Saturday 28 April 2012

டோனி சொன்ன ஓர் உண்மைச் சம்பவம்

மகேந்திர சிங் டோனி, ஜூலை 7, 1981-ஆம் ஆண்டு ராஞ்சியில் பிறந்தார். ஏழ்மையான குடும்...பம். இளம் வயதில் பிடித்த விளையாட்டு கால்பந்து. கூடவே பேட்மின்டன். கால்பந்தில் டோனி ஒரு கோல் கீப்பர். ஒருநாள், கிரிக்கெட் போட்டி அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட்டது. டோனியை கீப்பிங் செய்யச் சொன்னார்கள். அப்போது தொடங்கியது கிரிக்கெட் பயணம்.



இளம் வயதில், காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் பால் குடிக்கும் பழக்கம் உள்ளவர் டோனி. மலைகள் நிறைந்த பகுதியில் வீடு இருந்ததால், நண்பர்களோடு மலையில் ஏறி இறங்கி விளையாடியது, தன் உடல் வலிமைக்கான காரணம் என்பார்.



பீகார் அணியில் ஆடிக்கொண்டு இருந்தார். பல போட்டிகளில் டோனி சதம் அடித்தும் அணி தோற்றுக்கொண்டே இருந்தது. அதனால், இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை. அந்தச் சமயத்தில், இந்திய அளவில் இளம் திறமைசாலிகளைக் கண்டறியும் வேலையை பி.சி.சி.ஐ செய்தது. அதில் தேர்வாகி, இந்திய ஏ அணி சார்பில் கென்யா, ஜிம்பாப்வே அணிகளோடு விளையாடி சதம் அடித்தார். அப்போதைய கேப்டன் கங்குலியால், வங்க தேசத்துக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார். அதில், ரன் சேர்க்காமல் ரன் அவுட் ஆனார்.

பிறகு, பாகிஸ்தான் அணிக்கு எதிராக 148 ரன்கள் அடித்து, நம்பிக்கை தந்தார் டோனி. இலங்கைக்கு எதிராக 183 ரன்கள் அடித்து, விக்கெட் கீப்பர் ஒருவரின் அதிகபட்சம் என்கிற உலக சாதனையைப் படைத்தார். பிறகு, அயர்லாந்து தொடரில் துணை கேப்டன். ட்வென்டி-20 உலகக் கோப்பைக்கு கேப்டன் எனப் பொறுப்புகள் வந்து சேர்ந்தன. அதிரடி மற்றும் வித்தியாசமான முடிவுகளால் கோப்பைகளைப் பெற்றுத்தந்தார். 


லதா மங்கேஷ்கரின் பாடல்கள் பிடிக்கும். சச்சின் மற்றும் கில்கிறிஸ்ட் இவருக்குப் பிடித்த விளையாட்டு வீரர்கள். வீடியோ கேம் வெறியர். புதிய பைக்குகள் சேகரிப்பதில் ஆசை அதிகம். 

சச்சினின் இறுதி உலகக் கோப்பை என அனைவரும் சொன்ன போட்டியில், இந்தியா மூன்று விக்கெட் இழந்து திணறியது. டோனி களம் இறங்கி 96 ரன்கள் அடித்தார். ‘நான் பார்த்த கேப்டன்களில் டோனியே தலை சிறந்தவர் எனப் புகழ்ந்தார் சச்சின். 

உலகக் கோப்பை வென்றதும், டோனி சொன்ன ஓர் உண்மைச் சம்பவம் இது. 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது டோனி டிக்கெட் கலெக்டர் ஆக கரக்பூரில் வேலை பார்த்து வந்தார். அப்போது, பயணிகளிடம் அடிக்கடி இவர் ஸ்கோர் கேட்பதைப் பார்த்து, ‘ஆமாம்... இவர்தான் உலகக் கோப்பையை ஜெயித்துக் கொடுக்கப் போகிறார்’ என நக்கலாக ஒருவர் சொன்னார். அந்தக் கமென்ட்தான் சாதாரணமான என்னை இவ்வளவு தூரம் உத்வேகப்படுத்தியது என்றார். 

ஆடுகளத்தில் கோபப்படும் டோனியைப் பார்க்க முடியாது. எவ்வளவு சிக்கலான நிலையிலும் டோனி அவ்வளவு அழகாகப் புன்னகைப்பார். வறுமையால், இளம் வயதில் அம்மா உணவு தயாரிக்க நேரம் அதிகம் ஆகும். அப்போது முதலே, இந்தப் பொறுமை வந்துவிட்டது என சிம்பிளாகச் சொல்வார்.

ஜார்கண்ட் அரசாங்கம், பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க ‘பள்ளிக்குச் செல்வோம் நாம்’ என்கிற விளம்பரத்தில் டோனியை நடிக்கக் கூப்பிட்டபோது, இலவசமாக நடித்தார். தன் மனைவியின் பெயரால் சாக்க்ஷி அறக்கட்டளை உருவாக்கி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள், ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உதவுகிறார். 

உச்சபட்சத் தன்னம்பிக்கைக்காரர். உலகக் கோப்பையை வென்றதும், உங்கள் அடுத்த இலக்கு என்ன எனக் கேட்டதும், ‘‘ஐ.பி.எல், சாம்பியன் லீக், உலகக் கோப்பை ஆகியவற்றை மீண்டும் ஒரு முறை வெல்ல வேண்டும். முடியாதா என்ன?” என்றார். அதுதான் டோனி!

நன்றி : சுட்டி விகடன் 

No comments:

Post a Comment