Friday 27 April 2012

ஆனைக்கொரு காலம் ( பூனைக்கு?)

ஆனைக்கொரு காலம் ( பூனைக்கு?) 

"ஆனைக்கு ஒரு காலம் வந்தால் 
பூனைக்கும் ஒரு காலம் வரும்."

என்றொரு பழமொழி இன்றும் வழக்கில் உண்டு. இதைப்பற்றி விரிவாக ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். 




தற்போதைய விளக்கங்கள்:

இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்:

ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால், பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும்.

இக் கருத்து சரியானதா என்று பார்ப்போம். இங்கே பெரியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் போன்றவற்றால் பெருமை உடையவர்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். சிறியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் ஆகிய எதுவுமே கொஞ்சம்கூட இல்லாத மிகச் சாதாரண நிலையில் உள்ளவர்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம். மொத்தத்தில் இப்பழமொழி உணர்த்த வரும் கருத்துப்படி பார்த்தால் நல்லகாலம் என்பது அனைத்து வகையான மக்களுக்கும் வாழ்க்கையில் ஒரு கட்டத்திலாவது வரவே செய்யும் என்பதே.

ஆனை போல பெரியவர்களானாலும் சரி, பூனை போல சிறியவர்களானாலும் சரி, நன்மை மட்டுமல்ல தீமையும் அனைவருக்கும் அவரவர் வினைப்படிதான் நடக்கும்.
இதைத்தான் ' தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று புறநானூற்றிலேயே கூறிவிட்டனர். ஆக, இக் கருத்து ஓரளவுக்குத் தான் சரியாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இக்கருத்தினை நேரடியாகக் கூறாமல் ஆனையினையும் பூனையினையும் பயன்படுத்திக் கூறி இருப்பதன் தேவை என்ன?. இக்கருத்து உருவான பின்புலம் என்ன? இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

அதற்கு முன்னர், மேற்காணும் கருத்தைத்தவிர, இணையத்தில் காணப்பட்ட வேறு சில கருத்துக்களைப் பற்றிக் காணலாம்.

கருத்து 2:

இக் கருத்தினை முன்மொழிவோர், ஆனை என்பதனை ஆநெய் என்பதின் திரிபு என்றும் பூனை என்பதனை பூநெய் என்பதின் திரிபு என்றும் கொண்டு, இப்பழமொழியை

ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால்
பூநெய்க்கும் ஒரு காலம் வரும்.

என்று மாற்றிக் கொண்டு கீழ்க்கண்டவாறு பொருள் கூறுகின்றனர்.

ஆநெய் ஆகிய பசுநெய்யினை ஒரு காலத்தில் உண்டால் பூநெய் ஆகிய தேனையும் ஒரு காலத்தில் உண்ணவேண்டி வரும்.

அதாவது, பசுநெய்யினை உணவுடன் சேர்த்து அதிகம் உண்டால் அதனால் உண்டாகும் கொழுப்பினைக் குறைக்க அதன்பின்னர் தேனை உண்ண வேண்டி வரும் என்று விளக்கம் கூறுகின்றனர்.

இக் கருத்து ஏற்புடையதாகத் தோன்றவில்லை. ஏனென்றால், பசுநெய் மட்டுமல்ல, கொழுப்பை உண்டாக்கும் பல எண்ணைப் பலகாரங்களையும் மாமிச உணவுகளையும் நாம் (கொழுப்பு என) அறிந்தே தான் உண்கிறோம். இருந்தாலும் அதனைக் குறைப்பதற்கு நாம் தேனையா உட்கொள்கிறோம்?. இல்லையே. மேலும் நெய்யும் தேனும் உணவுப்பொருட்களே. இதில் எதை அதிகம் உண்டாலும் சிக்கல் வரும். அதனால் தானே ' அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு' என்று கூறினர் பெரியோர். எனவே இப்பழமொழி இங்கே உணவுப் பொருட்களைக் குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது.

கருத்து 3:

கருத்து 2 னைப் போலவே இதுவும் ஆநெய், பூநெய்யுடன் தொடர்புடையதே. ஆனால் சற்று மாறுபடுவது; ஆன்மீகத்துடன் தொடர்புடையது. இக் கருத்தின் படி,

இறைவனுக்கு முதலில் பசுநெய்யால் முழுக்காட்டப்படும். அதன்பின்னர் தேனால் முழுக்காட்டப்படும்.

இக்கருத்தும் பொருத்தமானதாகத் தெரியவில்லை. ஏனென்றால் இறைவனுக்கு செய்யப்படும் முழுக்காட்டுதலைப் பழமொழியாகச் சொல்ல வேண்டிய தேவை ஒன்றுமில்லை. மேலும் இறைவனுக்குப் பலவகையான முழுக்காட்டுதல்கள் உண்டு. எனவே இப்பழமொழி இங்கே இறைவனுடன் தொடர்புடையதாய் வரவில்லை என்பது தெளிவு.

இனி, முதலாம் கருத்துக்கு அரணாக உள்ள இப் பழமொழியின் பின்புலம் பற்றிக் காண்போம்.

பழமொழியின் பின்புலம்:

பழமொழிகளிலே பலவகைகள் உண்டு. பழமொழிகள் கூறுகின்ற கருத்துக்களின் அடிப்படையில் அவற்றை மருத்துவப் பழமொழி, வேளாண்மைப் பழமொழி, இலக்கியப் பழமொழி, வரலாற்றுப்பழமொழி என பலவகைகளாகப் பிரிக்கலாம்.

நாம் தலைப்பில் கண்ட பழமொழியானது ஒரு வேளாண்மைப் பழமொழி ஆகும். வேளாண்மையே மக்களின் அடிப்படைத் தொழில் என்பதால் இது தொடர்பாக பல பழமொழிகள் வழக்கில் எழுந்தன. அவற்றில் ஒரு சில பழமொழிகள் மட்டும் சான்றாகக் கீழே தரப்பட்டுள்ளன. (நன்றி: விக்கிகோட்.ஆர்க்)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சாது.
அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்.
அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
ஆடிப் பட்டம் தேடி விதை.

மேலே கண்டதைப் போல, வேளாண்மைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பழமொழிகள் பலவற்றுள்ளும், நமது தலைப்புப் பழமொழிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இப்பழமொழியானது வேளாண்மைத் தொழிலில் பயன்படுத்தப்படும் விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

வேளாண்மைத் தொழிலில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் விலங்கு 'எருது' என்பது அனைவருக்கும் தெரியும். உழவுமாடாகவும் வண்டி மாடாகவும் பெரிதும் பயன்படுவது எருதே ஆகும். பல நேரங்களில் விளைந்த நெற்கதிர்களை கதிரடிக்கவும் இவற்றைப் பயன்படுத்துவர். ஆனால், விளைச்சல் அதிகமாக இருந்தால், யானைகளையும் கதிரடிக்கப் பயன்படுத்துவர். இதன் அடிப்படையில் எழுந்தது தான் கீழ்க்காணும் பாடல்:

" மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
ஆனை கட்டிப் போரடிக்கும்
அழகான தென்மதுரை."

மிக அழகான இப் பாடலை இயற்றியது யார் எனத் தெரியவில்லை. ஆனால், தென்மதுரையில் உழவுத் தொழில் எவ்வளவு செழித்திருந்தது என்பது மட்டும் இப்பாடலின் மூலம் நன்கு தெரிகிறது.

இப்படி யானைகளைக் கொண்டு கதிரடித்த பின்னர், பிரிந்த நெல்மணிகளைத் தனியாக எடுத்துத் தானியக் கிடங்குகளில் சேமித்து வைத்திருப்பர். இப்போது தான் சிக்கல் துவங்குகிறது. சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த நெல்மணிகளைக் குறிவைத்து எலிகளின் பட்டாளம் படையெடுக்கத் துவங்குகின்றது. ஒவ்வொரு எலியும் தனக்குத் தேவையானதை விட ஐந்து மடங்கு தானியத்தை அள்ளிக் கொண்டு செல்லுமாம். இதனடிப்படையில் தான்,

"அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி"

என்ற பழமொழியே எழுந்தது எனலாம்.

கூட்டம் கூட்டமாக இவை புகுந்து நெல்மணிகளைத் திருடிக் கொண்டு செல்வதை அப்படியே விட்டுவிட்டால், கிடங்கையே காலி செய்து விடும். எனவே இந்த எலிகளைக் கூண்டோடு ஒழிக்க, பூனைகளைக் கொண்டுவந்து தானியக் கிடங்குக்குள் வைப்பர். பூனைகளும் கிடங்கிற்குள் வருகின்ற எலிகளை வேட்டையாடித் தின்றுவிடும்.

இவ்வாறாக கதிரடிக்கும் காலத்தில் யானையின் உதவியும் சேமிக்கும் காலத்தில் பூனையின் உதவியும் மனிதருக்குத் தேவைப்பட்டது. இதைத்தான்,

யானைக்கொரு காலம் வந்தால்
பூனைக்குமொரு காலம் வரும்.

என்று கூறிச் சென்றுள்ளனர் நம் முன்னோர். இப் பழமொழியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத செய்தி என்னவென்றால்:

மிகப் பெரிய யானைகள் மட்டுமே பயன் தருபவை அல்ல.
மிகச் சிறிய பூனைகளும் தான். எனவே உருவு கண்டு எள்ளாமை வேண்டாம்.! (

நன்றி: திருவள்ளுவர்)

No comments:

Post a Comment