Friday 5 October 2012

வாழ வழிகாட்டும் வள்ளலார்!

தமிழ்நாட்டில் & சிதம்பரத்தில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் கடலூருக்கு அருகே அமைந்திருக் கும் கிராமம் மருதூர்.

இந்த ஊரின் கணக்குப்பிள்ளை யாகவும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராகவும் விளங்கியவர் ராமையா. இவர் மனைவி பெயர் சின்னம்மை.

ராமையா&சின்னம்மை தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக 1823-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஞாயிறு மாலை 5.54 மணியளவில் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராமலிங்கம் எனப் பெயர் சூட்டினர்.
ராமலிங்கம் பிறந்த ஆறாவது மாதத்தில் தந்தை ராமையா காலமானார். சின்னம்மை, தன் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

மூத்த மகன் சபாபதி, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயின்றார். புராணச் சொற்பொழிவில் வல்லவரானார். சொற்பொழிவுகளுக்குச் சென்று வருவதன் மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக் குடும்பம் நடத்தி வந்தார்.

சபாபதியே, தம்பி ராமலிங்கத்துக்குக் கல்வி கற்பித்தார். பிறகு, தான் பயின்ற காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயில அனுப்பினார்.

ஒருகட்டத்தில் மீண்டும் சென்னைக்கே வந்த ராமலிங்கம் அடிக்கடி கந்தசாமி கோயிலுக்குச் சென்றார். கந்தகோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சியடைந்தார். இளம்வயதிலேயே இறைவன்மீது பாடல்கள் இயற்றிப் பாடினார்.

பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் கோயில்களில் சுற்றிவந்த ராமலிங்கத்தை அண்ணன் சபாபதி கண்டித்தார். ஆனால், ராமலிங்கம் அவருக்குக் கட்டுப்படவில்லை. எனவே, அண்ணன் தன் மனைவி பாப்பாத்தி அம்மாளிடம் ராமலிங்கத்துக்குச் சாப்பாடு போடுவதை நிறுத்துமாறு கடுமையாக உத்தரவிட்டார். பாசமான அண்ணியின் வேண்டுகோளுக்கு இணங்கிய ராமலிங்கம், வீட்டில் தங்கிப் படிப்பதாக உறுதியளித்தார்.

ராமலிங்கத்துக்கு வீட்டில் மாடியறை ஒதுக்கப்பட்டது. புத்தகங்களோடு அவர் மாடியறைக்குச் சென்றார். சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அறையிலேயே தங்கி முருக வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு நாள் சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தணிகை முருகன் தனக்குக் காட்சியளித்ததாகப் பரவசப்பட்டுப் பாடல்கள் பாடினார்.

புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு, ஒருமுறை உடல்நலம் குன்றியதால் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.

அன்றைய தினம் சபாபதியின் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்த னர். அண்ணன் சொன்ன படியே சில பாடல்களை மனமுருகப் பாடினார் ராமலிங்கம். இதன்பின், அவரிடம் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அங்கு கூடியிருந்தோர் வெகுநேரம் வற்புறுத்தினர். எனவே, ராமலிங்கமும் அதற்கு இசைந்தார்.

அந்தச் சொற்பொழிவு இரவில் நெடுநேரம் நிகழ்ந்தது. அனைவரும் வியந்து போற்றினர். இதுவே அவருடைய முதல் சொற்பொழிவு. அப்போது அவருக்கு வயது ஒன்பது. ராமலிங்கம் தன் பன்னிரண்டாம் வயதில் திருவொற்றியூர் சென்று வழிபடத் தொடங்கினார். அவர் வசித்துவந்த ஏழுகிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூருக்குத் தினமும் நடந்தே சென்று வழிபட்டு வருவது அவர் வழக்கம்.

பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் இருபத்தேழாவது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்துகொண்டார். ராமலிங்கம் அமைதியை நாடியவர். கடவுள் என்றால் என்ன என்று அறிய விரும்பியவர். எனவே, 1858&ஆம் ஆண்டு சென்னையிலிருந்து புறப்பட்டுப் பல தலங்களைத் தரிசித்து சிதம்பரத்தை அடைந்தார்.

அங்கே அவரைக் கருங்குழி கிராமத்து மணியக்காரரான திருவேங்கடம் என்பவர் சந்தித்துத் தன் ஊரில், தன் இல்லத்தில் வந்து தங்கியிருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரது அன்புக்குக் கட்டுப்பட்ட ராமலிங்கம் மணியக்காரரின் இல்லத்தில் ஒன்பது வருடங்கள் தங்கியிருந்தார்.

ராமலிங்கம் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண்கலயம் ஒரு நாள் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக்கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பிவைத்த மணியக்காரரின் மனைவி, பின்னர் அதைச் சுத்தப்படுத்தி எண்ணெய் நிரப்பிவைக்க மறந்துபோனார்.

அன்றிரவு ராமலிங்கம் வெகுநேரம் எழுதிக் கொண்டிருந் தார். விளக்கில் ஒளி மங்கும்போதெல்லாம் கலயத்தில் இருந்த நீரை, எண்ணெய் என்று கருதி விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை விளக்கு பிரகாசமாகத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது!

கருங்குழியில் தங்கியிருந்தபோது 1865&ஆம் ஆண்டு ராமலிங்கம் "சமரச வேத சன்மார்க்க சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கினார். பிற்காலத்தில் அந்தப் பெயரை "சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்" என்று மாற்றியமைத்தார். 

இந்தப் புதிய சங்கத்தின் கொள்கைகளாக அவர் அறிவித்தவை, மக்கள் பின்பற்றக்கூடிய மிக எளிய கொள்கைகள். அவை:

கடவுள் ஒருவரே.

கடவுளை உண்மையான அன்புடன், ஒளி வடிவில் வழிபட வேண்டும்.
சிறு தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கொடுக்கக்கூடாது.
மாமிச உணவை உண்ணக்கூடாது.
ஜாதி, மத வேறுபாடு கூடாது.
பிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருத வேண்டும்.
பசித்த உயிர்களுக்கு உணவு அளித்து ஆதரிப்பதும் உயிர்க்கொலை செய்யாத பண்புமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லாப் புண்ணியங் களுக்கும் மேலானது என்று உபதேசித்து வந்த ராமலிங்க அடிகள், அன்னதானச் சாலை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்டார்.

வள்ளலார் பிறந்த இடம்

வள்ளலார் பிறந்த இடம் 
கருங்குழிக்கு அருகிலுள்ள வடலூரில், பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867|ஆம் ஆண்டு, மே மாதம் 23&ஆம் தேதியன்று அங்கு சமரச வேத தருமச்சாலையைத் தொடங்கினார். பின்பு, அதை அவரே Ôசமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலைÕ எனப் பெயர் மாற்றம் செய்தார்.
இந்தத் தருமச்சாலையில் மக்கள் வழங்கும் பொருள் உதவியைக் கொண்டு சாதி, மத, மொழி, இன, நிறப் பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்கிறது.

ராமலிங்க அடிகள் "வள்ளலார்" என அழைக்கப்படலானார். வேட்டவலம் ஜமீன்தாரான அருணாசல வசந்த கிருஷ்ண வாணாதிராய அப்பாசாமி பண்டாரியார் (கொஞ்சம் நீளமான பெயர்தான்!) என்பவருக்கு இரு மனைவியர்.

வள்ளலார் தண்ணீரால் விளக்கேற்றிய வீடு...

ஒருவரை நோயும் இன்னொருவரைப் பேயும் பிடித்துத் துயரப்படுத்தி வந்தன. பல்வேறு மருந்து, மந்திர பூஜைகளுக்குப் பிறகு கடைசியாக வள்ளலார் வேண்டி அழைக்கப்பட்டார்.
வேட்டவலம் ஜமீன்தார் இல்லத்தில் வள்ளலார் அடி வைத்ததும் பேய் விலகியது. அவர் தம் திருக்கரத்தால் மருந்து அளித்ததும் நோய் இறங்கியது. இதன்பிறகு, வேட்டவலம் அம்மன் கோயிலில், வள்ளலார் சொல்படி உயிர்ப்பலி நிறுத்தப்பட்டு, பால் பொங்கலிட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

வள்ளலாரின் புகழ் நாடெங்கும் பரவியது. அவரைச் சுற்றிக் கூட்டம் பெருகியது. தனிமையை விரும்பிய வள்ளலார், வடலூரிலிருந்து விலகி, அருகில் இருக்கும் மேட்டுக்குப்பம் சென்றார். அங்கு சில வருடங்களாக உபயோகப் படாமல் இருந்துவந்த ஒரு வைணவ மதத் திருக்கூடத்தில் தங்கினார். தாம் தங்கிய அந்த இடத்துக்கு Ôசித்தி வளாகத் திருமாளிகைÕ என்றுபெயர் சூட்டினார்.

தண்ணீரால் விளக்கேற்றிய இடம் இதுதான் (வீட்டின் உள்ளே)

அங்கேஅவர் அடிக்கடி பிரமதண்டிகா யோகம் செய்து வந்தார். இருபுறமும் இரும்புச் சட்டிகளில் நிலக்கரி கனன்று எரிய, நடுவில் அமர்ந்து தியானத்தில் இருப்பது பிரமதண்டிகா யோகம். அகச்சூடு நிறைந்த வள்ளலார், புறத்தே இவ்விதம் சூடேற்றித் தம் தேகத்தை அக்னிதேகமாக்கி வந்தார்.

இறைவனை ஒளி வடிவாகப் போற்றிய வள்ளலார், சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஓர் ஒளித் திருக்கோயிலை 1871-ஆம் வருடம் அமைக்கத் தொடங்கினார். சுமார் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அந்தத் திருக்கோயிலுக்குச் ‘சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபை’ என்று பெயர் சூட்டினார்.

கல்பட்டு ஐயா திருச்சந்நிதி

25.1.1872, தை மாதம் 13|ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஒளி வழிபாட்டு விழா நடைபெற்றது.

20.10.1873, செவ்வாய்க்கிழமை காலை எட்டு மணிக்கு சித்திவளாகத் திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு நீண்ட அருளுரை வழங்கினார் வள்ளலார். அந்த அருளுரையே ‘பேருபதேசம்’ என்று சொல்லப்படுகிறது.

கொடியேற்றியதற்கு அடுத்த கார்த்திகை மாதம், திருவண்ணாமலை தீபத் திருநாளில், தமது அறையில் எப்போதும் எரிந்துவந்த தீப விளக்கைச் சித்திவளாகத் திருமாளிகையின் முன்புறம் எடுத்து வைத்தார்.

மக்களிடம் தீப விளக்கைத் தொடர்ந்து வழிபட்டு வரச் சொல்லிவிட்டு, Ôஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகிறபடியால், தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் கண்டு ஆராதியுங்கள். நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்துகொள் வேன்Õ என்று செய்தி அளித்தார்.

1874-ஆம் வருடம் தை மாதம் 19|ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருளாசி வழங்கினார். இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்தார். அவரது விருப்பப்படி, அவரது பிரதம சீடர்களான கல்பட்டு ஐயாவும் தொழுவூர் வேலாயுதமும் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள்.

கல்பட்டு ஐயா சந்நிதி & வெளிப்புறம்...

அன்று முதல் வள்ளலார் உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல், அருவமாக நிறைந்து, அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.சத்திய ஞானசபைஉலகில் வேறெங்கிலும் இல்லாத தனிப்பெரும் அமைப்பு இது. ஜாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் வந்து பிரார்த்தனை செய்யத் தகுந்த இடம் இது. எண்கோண வடிவிலான இந்தக் கட்டடத்தை வள்ளலாரே வடிவமைத்தார்.

மையத்தில் நான்கு தூண்களைக் கொண்ட மண்டபமும் அதன்மீது பன்னிருகால் மண்டபமும், ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளன. நாற்கால் மண்டபத்தின் மையத்தில்தான் ஆண்டவர் ஜோதி வடிவில் இருக்கிறார்.

பன்னிருகால் மண்டபத்தில் ஒரு சுற்றுப் பிராகாரமும் பக்தர்கள் உட்கார்ந்து ஆண்டவனைத் தியானிக்க வழிபாட்டுக் கூடமும் இருக்கின்றன.

ஜோதி தரிசனம் ஆனதும் பக்தர்களுக்குத் திருநீறு பிரசாதமும் மலர்களும் கற்கண்டும் தரப்படுகின்றன.

சித்திவளாகம்

வடலூருக்கு அருகே மேட்டுக்குப்பத்தில் இருக்கிறது சித்திவளாகம். வள்ளலார் ஏற்றிவைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. வள்ளலார் ஸித்திபெற்ற அறையின் பூட்டப்பட்ட கதவுக்கு வெளியே அமர்ந்து தியானம் செய்யலாம்.

தினமும் இங்கே திருவருட்பா பாடல்களை அன்பர்கள் பாடிப் பிரார்த்தனை செய்கின்றனர். மாதா மாதம் பூச நாட் களில் அன்னதானம், சிறப்புவழிபாடும் நடைபெறு கின்றன.
தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையை ஜன்னல் வழியாகப் பார்க்க அனுமதிக்கப்படுகிறது.

ஜோதி தரிசனம்

ஞானசபையில், 1872|ஆம் வருடம் ஜனவரி 25|ஆம் தேதி, தைப்பூச ஜோதி தரிசனம் நாளில் முதல் தடவையாக வழிபாடு தொடங்கப் பெற்று, ஜோதி தரிசனத்தை அனைவரும் கண்டுகளித்தனர். அது முதற்கொண்டு ஒவ்வொரு தைப்பூசத்திலும் முழுமையான தரிசனம் நடக்கிறது.

பௌர்ணமி முழு நிலவும் பூச நட்சத்திரமும் ஒன்றுசேரும் நாள்தான் தைப்பூச நாள். அந்த நாளில், நம் ஆன்ம சக்தியும் ஆழ்மனமும் உயர்நிலையை அடைகின்றன. அருட்பெருஞ்ஜோதி தரிசன அனுபவத்தை அந்த நாளில் பெறுவது உகந்ததாக இருக்கும் என்பதுதான் இந்த நாளை வள்ளலார் தேர்ந்தெடுக்கக் காரணம். தைப்பூச நாளில் காலை 6.30, 10.00, மதியம் 1.00, இரவு 7.00, 10.00, மறுநாள் அதிகாலை 5.30 மணி ஆகிய ஆறு காலங்களில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

தவிர, இருபத்தேழு நாட்களுக்கு ஒருமுறை வரும் மாதாந்திர பூச நாளில், இரவு எட்டு மணி முதல் எட்டரை மணிவரை ஆறு திரைகளை விலக்கி, மூன்று முறை அருட்பெருஞ்ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

தைப்பூச ஜோதி தரிசனம்

சித்திவளாகத்தில் உள்ள அணையா ஜோதி
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனிதத்தன்மை என்ற ஒப்பற்ற ஜோதிப் பிரகாசம் இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், சுயநலம், பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது.

இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது, மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைத் தரிசிக்கிறான். ஜோதி தரிசனம் என்பதும் இதுபோலத்தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் ஜோதியைத் தரிசிக்க முடியும். கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள்!

மாயா சக்தி, கிரியா சக்தி, பராசக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, ஆதிசக்தி, சித்சக்தி என ஏழுவிதச் சக்திகளைக் கடந்துவிட்டால், ஜோதி வடிவிலான இறைவனைத் தரிசித்து, மரணமில்லாப் பெருவாழ்வை அடையலாம்.

ஞானசபையில் வழிபாடு தொடங்கியபோது, வள்ளலார் தன் கையால் ஒரு அகல்விளக்கை ஏற்றிவைத்தார். அது அணையாத்தீபமாக இன்றுவரை பராமரிக்கப்படுகிறது. அந்தத் தீபம் ஆறேமுக்கால் அடி உயரமும் நாலேகால் அடி அகலமும் கொண்ட ஒரு கண்ணாடியில் பட்டு எதிரொலிப்பதே ஜோதி ஆகும். அந்தக் கண்ணாடி, வள்ளலாரால் நாற்பத்தெட்டு நாட்கள் விசேஷ வழிபாடு செய்யப்பட்டது.

எனவே, ஒவ்வொரு தைப்பூசத் திருநாளன்றும் சத்திய ஞானசபையில் இந்த ஏழு திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் நிகழும். இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பார்கள். இறைதரிசனத்தோடு, தங்களையே தாங்கள் தரிசித்துக் கொள்ளும் உணர்வு இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களுக்குக் கிடைத்து வருகிறது.

ஜீவகாருண்ய ஒழுக்கம்!

வள்ளலார் அறிவுறுத்திய ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் முக்கியக் குறிக்கோள், பிற உயிர்களின் பசியை ஆற்றுவது.

சத்திய தருமச்சாலை & வெளித்தோற்றம்

"ஜீவகாருண்ய ஒழுக்கமானது, மனிதருக்கு முக்தியை அருளும்" என்றார் அவர். ஜீவகாருண்ய வழியைக் கடைப்பிடிப்பது மிக எளிது.

"பசி என்பது என்ன? உயிர்களுக்குப் பசி என்னும் ஒன்று எதனால் இருக்கிறது? பசியின் காரணமாக, மனிதர்கள் என்னென்ன கொடுமைகளைச் செய்யத் துணிவார்கள்? பசியினால் ஓர் உயிருக்கு உண்டாகும் வேதனைகள் என்னென்ன?" என்று வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்த, பசியைப் பற்றி அணுஅணுவாக அலசி ஆராய்ந்திருக்கிறார்.

பசியைப் பற்றிய அவரது கருத்துகள் இங்கே:

பசி என்ற ஒன்று இருப்பதேன்?
பசியில்லாவிட்டால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படியில்லாதபோது, ஒருவருக்கொருவர் உதவமாட்டார்கள். அப்படி உதவவில்லை என்றால், மனிதநேயம் இல்லாமல் போய்விடும்.

சத்திய ஞான சபை & வெளித்தோற்றம்

மனிதநேயம் இல்லாவிட்டால், கடவுள் அருள் கிட்டாது. எனவே, கடவுளை அறிய, கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஓர் உதவிக் கருவிதான் பசி! பசி என்பது என்ன?
பசி என்பது, ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு.
பசி என்பது, ஏழைகளின் அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று.
பசி என்பது, ஏழைகளின்மேல் பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி.
பசி என்பது, உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.
பசி நோயினால் ஏற்படும் கொடுமைகள்!
பசி நோய் என்பது மிகவும் பயங்கரமானது. அந்நோயைத் தீர்த்துக்கொள்ள, மக்கள் எத்தகைய பாவத்தையும் செய்ய அஞ்சமாட்டார்கள்.
பெற்றவர்கள், பிள்ளைகளை விற்பார்கள்.
இதன் விளைவாகப் பிள்ளைகள் அநாதைகளாகத் திரிவார்கள். பிச்சை எடுப்பார்கள். கடின வேலைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பிள்ளைகள், பெற்றவர்களை விற்பார்கள்.

வள்ளலார் சந்நிதி

இதன் விளைவாக, வயதானவர்கள் பரதேசங்களில், பரவீடுகளில் கடின உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கும். பிச்சை எடுக்க நேரிடும். முதியோர் இல்லங்களில் தஞ்சம் புகுந்து, கூனிக் குறுக நேரிடும்.
வீடு, மாடு, நிலம், மற்ற உடைமைகள் அனைத்தையும் விற்று, மக்கள் பசிப்பிணியை அகற்றப் பார்ப்பார்கள்.

முனிவர்களையும் யோகிகளையும் சித்தர்களையும்கூடப் பசி தாக்கும். அச்சமயங்களில் அவர்கள் பிச்சை கேட்டு ஊருக்குள் நுழைவார்கள். பிச்சை கிடைக்காவிடில் சித்தம் கலங்குவார்கள்.

எந்நேரமும் காமத்தை விரும்பும் காமுகர்கள்கூடப் பசிப்பிணி தாக்கும்போது, காமம் மறந்து கலங்கு வார்கள்.
ஐம்பொன்னாலான திருவுருவம்
பசிப்பிணி தாக்கினால் என்னாகும்?
அறிவு மயங்கும்.
கடவுளைப் பற்றிய நினைப்பு அடியோடு ஒழிந்து போகும்.
சித்தம் கலங்கும்.

நம்பிக்கை குலையும்.
கண் பஞ்சடைந்து குழிந்துபோகும்.
காதில் இரைச்சல் ஏற்படும்.
நாக்கு உலர்ந்துபோகும்.
கை, கால் சோர்ந்து துவளும்.
வார்த்தை குழறும்.
வயிறு திகுதிகுவென எரியும்.
தாபமும் கோபமும் பெருகும்.
உயிர் விலகுவதற்கான அத்தனை அறிகுறிகளும் மேலும் மேலும் தோன்றும்.

நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனை ஆகிய வேதனைகளும் ஒன்றுதிரண்டால் என்ன வேதனை உண்டாகுமோ, அதுவே பசி வேதனை.
பசி அகன்றால் அடையும் ஆனந்தங்கள்!
உணவு கிடைத்து, உண்டு பசியாறியவுடன், பசியால் நேர்ந்த அத்தனை துன்பங்களும் அகலும்.
தத்துவங்கள் மறுபடி தழைக்கும்.
உள்ளம் குளிரும்.
சித்தம் தெளியும். உள்ளேயும் வெளியேயும் உயிர்க்களை உண்டாகும்.
கடவுள் நம்பிக்கை துளிர்க்கும்.

உள்ளே... ஐம்பொன்னாலான திருவுருவம்
தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், நிலம், பொன், மணி ஆகியவற்றைக் காணும்போது கொள்ளும் மகிழ்ச்சியைவிட, பசியால் வேதனைப்படுபவர்கள் உணவைக் காணும்போது அதிக மகிழ்ச்சி அடைவார்கள். உணவைக் கண்டவுடனேயே அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்றால், அதை உட்கொண்டபின் அடையும் ஆனந்தம் எப்படிப்பட்டதாக இருக்கும்? ஆதலால், உணவைக் கடவுளுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பிற உயிர்களின் பசியாற்றி, ஒப்பில்லா திருப்தி இன்பத்தை அளிப்பவர்கள் புண்ணியர்கள். இந்தப் புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்ல முடியும்?
இந்தப் புண்ணியத்தைச் செய்கிற புண்ணியர்களை, எந்தத் தெய்வத்துக்கு ஈடாகச் சொல்வது?
இவர்களை, எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளின் அம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும்.

ஜீவகாருண்யம் கடைப்பிடிப்பதால் வரும் நன்மை!

சூலைநோய், குஷ்டநோய் போன்ற தீராத வியாதிகளால் அவதிப்படும் இல்லறவாசிகள், அந்நோய்களிலிருந்து விடுபடுவார்கள் என்பது சத்தியம்.
பல நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவருத்தம் கொண்டவர் களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும்.

தனக்கு அற்ப ஆயுள் என்றுஜோதிடம் மூலமாகவோ, மருத்துவம் மூலமாகவோ அறிந்து, மரணத்துக்குப் பயந்து கலங்கு கிறவர்களுக்கு ஜீவகாருண்ய ஒழுக்கம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

கல்வி, அறிவு, செல்வம், போகம் ஆகியவற்றில் குறை உள்ளவர்கள், பசித்த ஏழைகளின் பசியாற்றினால் கல்வி, அறிவு, செல்வம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கவல்ல போகங்கள் அனைத்தும் கிட்டும்.

வள்ளலார் ஸித்தி அடைந்த வளாகம்...

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதை விரதமாகக் கொண்ட மக்களுக்குக் கோடையில் வெயில் வருத்தாது. மண்ணும் சூடு செய்யாது. பெருமழை, பெருநெருப்பு, பெருங்காற்று ஆகியவற்றால் துன்பம் உண்டாகாது.

கள்வர்களாலும் விரோதிகளாலும் துன்புறுத்தப்பட மாட்டார்கள்.
அரசாங்கத்தால் அவமதிக்கப்பட மாட்டார்கள். சிறைவாசம் போன்ற கொடுமைகள் நேரிடாது.
வயல்களில் முயற்சி இன்றியே விளைச்சல் பெருகும்.
வியாபாரத்தில் தடையின்றி லாபம் கிடைக்கும்.
கனவில் சென்று கட்டளையிட்ட பெருமான்!
ஒரு சமயம் தருமச்சாலையில், மறுநாள் அன்னதானத் துக்குத் தேவையான அரிசி இல்லை என்ற நிலை. செய்தியைப் பணியாளர்கள், வள்ளலாரிடம் தயக்கத்துடன் கூறினர்.

வள்ளலார் தனியாக ஓரிடத்தில் அமர்ந்து சற்று நேரம் தியானம் செய்தார். தியானம் முடிந்தபின், "அரிசி யும் மற்றவையும் நாளைக்கு வரும்" என்று கூறினார்.

இந்த ஜன்னலை தைப்பூசம் அன்று திறப்பார்கள்...

மறுநாள் பொழுது புலர்ந்து கொண்டிருக்கும்போதே திருத்துறையூரில் இருந்து மூன்று வண்டிகளில் அரிசியும் பிற உணவுப் பொருட்களும் தருமச்சாலைக்கு வந்து சேர்ந்தன.
அவற்றைக் கொண்டு வந்தவர் வள்ளலாரிடம் அன்பு பூண்ட அன்பர் ஒருவர். முதல் நாளிரவு கனவில், வள்ளலார் வந்து அரிசியையும் மற்றவற்றையும் கொண்டு வந்து தருமாறு கூறியதாகவும், அதை உத்தரவாக எண்ணி உடனே வண்டி கட்டிக்கொண்டு கிளம்பி வந்ததாகவும் அந்த அன்பர் தெரிவித்தார்.

உடல் வேறு உயிர் வேறு!

வள்ளலார் தருமச்சாலையின் வெளியே உச்சிப்பொழுதில் வெயிலில் அமர்ந்து தியானத் தில் மூழ்கி இருப்பார். அந்தச் சமயங்களில் வள்ளலாரின் தலைக்கும் சூரியனுக்கும் இடையே ஓர் அக்னிக் கம்பம் இருப்பது போல் தோன்றும்.

இது அனைவருக்கும் பழக்கப்பட்ட காட்சியாக இருந்திருக்கிறது. இதைவிட இன்னொரு காட்சிதான் வள்ளலாரை வெறும் துறவியாக மட்டுமின்றி மாபெரும் சித்தராக உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஒருநாள் உச்சிவேளையில் தருமச்சாலையில் இருந்து வள்ளலார் வெளியே புறப்பட்டுச் சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால், கவலைப்பட்ட சண்முகம் பிள்ளை என்னும் அன்பர் வெளியே வந்து தேடினார்.

ஓரிடத்தில் வள்ளலாரின் கை, கால் என்று அனைத்து அங்கங்களும் வெவ்வேறாகிக் கிடப்பதைக் கண்டு பயந்து பதறி மயங்கி விழுந்தார் அவர். உடனே வள்ளலாரின் அங்கங்கள் எல்லாம் ஒன்றாகி, சண்முகம் பிள்ளையை எழுப்பி, "இனி இப்படி என்னைத் தேடி வர வேண்டாம்!" என்று கூறி அவருடன் தருமச்சாலைக்குத் திரும்பினார்.

பெய்யெனப் பெய்த மழை!

கோடைகாலத்தில் தருமச்சாலைக்கு வந்தவர்களில் பலர் மழையில்லாத காரணத்தால் பயிர்கள் எல்லாம் வாடுகின்றன என்றும் கால்நடைகளும், மக்களும் பல துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும் வள்ளலாரிடம் முறையிட்டனர்.

இந்தக் கதவு வழியே சென்று உள்ளே ஸித்தியடைந்தார்...

ஒரு செம்பு நீரைத் தனது காலில் ஊற்றும்படி கூறினார் வள்ளலார். அன்பர்களும் அவ்வாறே செய்தனர்.

என்ன ஆச்சரியம்! சற்று நேரத்தில் மேகங்கள் திரண்டு நான்கு அங்குல அளவுக்கு மழை பெய்தது.

அது கேட்டு புதுப்பேட்டை என்னும் ஊரில் உள்ள அன்பர்கள் வடலூருக்கு வந்து தங்கள் ஊரிலும் மழை இல்லாதது சொல்லி வள்ளலாரை அழைத்தார்கள். வள்ளலார் அங்கு சென்று ஆறு குடம் தண்ணீரைத் தன் தலையில் ஊற்றுமாறு கட்டளையிட்டார். ஊர் மக்களும் அவர் சொல்படி செய்தனர். அவ்வளவுதான்!

புதுப்பேட்டை கிராமத்தில் தண்ணீர் பொங்கியது. ஆறு, கிணறுகளில் நீர் நன்கு ஊறிப் பெருகியது. நீரின் சுவையும் கூடியது. ஊரில் நல்ல மழையும் பொழிந்து செழித்தது.

வள்ளலார் வரவழைத்த தீஞ்சுவை நீரோடை

சித்திவளாகத் திருமாளிகைக்குக் கிழக்குத் திசையில் சற்றுத் தூரத்தில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே ஒரு நீரோடை இருக்கிறது. வள்ளலாரைக் காணவருபவர்கள் அந்த ஓடையில் நீராடுவது வழக்கம். நீரோடையில் ஒரு முறை நீர் வற்றிவிட்டது. வள்ளலார் அங்கு சென்றார். தமது கரத்தால் நீரோடையைத் தொட, நீர் பொங்கி எழுந்து நிறைந்தது.
அது முதல் அந்த நீரோடை ‘தீஞ்சுவை நீரோடை’ என அழைக்கப்படுகிறது.

கோடைகாலத்திலும் நீர் வற்றுவதில்லை. அது மட்டுமல்ல, இந்த ஓடையில் குளித்தாலும், அதன் நீரைப் பருகினாலும் நோய்கள் நீங்குகின்றன.

வள்ளலார் கரம்பட்ட தும் சாதாரண நீரோடை, சக்தி வாய்ந்த நீரோடை ஆகிவிட்டது.
பாடல்களில் வாழ்கிறார்!

வள்ளலார் உருவாக்கிய தீஞ்சுவை ஊற்று...

வள்ளலார் தமது வாழ்வின் நிகழ்வுகள் அத்தனையையும் பாடல் களாகப் பாடி இருக்கிறார்.
ஒரு சமயம் இறைவன் தன் துணைவியுடன் இரட்டைக் குதிரை பூட்டிய வண்டியில் வள்ளலார் இருக்குமிடத்துக்கு வந்து அருள் புரிந்ததையும், அப்போது தன்னைத் தேடிவந்தவர் யாரோ, எவரோ எனப் புரியாமல் வாசலருகிலேயே கதவின் தாழ்ப்பாளைப் பற்றிக்கொண்டு பயத்துடன் நின்று பார்த்ததையும் வள்ளலார் பாடல் வடிவில் கூறியுள்ளார். 

அந்தப் பாடல்;
எருதின் உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன் இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும் ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனை வருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே மணியே என் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே சுருதிமுடி அடிக்கணிந்த துரையேஎன் உளத்தே சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.

இதே போல அவர் இறுதியாக சித்திவளாகத்தில் இருந்த போது இறைவன் அவரை ஆட்கொண்டதையும் பாடலாகப் பாடியிருக்கிறார். 

அந்தப் பாடல்:
வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மாதவம்பன் னாட்புரிந்து மணிமாட நடுவே தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையினூடே திருவடிசேர்த் தருள்எனச் செப்பிவருந் திடவும் நானிருக்கும் குடிசையிலே வலிந்துநுழைந் தெனக்கே நல்லதிரு அருளமுதம் நல்கியதன் றியும்என் ஊனிருக்கும் குடிசையிலும் உவந்துநுழைந் தடியேன் உள்ளமெனும் சிறுகுடிசை யுள்ளும்நுழைந் தனையே.
ஒரு கேள்வியும் வள்ளலாரின் பதிலும்!

கேள்வி: மரம், புல், நெல் முதலான தாவரங்களும் உயிராகவே சொல்லப்படுகின்றனவே... அவற்றை இம்சை செய்து ஆகாரமாக உட்கொண்டால், உயிர்க்கொலை செய்து உண்பது போல்தானே ஆகும்?

வள்ளலாரின் பதில்: மரம், புல், நெல் முதலான தாவரங்களும் உயிர்கள்தான். ஆனால், அவ்வுயிர்கள் தோன்றும் வித்துகள் வெறும் சடங்களே.

அவ்வித்துகளை நாமே விதைத்து, உயிர் விளைவு செய்ய முடியும். அப்படி நாமே விளைவு செய்த அந்த உயிர்களைக் கொல்லாமல், அந்தத் தாவரங்களில் உயிரின்றி, உயிர் தோன்றுவதற்குத் தகுதியுள்ள சடங்களான வித்துகளையும் காய்களையும் கனிகளையும் பூக்களையும் கிழங்குகளையும் தழைகளையுமே ஆகாரமாகக் கொள்கிறோம். தாவரங்களை வேருடன் பிடுங்கி ஆகாரமாகக் கொள்வதில்லை.

வளர்ந்த தாவரங்களின் விதைகள், காய், கனிகள் முதலானவற்றைப் பறிக்கும்போது, மனிதர்களின் நகம், ரோமம் ஆகியவற்றை அகற்றும்போதும் துன்பம் உண்டாகாதது போல் தாவரங்களுக்கும் துன்பம் உண்டாவதில்லை.

மேலும், தாவர வர்க்கங்களுக்கு மனம் முதலியன வளராததால், அது உயிர்க்கொலையும் அல்ல; துன்பம் உண்டுபண்ணுவதும் அல்ல. எனவே, இது ஜீவகாருண்ய விரோதமாகாது.

சித்த மருத்துவர் வள்ளலார்!

பல மூலிகைகளின் குணங்களை அட்டவணையாக எழுதியிருக்கிறார். சஞ்சீவி மூலிகைகள் பலவற்றைப் பற்றிய குறிப்புகளை எழுதியிருக்கிறார். சஞ்சீவி மூலிகைகளின் துணைகொண்டு இறந்தவர்களை மறுபடி உயிர்ப்பிப்பது எப்படி என்று எழுதியிருக்கிறார். அங்கங்கள் துண்டுகளாக வெட்டுப்பட்டால், அவற்றை மீண்டும் இணைக்க எந்த மூலிகையை உபயோகிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

வலுவான, திடமான சரீரத்துக்கு அவர் கூறும் மருத்துவக் குறிப்பு இதோ:
கெட்டி மிளகு அரைகிலோ எடுத்துக்கொண்டு, அதைப் பேயன்வாழையின் கிழங்குச் சாற்றில் மூன்று நாள் ஊறவைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இரவில் ஊறவைத்துப் பகலில் நிழலில் காயவைக்க வேண்டும்.

வள்ளலார் நினைவிடம் மருதூர்...

இந்த முறையைப் பின்பற்றி, வாழைக் கிழங்கின் சாறில் ஊறவைத்து, நிழலில் காயவைத்த மிளகை, அதன்பின் இளநீரில் மூன்று நாள், கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் மூன்று நாள், பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றில் மூன்று நாள், பசுங்கோமயத்தில் மூன்று நாள், பசும்பாலில் மூன்று நாள் எனத் தனித்தனியாக இரவில் ஊறவைத்து, பகலில் நிழலில் காயவைத்து, தேய்த்துப் புடைத்து எடுத்து வைத்துக்கொண்டு, தினம் காலையில் ஐந்து மிளகுகளை உட்கொண்டால் வலுவான, திடமான சரீரம் அமையும்.

வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை

1. சூரியோதயத்துக்கு முன்னால் தூக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளைத் தியானம் செய்யவேண்டும்.

2. இயற்கைக் கடன்களைக் கழித்தபின் செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள் இவற்றில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கிற அசுத்தங்களையும் கை, கால் முதலிய உறுப்புகளில் உள்ள அழுக்குகளையும் வெந்நீரால் தேய்த்துச் சுத்தமாகக் கழுவ வேண்டும். பின் வேலங்குச்சி, ஆலம் விழுது கொண்டு பல் தேய்த்து, அதன்பின் கரிசலாங்கண்ணி கீரைத் தூள் கொண்டு, உள்ளே சிறிது சாறு போகும்படி பல்தேய்த்து வாய் கழுவ வேண்டும்.

3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கையி 3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கையிலை சேர்ந்த கலவை கால்பங்கு, சீரகம் கால்பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடி யாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, அந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்துத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.
அத்துடன் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இரண்டு டம்ளர் திரவம், ஒரு டம்ளராகச் சுண்டியபின், அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.

4. காலை வெயில் உடல்மேல் படாதவண்ணம் மேற்சட்டை அணியவேண்டும்.

5. ஒன்றரை மணி நேரம் கழித்து, வெயிலில் மிதமான உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். பின், இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும். சற்று நேரம் கடவுளை வணங்க வேண்டும்.

6. பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது அள்ளிப் போட்டுக் கொள்ளக்கூடாது. மிக நிதானமாகவும் (சோம்பேறித்தனத்துடன்) உண்ணக்கூடாது. சாப்பிட்டபின் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த வேண்டும்.

7. கிழங்கு வகைகளை உண்ணக்கூடாது. ஆனால், கருணைக்கிழங்கை உண்ணலாம். பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். பதார்த்தங்களில் புளி, மிளகாய் ஆகியவற்றைக் குறைவாகவும் மிளகு, சீரகம் ஆகியவற்றை அதிகமாகவும் சேர்க்க வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பைக் குறைவாகச் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. தாளிப்பதற்கு நல்ல எண்ணெய் உபயோகிக்கலாம். அல்லது பசு வெண்ணெயால் தாளிக்கலாம்.

8. கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய், கொத்தவரைக்காய் இவற்றை கறி செய்வதற்கு உபயோகப்படுத்தலாம். முருங்கை, கத்தரி, பேயன் வாழைக்காய் ஆகியவற்றை அடுத்தடுத்து கறி செய்யலாம். மற்றவற்றை எப்போதாவது பயன்படுத்த வேண்டும்.

9. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சித்திரான்னங்களை அடிக்கடி சாப்பிடக்கூடாது. எப்போதாவது சாப்பிடலாம்.

10. புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.

11. பருப்பு வகைகளில் துவரம்பருப்பை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். மற்ற பருப்பு வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாம்.

12. விருந்து உணவு என்றாலும், சற்றுக் குறைவாகவே புசிக்க வேண்டும்.

13. வெந்நீரையே குடிக்கவேண்டும்.

14. மாலை வெயில் உடலில் படுமாறு சற்று உலாவ வேண்டும். காற்று அதிகமாக இருந்தால் உலாவக் கூடாது. கடும் வெயில், பனி, மழை இவை தேகத்தில் படுமாறு உலவக்கூடாது.

15. இரவின் தொடக்கத்தில் முகம், கை, கால் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் தியானம் செய்யலாம். மந்திரங்கள் சொல்லிக் கடவுளை வணங்கலாம். புத்தகங்களைப் படிக்கலாம். வீட்டு விவகாரங்களைப் பற்றிப் பேசலாம்.

16. பிறகு இரவு உணவு. பகல் உட்கொண்டதில் அரைப்பங்கு அளவே இரவு உண்ண வேண்டும்.

17. இரவில் கீரை, தயிர் மற்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவு வகைகளைச் சேர்க்கக்கூடாது. இரவில் சூடான பதார்த்தங்களையே உண்ண வேண்டும்.

18. இரவுச் சாப்பாடு முடிந்து இரண்டு மணி நேரத்துக்குப் பின் பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.

19. பெண்களுடன் உறவு கொள்ளும் நாட்களில், உறவு செய்வதற்கு அரைமணி நேரம் முன்னிருந்து உடலுறவைப் பற்றி எண்ணாமல், அதன்பின் உறவு கொள்ளவேண்டும். ஒருமுறைக்கு மேல் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது | ஒரே இரவில்.

20. உடலுறவு முடிந்தபின் உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு கடவுளைத் தியானம் செய்து, பின் உறங்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக்கொள்வது அதமம். எட்டு தினங்களுக்கு ஒருமுறை என்றால் மத்திமம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என்றால் உத்தமம்.

21. படுக்கும்போது இடதுகைப் பக்கமாகவே உறங்க வேண்டும். அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்குமேல் உறங்கக்கூடாது.

22. கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் போன்றவை கூடாது.

23. உரத்துப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்குப் போடுதல், சண்டையிடுதல் போன்றவை கூடாது.

24. பதற்றம் மிகுந்தால் பிராணவாயு அதிகமாகச் செலவாகும். எனவே, பதற்றம் கூடாது.

25. நான்கு நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் குளிக்க வேண்டும். அல்லது, வாரத்துக்கு ஒருமுறையாவது காய்ச்சிய நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு முழுக வேண்டும்.

26. புகை, கஞ்சா, கள், சாராயம் போன்றவை கூடாது.

27. மூன்று மாதத்துக்கு ஒருமுறை அல்லது ஆறு வாரத்துக்கு ஒருமுறை பேதிக்கான மருந்தை உட்கொள்ள வேண்டும்.

வள்ளலார் வழங்கியுள்ள பிரார்த்தனை

ஒருவன் பிரார்த்தனை செய்யும்போது அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் தனி ஒரு மனிதருக்கு வேண்டியவை எல்லாம் அடங்கிவிடுகின்றன. மனிதர்கள் செய்யவேண்டிய கடவுள் பிரார்த்தனை இதுதான்:

"பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட் ஜோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய். நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே..."
பொன்னான மண்!

பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், சென்னையில் ஒரு பெரும் பணக்காரர் செம்பைத் தங்கமாக்கும் வித்தையைக் கற்க முற்பட்டு. அம்முயற்சியில் தமது பெருஞ்செல்வம் அனைத்தையும் இழந்தார்.

ஒரு நாள் அவருடைய வீட்டைக் கடந்து ராமலிங்க அடிகளார். சென்றார். அவரைக் கண்ட அந்த நபர் ஓடோடிச் சென்று, அவர்தம் கால்களில் விழுந்து, தாம் ஏழையான கதையையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதார். தமக்கு எப்படியாவது ரசவாத வித்தையைக் கற்றுக் கொடுக்குமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். வள்ளலார் ஒரு கண்ணாடி தம்ளரில் நிறைய தண்ணீர் கொண்டுவருமாறு கேட்டார். தம்ளரில் தண்ணீர் வந்ததும், அந்தத் தண்ணீரில் கொஞ்சம் தெரு மணலை எடுத்துப்போட்டார். அந்த மணல் தண்ணீருக்குள் விழுந்தது. தம்ளரின் அடியில் சேரும்போது பொன்னாக மாறியிருந்தது. அந்த வித்தை இவ்வளவு எளிதாக இருப்பதைக் கண்ட மாஜி செல்வந்தர், அந்த வித்தையைத் தனக்குக் கற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டார்.

வள்ளலார் சொன்னார்: இந்த ரசவாத வித்தை மிக மிகச் சுலபம்தான். ஆனால் ஒன்றே ஒன்று, பொன்னாசை அறவே அற்றவர்களுக்கு மட்டுமே இந்த வித்தை பலிக்கும்!

ஆக்கம்:கவியோகி வேதம் நன்றி: விகடன்.

நீங்கள் இதுவரையில் சாப்பிடாத ஒரு உணவு பதார்த்தம் உங்கள் முன் இருக்கிறது. அதன் ருசியை அனுபவிக்க வேண்டும், எப்படியாவது அதை சாப்பிட்டுவிட வேண்டும் என்ற ஆசை உங்கள் உள்மனதிற்குள் எழும்புகிறது. இது இயல்பு. அந்த பதார்த்தத்தை நீங்கள் வாயில் போட்டு உண்ணும் வரையில் அதன் ருசி உங்களுக்குத் தெரியாது. அதுவரையில் அதன் மீதிருக்கும் ஆசை கூடிக்கொண்டு போகுமே தவிர சற்றும் குறையாது. அதேபோல் இறைவனும் நமக்கு பிடித்தமானவராகவே இருக்கிறார். அவரை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதால் மட்டும் நாம் அவரை அடைந்துவிட முடியாது. அவரை நாம் மனதிற்குள் வைத்து, அனுபவித்து மகிழ்ந்தால்தான் இது சாத்தியமாகும். எனவே, இறைவனை அடையவேண்டும் என்ற ஒரு உத்வேகத்துடன் செயல்படுங்கள். அவர் மீது வைத்திருக்கும் ஆசையை மட்டும் விட்டுவிடாதீர்கள்.

இறைவன் உருவமாக இல்லாமல், ஒளி வடிவில்தான் அருள் செய்கிறான். மேல் உலகம், கீழ் உலகம், அளவிடமுடியாத அண்டம் என மூன்று உலகத்திலும் நிறைந்திருக்கும் அவன் அசைந்தாடுகின்றஒளியாகிய ஜோதியில் ஐக்கியமாகி இருக்கிறான். இந்த உண்மையை தெரிந்துகொண்டு அந்த ஜோதியையே பரம பிதாவாக எண்ணி வழிபடுங்கள். தன்னை ஜோதி வடிவினனாக வழிபடுவதைத்தான் இறைவனும் விரும்புகிறான். — வள்ளலார் தைப்பூசம்வள்ளலார்

சித்தியடைந்த நாள்

கடலூர் அருகிலுள்ள திருமருதூர் கிராமத்தில் வசித்த ராமையா பிள்ளையின் ஆறாவது மனைவி சின்னம்மை. தனது முந்தைய ஐந்து மனைவிகளும் தொடர்ந்து இறந்ததால் ஆறாவதாக சின்னம்மையை மணம் முடித்திருந்தார். இவர்களுக்கு சபாபதி, பரசுராமன், சுந்தரம்மாள், உண்ணாமலை என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தனர்.

ராமையா பிள்ளையும், சின்னம்மையும் சிறந்த சிவபக்தர்கள். தினமும் வீட்டிற்கு ஒரு சிவனடியாரை அழைத்து வந்து அவருக்கு அன்னதானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒருநாள் மதியவேளையில் சிவனடியார் ஒருவர் புலித்தோல் உடுத்தி ராமையா பிள்ளையின் வீட்டிற்கு வந்தார். அப்போது ராமையாபிள்ளை வெளியில் சென்றிருந்தார். சின்னம்மையார், அவரை வீட்டிற்குள் அழைத்து வந்து, விருந்து படைத்தார். வயிறும், மனமும் நிரம்பப் பெற்ற சிவனடியார் சின்னம்மையிடம், ""உனக்கு ஒரு புதல்வன் பிறப்பான். தெய்வ மகனான அவன் இறைவனுக்கு நிகரானவனாக இருப்பான் என்று வாழ்த்திவிட்டு விபூதியும் தந்து சென்றுவிட்டார்.

விபூதியை நெற்றியில் வைத்து, சிறிதுவாயிலும் போட்ட சின்னம்மை, சற்றுநேரத்தில் மயக்கமடைந்தார். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய ராமையாபிள்ளை, மனைவி மயக்கமடைந்திருந்ததை கண்டு அதிர்ந்தார். அவரை எழுப்பி, "என்ன நடந்தது?' என்று விசாரித்தார். சிவனடியார் வந்த விஷயத்தையும், அவர் தனக்கு குழந்தை பிறக்கும் என்று சொன்னதையும் மிரட்சியுடனும், சந்தோஷத்துடனும் சொன்னார். ராமையா பிள்ளையும் மகிழ்ந்தார்.

சிலநாட்கள் கழித்து சின்னம்மையின் வயிற்றில் இறைவன் ஜோதி வடிவமாக புகுந்தார். பத்து மாதங்கள் கருவை சுமந்த சின்னம்மை, 1823, புரட்டாசி 21 (அக்டோபர் 5) ஞாயிற்றுக்கிழமையன்று, சித்திரை நட்சத்திரத்தில் ஒரு தெய்வத்திருமகனை பெற்றெடுத்தார்.
அக்குழந்தை பிறந்ததால் திருமருதூர் கிராமமே அன்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தது. ராமையாபிள்ளையும், அவர் மனைவி சின்னம்மையும் மகிழ்ச்சிக் கடலின் எல்லைக்கே சென்றனர். குழந்தை பிறந்த நேரத்தில் பசுமையுடன் இருந்த அவ்வூர், மேலும் செழிப்பானது.

அக்குழந்தைக்கு "ராமலிங்கம்' என்று பெயர் வைத்தனர். ராமலிங்கத்திற்கு ஐந்து வயதானபோது, அவரது பெற்றோர் அவரைக் கூட்டிக்கொண்டு சிதம்பரம் தில்லையம்பலம் கோயிலுக்கு சென்றனர். கோயிலில் நடராஜருக்கு பூஜைகள் நடந்துகொண்டிருந்தது. மக்கள் நடராஜரின் அழகில் லயித்து அவரை வணங்கிக் கொண்டிருந்தனர். கோயில் முழுதும் நிசப்தமாக இருக்க, அரங்கமே அதிரும் வகையில் ஒரு சிரிப்பொலி கேட்டது. அனைவரும் சிரிப்பு சத்தம் கேட்ட திசையைப் பார்க்க அங்கு சிறுவனாக இருந்த ராமலிங்கம், நடராஜரைப் பார்த்து பலமாக சிரித்துக் கொண்டிருந்தார். நடராஜரைக் கண்டு சிரிக்கும் இக்குழந்தை "ஞானக்குழந்தை' என அங்கிருந்த பக்தர்களில் சிலர் கூறினர். சிலர் அவரைத் தொட்டு வணங்கிவிட்டுச் சென்றனர்.

சிதம்பரம் கோயிலுக்கு சென்று வந்த சிலநாட்களிலேயே ராமையா பிள்ளை இறந்து போனார். ராமலிங்கத்தின் குடும்பம் வறுமையில் வாடியது. குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்ட சின்னம்மை, அவர்களை அழைத்துக் கொண்டு சென்னை சென்றார். அங்கு வித்வான் சபாபதி முதலியாரிடம், தனது மூத்த மகன் சபாபதிக்கு கல்வி கற்பிக்கும்படி கேட்டுக்கொண்டாள். சபாபதி சிறந்த தமிழாசிரியர். அவரிடம் பயின்ற சபாபதி, குறுகிய காலத்திலேயே கற்றுத் தேர்ந்து, புராண விரிவுரையாளரானார். குடும்பம் வறுமையில் இருந்து சற்று மீண்டது.

சபாபதி, தன் தம்பி ராமலிங்கத்தை பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்கவேண்டும் விரும்பினார். ஆனால், ராமலிங்கத்திற்கோ கல்வியில் நாட்டம் செல்லவில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான வித்வான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் சபாபதி. ராமலிங்கம் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். 

ஒருநாள் ராமலிங்கத்தைக் கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் சபாபதி முதலியார். முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த ராமலிங்கம், "ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும், என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை ராமலிங்கம் பாடுவதைக் கண்ட சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார்.

ராமலிங்கத்தின் அண்ணன் சபாபதியிடம், "உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.

தன் தம்பி மேல் கோபம் கொண்ட சபாபதி, வீட்டில் அவருக்கு உணவு கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால், அவர் மீது அளவிலாத அன்பு கொண்டிருந்த சபாபதியின் மனைவி மறைமுகமாக அவருக்கு உணவு கொடுப்பார். இதையறிந்த சபாபதி, ராமலிங்கத்தை வீட்டைவிட்டு அனுப்பி விட்டார். அவர் கந்தகோட்டம் முருகன் கோயிலுக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து முருகனின் புகழ் பாடி அவரை வழிபட்டு வந்தார். இதனிடையே தன் மனைவி வற்புறுத்தியதால் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார் சபாபதி.

அண்ணனிடம் தான் ஒழுங்காக படிப்பதாக வாக்குறுதியளித்தார் ராமலிங்கம். அவருக்கென தனியே வீட்டில் ஒரு அறையை ஒதுக்கித் தந்தார் சபாபதி. அந்த அறையில் ராமலிங்கம் ஒரு கண்ணாடியை வைத்துக்கொண்டு, அதற்கு மாலை சூடி, வணங்கியபடி இருந்தார்.இதைக் கவனித்த சபாபதி தன் தம்பியின் இறைபக்தியையும், ஆன்மிக நாட்டத்தையும் அறிந்து அதன் பின்பு ராமலிங்கத்தை கண்டிக்கவில்லை. இப்படியே காலம் சென்றது. ஒருமுறை சபாபதி விழா ஒன்றில் பெரியபுராண சொற்பொழிவு நிகழ்த்த ஒப்புக்கொண்டிருந்தார். விழா நடந்த தினத்தன்று அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், சொற் பொழிவிற்கு செல்ல முடியவில்லை. தனக்குப் பதிலாக தம்பியை அனுப்பினார் சபாபதி. மகிழ்ச்சியுடன் சென்ற ராமலிங்கம், அதுவரையில் இல்லாத வகையில் அருமையாக சொற்பொழிவாற்றினார். அவரது பேச்சாற்றல் பற்றி கேள்விப்பட்டு, சபாபதி வியந்துபோனார். அவருக்கு மணம் முடிக்க விரும்பினார்.

ராமலிங்கமோ, தான் இறைப்பணி செய்வதிலேயே விருப்பம் கொண்டிருப்பதாகவும், திருமணம் வேண்டாம் எனவும் மறுத்தார். ஆனாலும் சபாபதியும், குடும்பத்தினரும் அவரை விடவில்லை. ராமலிங்கத்தின் சகோதரி உண்ணாமலை, தன் மகள் தனக்கோட்டியை ராமலிங்கத்திற்கு மணம் முடித்துக் கொடுத்தார். அவரும் இறைபக்தி மிக்கவராக இருந்தார். கணவன், மனைவி இருவரும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல், இறைசிந்தனையிலேயே இருந்தனர். இருவரும் தனித்திருக்கும் வேளையில் திருவாசகம், பெரியபுராணம் என சிவனைப் பற்றி பேசிக் கொண்டிருப்பர்.

இப்படியே ராமலிங்கத்தின் வாழ்க்கை கடந்தது. ஒருமுறை வயலில் விளைந்திருந்த நெல் வாடியிருப்பதைக் கண்டு வருந்திப் பாடினார். இதனால் மக்கள் அவரை தங்களை வாழ்விக்க வந்த வள்ளலாகக் கருதி, "வள்ளலார்' என்ற அடைமொழி தந்தனர். அவர் மக்களுக்கு நற்சிந்தனைகளை போதித்து வந்தார். அவருக்கு 44 வயதாக இருந்தபோது, ஒரு அம்மன் கோயிலில் சொற்பொழிவிற்காக சென்றிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை ஒரு பாடல் பாடும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது, அம்மனுக்கு பலி கொடுப்பதற்காக வைத்திருந்த ஆடு, கோழிகளை பலியிடாமல் இருந்தால் தான் பாடுவதாக சொன்னார் வள்ளலார். அவற்றை பலியிடுவதை நிறுத்தினால் தெய்வ குற்றம் என்று சொல்லி தங்கள் பயத்தை வெளிப்படுத்தினர் மக்கள். அவர்களுக்கு "ஜீவகாருண்ய' உண்மைகளை உணர்த்தி பேசினார் வள்ளலார். இப்படி கருணையின் இருப்பிடமாகவே திகழ்ந்த வள்ளலார், வடலூரில் 1872ம் ஆண்டில் சத்தியஞான சபை என்ற அமைப்பை நிறுவினார்.

1874ல் தை மாதம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தில் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவிளாக மாளிகைக்குள் நள்ளிரவு 12 மணிக்குச் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment