Wednesday 9 May 2012

திருமணமான பெண்கள் சீதை போல வாழ வேண்டும்... மும்பை உயர் நீதிமன்றம்..!!!


திருமணமான பெண்கள் சீதையை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். சீதையைப் போல வாழ வேண்டும் என்று பாம்பே உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஒருவர், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். தனக்கு போர்ட்பிளேருக்குப் பணிமாற்றம் ஆகியுள்ளதாகவும், ஆனால் தன்னுடன் வந்து வசிக்க மனைவி மறுத்து வருவதாகவும் அவர் காரணம் கூறியுள்ளார்.

இந்தத் தம்பதிக்கு 2000மாவது ஆண்டு திருமணமானது. அந்தப் பெண் மும்பையைச் சேர்ந்தவர். அவரது கணவர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். திருமணமானதும் பணி நிமித்தமாக கப்பலிலேயே இருந்துள்ளார் அப்பெண்ணின் கணவர். அப்பெண் மும்பையிலேயே தங்கியிருந்தார்.

2005ம் ஆண்டு போர்ட் பிளேர் துறைமுகத்திற்கு கணவர் மாற்றப்பட்டார். இதையடுத்து தன்னுடன் வந்து வசிக்குமாறு அவர்தனது மனைவியை அழைத்தார். ஆனால் மனைவி வர மறுத்து விட்டார். இந்தத் தம்பதிக்கு ஒன்பது வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில்தான் கணவர் விவாகரத்து கோரியுள்ளார்.

இந்த வழக்கு பாம்பே உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.மஜூம்தார் மற்றும் அனூப் மோத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில்,சீதாப் பிராட்டி போல வாழ ஒவ்வொரு திருமணமான பெண்ணும் முயல வேண்டும். கணவர்தான் எல்லாமே என்று வாழ்ந்தவர் சீதை. தனது கணவர் ராமரின் அடியொற்றி அவர் பின்னாலேயே சென்று காட்டில் 14 வருடங்கள் வாழ்ந்தவர். பல சோதனைகளைச் சந்தித்தபோதும் கணவரை மதித்தவர்.

உங்கள் இருவருக்கும் பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்காவாவது நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும். எனவே மீண்டும் சேர்ந்து வாழ்வது குறித்து யோசியுங்கள் என்றனர்.

இதையடுத்து தான் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதற்குத் தயங்கவில்லை என்றும், என்னுடன் வந்து எனது மனைவி வாழ்ந்தால் போதும் என்றும் கூறினார். இருப்பினும் அவருடைய மனைவி எந்தவிதமான சமசரசத்திற்கும் இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

No comments:

Post a Comment