Friday 5 October 2012

ஓலைச்சுவடிகள் உள்ளதா? புதுப்பிக்க வாய்ப்பு!

ஓலைச்சுவடிகள் வைத்திருந்தால், அதை சீரமைத்து தருவதாக, அரசினர் கீழ்திசை ஓலைச் சுவடிகள் நூலகம் அறிவித்து உள்ளது. தொல்லியல் துறை கீழ் இயங்கும், அரசினர் கீழ்திசை ஓலைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம், சென்னை பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வருகிறது.

இங்கு, 72,300 ஓலைச் சுவடிகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர். பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள ஓலை சுவடிகள், எந்தவித பாதுகாப்பும் இன்றி உள்ளதால், அவை அழியும் நிலையில் உள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில், வேதிப்பொருள் பயன்படுத்தி பாதுகாக்கவில்லை யென்றால், அவை முற்றிலும் அழிந்து போகும். எனவே, இந்த அரிய பொக்கிஷங்களை பாதுகாக்க, இந்திய அரசின் கலாசார மையத்தின் ஒரு பிரிவான, தேசிய சுவடிகள் குழுமம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

இந்தியா முழுவதும் உள்ள சுவடிகளை பாதுகாக்கவும், அதில் உள்ள அடிப்படை தகவல்களை திரட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஓலைச் சுவடிகள் வள ஆதார மையமாக, அரசினர் கீழ்திசை ஓலை சுவடி நூலகம் மற்றும் ஆய்வு மையம் அமைந்து உள்ளது. இதுகுறித்து, அரசினர் கீழ்திசை சுவடிகள் நூலக காப்பாளர் சந்திரமோகனை அணுகலாம். ஓலைச் சுவடிகளை வைத்திருப்போர், அரசினர் கீழ்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம், சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம் என்ற முகவரியிலும், 044-2536 5130, 98400 41761, 89395 91336 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment