Thursday 11 October 2012

சரியான பதிலடி!!!

துறவி ஒருவர், நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள இருந்தார். அதனால் அவர் தன் மடாலயத்தில் இருந்து புறப்பட்டார். பயணம் செய்யும் போது, ஒரு பெரிய ஆற்றை கடக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த ஆற்றை கடக்க சாய்ந்து விழுந்த ஒரு தென்னை மரத்தை தான் அந்த ஊர் மக்கள் பயன்படுத்தினர்.

இந்த மரத்தில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும். அத்தகைய குறுகலான மரம் அது. துறவியும் கடப்பதற்கு மரத்தில் ஏறி நடக்க ஆரம்பித்து, கரையை கடக்கும் அளவில் வந்துவிட்டார். அப்போது மறுகரையில் இருந்து, ஒருவன் ஆற்றை கடக்க ஏறி வந்தான். அவன் மிகவும் கோபக்காரன், யாரையும் மதிக்காதவன். இதனால் அவன் ஊரில் உள்ளோரிடம் கெட்டப் பெயரைத் தான் ஈட்டினான்.

ஆனால் அவனிடம் துறவி அன்புடன், "தம்பி, எனக்கு சிறிது வழிவிடுங்கள், நான் இந்த ஆற்றை கடக்க இன்னும் சிறிது தூரம் தான் உள்ளது. கொஞ்சம் வழிவிட்டால் நன்றாக இருக்கும்" என்று கேட்டார்.

அதற்கு அவன், "முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு இல்லை" என்று ஆணவத்தோடு கூறினான். ஆனால் பெரியவர் எதுவும் பேசாமல், திரும்பி சென்றார். பின் அவன் "எதற்கு எனக்கு வழிவிட்டீர்கள்?" என்று கேலியாக கேட்டான்.

துறவி அதற்கு "முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு உண்டு" என்று கூறி மறுபடியும் நடக்க ஆரம்பித்தார்.

நன்றி : போல்ட் ஸ்கை

No comments:

Post a Comment