Monday 15 October 2012

அப்துல் கலாம் கடந்துவந்த பாதை

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், இந்தியாவின் ‘ஏவுகணை மனிதர்’ என அழைக்கபடுபவருமான அப்துல் கலாம், 1931ம் ஆண்டு அக்.,15ம் தேதி, தமிழகத்தின் தீவுப்பகுதியான ராமேஸ்வரத்தில் பிறந்தார். இவரது முழுப்பெயர் ‘ஆவுல் பக்கீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம்’.

தென் தமிழகத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கலாமின் தாய் மொழி தமிழ். குடும்ப வறுமையால், படிப்புச் செலவுக்கு நாளிதழ் விநியோகம் செய்தார். பள்ளியில் சராசரி மாணவராக இருந்த கலாம், ஆய்வுகளுக்காக அதிக நேரம் செலவு செய்தார். பள்ளிப்படிப்பை முடித்தவுடன், 1954ம் ஆண்டு திருச்சியில் உள்ள ஜெயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார். 1960ம் ஆண்டு ‘மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ (எம்.ஐ.டி.,)யில், ‘ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்’ பட்டம் பெற்றார்.

தொடர்ந்து, டிபன்ஸ் ரிசர்ச் அண்டு டெவலப்மென்ட் ஆர்கனைசேஷனில் (டி.ஆர்.டி.ஒ.,), ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாபிலிஷ்மென்ட் தலைமை விஞ்ஞானியாக, பணியில் சேர்ந்தார். இந்திய ராணுவத்திற்கு சிறிய ரக ஹெலிகாப்டரை வடிவமைத்ததே அவரின் பணி. 1969ம் ஆண்டில் இஸ்ரோவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அங்கு, இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். சீரிய முயற்சியால் போலார் எஸ்.எல்.வி., எஸ்.எல்.வி., 3 போன்ற ராக்கெட் திட்டங்களை வெற்றிகரமாக உருவாக்க உதவினார். 

இஸ்ரோ, 1970ம் ஆண்டு எஸ். எல்.வி., ராக்கேட் மூலமாக ரோகிணி 1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. அதே ஆண்டில், புராஜெக்ட் டெவில், வேலியண்ட் என்ற இரண்டு செயற்கைக் கோள்களும் கலாமின் முயற்சியால், எஸ்.எல். வி., ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா, மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்க மறுத்த போதிலும், இந்தியாவின் விண்வெளி திட்டங்களுக்காக, ரகசியமாக நிதி ஒதுக்கினார்.

தொடர்ந்து செயற்கைக்கோள்களை ஏவிய கலாம், அக்னி, பிரித்வி போன்ற ஏவுகணை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தார். ஜூலை 1992 முதல், டிசம்பர் 1999 வரை மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைமை அறிவியல் ஆலோசகராக இருந்தார். இந்த காலகட்டத்தில் தான், பொக்ரான்-2 அணு சோதனை நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடத்தப்பட்டதால் அவர் இந்திய நாட்டின் உயர்மட்ட அணு விஞ்ஞானி எனும் அளவிற்கு உயர்ந்தார்.

இந்திய ஜனாதிபதி:  

கே.ஆர். நாராயணனுக்கு பின், இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலாம், 2002 ஜூலை 25ல் பதவியேற்றார். இவருக்கு பா.ஜ., காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு இருந்ததால், இவரை எதிர்த்து போட்டியிட்ட லட்சுமியைக் காட்டிலும் அதிக ஓட்டுகள் பெற்று 2007 ஜூலை 25வரை ஜனாதிபதியாக பணியாற்றினார். 13வது மற்றும் 14வது ஜனாதிபதி தேர்தலிலும் இவர் போட்டியிட வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின. இவர் மறுத்து விட்டார். இது இவரது பெருந்தன்மையை காட்டியது.

தற்போது இவர்:

திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் வேந்தராகவும், சென்னை அண்ணா பல்கலை.,யில் பேராசிரியராகவும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்( ஐ.ஐ.எம்.,)- ஆமதாபாத், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ( ஐ.ஐ.எம்.,) இந்தூர், மைசூர் பல்கலை., மற்றும் பல இந்திய கல்வி நிறுவனம், ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இப்போது பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் சென்று, மாணவர்களை சந்தித்து, சிறந்த எதிர்கால சந்ததியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

No comments:

Post a Comment