்ந்த அந்த இடத்தை, அரசு முதலிலேயே கண்டுபிடித்து, மக்கள் உணரும்படி செய்திருக்க வேண்டும். இப்போது பாதி இடிந்த நிலையிலுமாவது, அந்த இல்லத்தை அரசு உடனடியாக வாங்க வேண்டும்.தமிழ்த் தாத்தா வாழ்ந்த இல்லத்தை வெளிநாட்டவரும் பார்வையிட, தலை நகரில் நினைவு இல்லம் இருக்க வேண்டியது அவசியம்.

ம.ராசேந்திரன் - தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர்: 
இன்றைய முதல்வர் தான், கும்பகோணம் அருகில் இருக்கிற உத்தமதானபுரத்தில், தமிழ்த் தாத்தா உ.வே.சா.,வுக்கு நினைவு இல்லம் எழுப்ப, அரசாணை வெளியிட்டார். உ.வே.சா., தனது இளமைக் காலத்தை உத்தமதானபுரத்தில் அதிகம் செலவிட்டு இருந்தாலும், அவர் நந்தனம் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில், திருவல்லிக்கேணி வீட்டில் தான், அதிகம் தமிழ் வளர்க்க அருந்தொண்டு ஆற்றினார். தமிழ்த் தாத்தா வாழ்ந்த தமிழ்க் கோவிலை வாங்கி, தலைநகரில் நினைவு இல்லம் அமைத்திட வேண்டும்.

பத்மாவதி விவேகானந்தன் - ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியை: இந்தியர்களுக்கு வரலாற்றைப் பாதுகாக்கும் உணர்வு குறைந்து போயிற்று என்ற குற்றச்சாட்டு, நம் மீது வைக்கப்படுவதுண்டு. அதனால் தான், திருவள்ளுவர் எங்கு பிறந்தார் எனக் கேட்டால், மயிலாப்பூர், மதுரை, நாகர்கோவில் என்கிறோம். ஷேக்ஸ்பியர் எழுதிய எழுதுகோல், அவர் நாட்டில் பாதுகாக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில், மகாகவி வாழ்ந்த குயில் தோப்பை பறிகொடுத்து விட்டோம். அதுபோல், காடு, மேடுகளெல்லாம் அலைந்து திரிந்து, கறையான்களின் காதுகளுக்கு தகவல் சென்றுவிட்ட போதிலும், ஓலைச்சுவடிகளை எடுத்து வந்து, இலக்கண அறிவு கொண்டு, தமிழ்த் தாத்தா தொகுத்து தந்து விட்டுப் போனதால் தான், இன்றைக்கு தமிழ் மொழியை செம்மொழி என்கிறோம். தமிழ் வளர்த்த கோவிலை இடித்து விடாதீர்கள். அரசு முனைப்பு கொண்டு, அந்த இடத்தை வாங்கி, நினைவு இல்லமாக்க வேண்டும்.இவ்வாறு தமிழறிஞர்கள் தெரிவித்தனர்.
தாகூர் வந்த இல்லம்:
 

அவ்வை நடராஜன் - தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர்: கும்பகோணத்திற்கு அருகே உள்ள உத்தமதானபுரத்தில், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யருக்கு நினைவு இல்லம் இருந்தாலும், நந்தனம் அரசு கல்லூரியில் தமிழ்த் தொண்டு ஆற்றிய காலத்தில், திருவல்லிக்கேணியில் உள்ள திருவேட்டீஸ்வரன்பேட்டையில், 20 ரூபாய் வாடகையில், குடும்பத்தோடு வசித்தார் என, பதிவுகள் கூறுகின்றன. அந்த இல்லத்திற்கு மகா கவி ரவீந்திரநாத் தாகூர் வந்திருக்கிறார். மகா கவி பாரதி வாழ்ந்த எட்டயபுரத்தில் நினைவு இல்லம் இருந்தாலும், தலைநகர் சென்னையில், அவர் மூச்சுக்காற்று உலவிய இல்லத்தை நினைவு இல்லமாக பேணிக் காத்து வருகிறோம். அதுபோல், உ.வே.சா., கால்தடம் பதித்த திருவல்லிக்கேணி இல்லத்தை நினைவு இல்லமாக்கி, அங்கொரு அரங்கம் அமைத்து, தமிழ் ஆய்வு அரங்கங்கள் நடக்க, அரசு ஆவன செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment